விளக்கம் - எப்பொழுதும் தன்னையே உயர்வாக புகழ்ந்து பேசி வியத்தல் கூடாது. தனக்கு நன்மை தராத செயல்களை விரும்புதலும் கூடாது.
ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்துமதித்துக் கொள்ளக் கூடாது. அது தன் அறிவுக்கண்ணை மறைக்கக்கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவைத் தேடிக் கொள்ள நேரும். தான் செய்யும் செயல்களிலும் நல்ல நோக்கம் இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும். நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாமல் விட வேண்டும். தன்னைத்தானே மதித்து வியத்தலும், நல்ல நோக்கம் அற்ற செயலை நாடுதலும் ஆகிய குற்றங்களைக் கடியவேண்டும்.
விளக்கம் - யான் வறியவன் என்று துன்பம் தரும் சொல்லை இரந்து நிற்கின்றவன் சொல்லுமுன்னே அவன் முகம் நோக்கி குறிப்பறிந்து கொடுத்து உதவுதல் என்பது நல்லகுடிப் பிறப்பு உடையவரிடத்தில் மட்டுமே உண்டு.
பிறருக்குக் குறிப்பறிந்து கொடுத்து அவர் இன்புறுதல் கண்டு ஆனந்தம் அடைவதே ஈகையின் இன்பமாகும்.நற்குடியில் பிறந்தவர்கள் தாமே முன்வந்து ஈந்து மகிழ்வர்.
கொடிய கதிரை உடைய கதிரவன் வறுமையுறவும், கார்காலம் வளத்தை அடையவும், நெடிய காடெல்லாம் மிக்க மலர் அரும்புகளை ஈனவும், எழுச்சியை உடைய மேகம் உன் தலைவர் இப்போதே வருவார் என்று அவரின் தூதராய் வந்து அறிவித்து மின்னல் வெட்டுகிறது.
எனவே தலைவர் வந்து விடுவார் நீ கலங்காதே என்று தோழி தலைவியை நோக்கிச் சொன்னது.
கார் நாற்பது என்னும் இந்நூல் பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கண்ணங் கூத்தனார்.
இந்நூல் அகப்பொருளைச் சார்ந்தது. ஐந்து திணைகளுள் முல்லைத் திணைக்கு உரியது. இந்நூலில் 40 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு செய்யுளிலும் கார்காலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. எனவே இந்நூல் கார் நாற்பது எனப் பெயரிடப்பட்டிருத்தல் வேண்டும்.
விளக்கம் :- ஒரு பொருட்டாக மதிக்கப்படாதவரையும் பொருளாக மதிக்கச் செய்வது பொருள்.
மக்கள் வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது. வாழ்வில் வரும் இடர்ப்பாடுகளைப் போக்கக் கூடிய ஆற்றல் பொருளுக்கே உண்டு.
அறிவை அற்றம் காக்கும் கருவி என்பர். துன்பத்தை நீக்குவதற்கு அறிவு மட்டும் போதாது. பொருளும் தேவை.ஒரு பொருளாக மதிக்கத்தகாதவரையும் பொருளாக மதிக்கச் செய்வது பொருளே. இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது செல்வம்.
மதிக்கச் செய்யும் பொருளானது பிறருக்கும் பயன்பட வேண்டும்.
விளக்கம் :-இச்செயலை இக்கருவியால் இவன் முடிக்க வல்லன் என்று ஆராய்ந்து அச்செயலை அவனிடத்தே விடல் வேண்டும்.
எண்ணிய செயலை முடித்தல் என்பது மனிதர்களின் தலையாய கடமை ஆகும். எடுத்துக் கொண்ட செயலில் இடையீடு இன்றி மனதைச் செலுத்தினால் தான் அச்செயல் முழு வெற்றியடையும். இல்லையெனில் எடுத்துக் கொண்ட செயலும் நிறைவேறாது போகும். பழியும் வந்து சேரும்.
நன்மை விளையும் செயல் ஒன்றைத் தொடங்கி முயன்று முடிக்கும் போது தான் பெருமை வந்து சேரும்.
