Sunday, February 17, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 625




பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 63 - இடுக்கண் அழியாமை.
குறள் - 625

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.


விளக்கம் :- இடைவிடாது மேன்மேலும் துன்பம் தொடர்ந்து வரினும் கலங்காமல் இருப்பவனை அடைந்த துன்பமே துன்பப்பட்டு ஒழியும்.


இன்பம், துன்பம் இரண்டும் இயல்பே என்று தெளிந்திருப்பவன் எப்போதும் துன்புறுவதில்லை. துன்பம் வரும் போது துவளாமல் இருக்க வேண்டுமெனின் அறிவுத் தெளிவும், மனோபலமும் வேண்டும். அத்தகு மன உறுதியும், தெளிவும் உடையவர்கள் வெகு சிலரே.

ஒரு சிலர் துன்பத்தை மறக்க புகை, மது, மாது, சூது என தேவையற்ற துயரத்தில் தானே சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாமல் துயரக் கடலில் மூழ்குவார்கள்.

இன்பத்தையும் துன்பத்தையும் இயல்பாக எடுத்துக் கொள்பவர்கள் ஆனந்தத்திலும் தலைகால் புரியாமல் ஆடமாட்டார்கள். துன்பத்திலும் துவண்டு போக மாட்டார்கள். அத்தகையவர்களை அடைந்த துன்பம்தான் துன்பப்பட்டு தோற்றோடும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

துன்பத்திற் கிடங்கொடேல்.
_ ஆத்திசூடி - ஒளவையார்.

துன்பத்திற்கு சிறிதும் இடம் கொடுக்காதே.

ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

இன்பமும் துன்பமும் இயல்பென உணர்ந்த மெய்யறிவாளர்கட்கு சுகமும் இல்லை, துக்கமும் இல்லை.

தூய அறிவினர் முன்சூழ் துன்பமில்லையாம்,
- நீதி வெண்பா.

தூய அறிவுடையவர்களைச் சூழ்ந்த துன்பம் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. ஏனெனில் அவர்கள் இன்ப துன்பங்களை இயல்பாகவே ஏற்பர்.

துன்பத்துள் துன்புற்று வாழ்தலு மின்பத்து
இன்ப வகையா னொழுகலு - மன்பிற்
செறப்படா ரில்லம் புகாமை யிம்மூன்றுந்
திறப்பட்டார் கண்ணே உள.

_ ஆசாரக்கோவை _ பெருவாயின் முள்ளியார்,

துன்பம் வந்தபோது அதைப் பொறுத்திருத்தலும், இன்ப காலத்தில் பிறருக்கும் இன்பம் உண்டாக நடத்தலும், அன்பற்றவர்களின் வீடு நுழையாமை இம்மூன்றும் திறனுடையாரிடத்தே உள்ள பண்புகளாம்.

வருந்தி யழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென் றாற்போகா _ இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தானினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

- நல்வழி - ஒளவையார்.

இன்ப துன்பங்கள் தவறாமல் வந்து கொண்டு தான் இருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கதன்று.

உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர்
அடுக்கும் ஒருகோடி யாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பணிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியைமதி மான்.

- நன்னெறி - சிவப்பிரகாசர்.

குளிர்ச்சி பொருந்திய மொழிகள் பேசுபவளே! நிலவில் உள்ள மானானது பூமியிலிருக்கும் புலிகளைக் கண்டு பயப்படுமா? ஒருபோதும் பயப்படாது. அதுபோல ஞானிகள் அடுக்கிய கோடி துன்பங்கள் நேர்ந்தாலும் அதைக் கண்டு அஞ்சமாட்டார்கள்.

துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் மனந்தளராது இருந்தால் , அத்துன்பமே துன்பப்பட்டு விலகி விடும்.

எல்லை இல்லாது
தொல்லைகள் சூழினும்
துயரைக் கண்டு
துவளாது இருப்பின்
துயரே தோற்றோடும்
துயர் மிகக்கொண்டு !

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...