Sunday, February 17, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 931





பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 94- சூது
குறள் - 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

விளக்கம் :- வெற்றியே தருவதாக இருப்பினும் சூதாட்டத்தை ஒருவன் விரும்பக் கூடாது. அதில் வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கியதைப் போன்றதாகும்.

சூதாட்டம் அறிவையும், கடமையையும் கெடுக்க வல்லது. பொது வாழ்விற்கு இடையூறானது.தனி வாழ்விற்காவது நன்மை தருவதா எனின், சூதில் வெற்றி உண்டு. ஆனால் வென்று பெறும் பொருள் இழப்புக்கும் துன்பத்திற்கும் உள்ளாகுமாறு கெடுக்க வல்லதேயன்றி உண்மையான வெற்றி அன்று. அதன் விளைவு தூண்டில் இரும்பை இரை என்று கருதி விழுங்கிய மீன் அல்லல்படுவது போலாகும். ஆகையால் வெற்றி தருவதாயினும் சூதினை விரும்புதல் கூடாது.



இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


கோதாட்டு ஒழி
சூது விரும்பேல்.

- ஆத்திசூடி _ ஒளவையார்.

குற்றம் பொருந்திய விளையாட்டுகளை விட்டு விடு.

ஒரு பொழுதும் சூதாடுவதை விரும்பாதே.

சூதும் வாதும் வேதனை செய்யும்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்

சூதாடுதலும், குதர்க்கம் பேசுதலும் நமக்கு துன்பத்தையே தரும்.


செம்மையிலறஞ் செய்யாதார் திரவியம் சிதறவேண்டி
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே.

- விவேக சிந்தாமணி.

செம்மையாக அறம் செய்யாதவர்களின் செல்வங்கள் சிதறி அழியும் பொருட்டே நம் போன்ற வேசியரையும், கள்ளையும், சூதாடுதலையும் பிரம்மதேவன் படைத்திருக்கிறான் என்று ஒரு வேசி தன் தோழிக்குக் கூறுவதாக விவேக சிந்தாமணிப் பாடல் கூறுகிறது.

செருப்புக்கு தோல் வேண்டியே - இங்குக் கொல்வாரோ
செல்வக் குழந்தையினை ?
விருப்புற்ற சூதினுக்கே - ஒத்த பந்தயம்
மெய்த்தவ பாஞ்சாலியோ?

- பாஞ்சாலி சபதம் - பாரதியார்.

செருப்புக்குத் தோல் வேண்டி யாரேனும் தான் சீராட்டிப் பெற்ற செல்வக் குழந்தையைக் கொல்லத் துணிவரோ?
வேள்வித் தவத்தில் விளைந்த பாஞ்சாலியை சூதாட்டத்தில் பணயப் பொருளாக வைப்பதோ?

சூதாட்டத்தில் தன் நாடு, நகரம் செல்வமனைத்தையும் இழந்து, தம்பியரையும் தோற்று, தன்னையுமிழந்து, தன் தாரத்தையும் வைத்திழந்தான் தருமேந்திரன்.

சூதாட்டத்தினால் தான் மகாபாரதப் போரே மூண்டது.

உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கும் மானஞ் சிதைக்கும் _ மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து.

- நளவெண்பா - புகழேந்திப் புலவர்.

புட் கரனோடு சூதாட நளன் அழைத்தபோது அமைச்சர் முதலானோர் அவனுக்கு அறிவுரை கூறுகின்றனர். சூதினால் வருங்கேட்டை எடுத்துரைக்கின்றனர்.
சூதாட்டம் ஆடுபவரின் அழகைக் குறைக்கும், உண்மை பேசுவதைக் கெடுக்கும், பிறர்க்குக் கொடுக்கும் தன்மையை அழிக்கும். பெருமையைக் குலைக்கும், ஒருவருடன் கொண்ட அன்பை நீங்கச் செய்யும். அதனால் வரும் தீமை ஒன்றன்று பலவாகும். ஆதலால் தகுதி வாய்ந்த நல்லவர்கள் சூதினை விரும்பி ஆடுவார்களோ? மாட்டார்கள் என்று கூறினார்கள்.

சூதினால்தான் நள மகாராசனும் நாடு, நகரம். செல்வமனைத்தும் தோற்று மனைவியுடன் கானகம் சென்று தமயந்தியையும் பிரிந்து சொல்லொணாத் துயருற்றான்.

ஓதலும் ஓதியுணர் தலும்சான் றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் - சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப் படுமேல்
இருளாம் ஒருங்கே இவை.

- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.

சூதாட்டம் என்னும் பழியால் ஒருவன் பற்றப்படுவானாயின் , அறிவு நூல்களைக் கற்றலும், கற்றவற்றை ஆராய்தலும், அறிவுடைய மேதை என்று பலராலும் போற்றப்படும் பெருமையும் அவனை விட்டு மறையும்.

சூது அறிவை மழுங்கச் செய்து கேவலப்படச் செய்வதாகும். வெற்றி பெறுவது போல் தோன்றினாலும் அவ் வெற்றி பெருமைக்குரியதல்ல. பல துன்பங்களையும் தந்து இருக்கின்ற புகழையும் கெடுத்து இழிவினைத் தரக்கூடியதாகும்.

கள்ளின் மீது
கவறின் மீது
கண்ணால் மயக்கும்
காரிகை மீது
காட்டும் காதல்
கைதட்டி நீயழைக்கும்
காலனின் தூது!



வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...