விளக்கம் :-ஒருவன் மேற்கொண்ட செயல் தெய்வ அருள் கிட்டாமல் ஊழின் காரணமாக முடியாமல் போனாலும், அம்முயற்சி மேற்கொண்டு உடல் வருந்திய அளவுக்கேனும் பயனைத் தரும்.
ஆள்வினை என்பது இடைவிடாத மெய்ம்முயற்சியைக் குறிக்கும். சோம்பல் கெடுத்தாலும் முயற்சியால் ஆளக்கூடியது வினை.ஊக்கம் உடையவன் இம்மெய்ம்முயற்சியின் காரணமாக வினையை ஆளும் ஆற்றல் உடையவன் ஆகிறான்.
முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
ஊக்கமுடைமை உள்ளத்தைப் பொறுத்தது.
ஆள்வினையுடைமை உடலால் வருந்தி உழைக்கும் முயற்சியைப் பொறுத்தது. மன உறுதியுடன் செயலில் ஈடுபடுவோர், உடல் உறுதியுடன் அயராது பாடுபடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்
ஒன்றிருந்து மற்றொன்று இல்லாவிட்டால் பயன் இல்லை. ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது.அத்துடன் இடைவிடாத மெய்ம்முயற்சியும் தேவை.
இறை மறுப்பாளனாக இருந்து பிறகு ஆன்மீகத்தில் அடியெடுத்து வைத்த கண்ணதாசன் அதில் துறை போனவனாகவும், துளையம் ஆடியவனாகவுமே தன்னை பிரதிபலித்தான். அதற்கு சாட்சியாக அர்த்தமுள்ள இந்து மதம் துவங்கி, அபிராமி அந்தாதி விளக்கம், ஆதிசங்கரரின் பககோவிந்தம் கவிதையாக்கம், ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில் எழுதிய பொன்மழை, பகவத் கீதை விளக்கம், ஞானம் பிறந்த கதை, நெஞ்சுக்கு நிம்மதி, போகம் ரோகம் யோகம், உன்னையே நீ அறிவாய், அம்பிகை அழகுதரிசனம் தைப்பாவை, ஸ்ரீகிருஷ்ண கவசம், கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம் ஆகியவை உள்ளன . அது மட்டுமன்றி கண்ணதாசன் எழுதிய திரைப்பட பாடல்கள் பலவற்றில் பக்திச் சுவை சொட்டாமல் இல்லை. "அவன்தான் இறைவன்" என்று கண்ணதாசன் எழுதிய கவிதை வரிகள் மிக நுட்பமானது. காரணம் எந்த சமயம் சார்ந்த கடவுளர்களை, அவர்தம் உருவங்களை, இயல்புகளைச் சொல்லது மிக நடுநிலையாக எல்லோருக்கும் ஏற்புடைய கருத்துக்களை மட்டும் எடுத்துத் தொடுக்கின்றான்...
அவன்தான் இறைவன் - கவிஞர் கண்ணதாசன்
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்
வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்
அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்
முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்
கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை
பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்
பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்
ஆறுதலைத் தந்தருளும் இறைவன்
கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதை
உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்
முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்
நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்
உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர்
உருவமில்லா அவன்தான் இறைவன்
ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன்
தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்
சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்
தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்
தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான்
"கொல்" "கொள்ளையடி" சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''தழுவு" ''முத்தமிடு'' கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''ஆராரோ'' ''சனியனே'' தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''உனக்கெப்போது கல்யாணம்?'' விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''உருப்போடு'' - உருப்படமாட்டாய்'' வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''இன்னொரு ஜென்மம் என்றொன்றிருந்தால்'' பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''கடைசியாய் எல்லாரும் முகம்பார்த்துக் கொள்ளுங்கள்'' மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்" மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள் "பாலாறு - தேனாறு" பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''மறக்காமல் கடிதம் போடு'' ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''அய்யா குளிக்கிறார்'' தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள் "அப்பா கோபமாயிருக்கிறார்" குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள் "தயவுசெய்து மன்னியுங்கள்" ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள் ''நேற்றே வந்திருக்கக் கூடாதா'' கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள் "இனிமேல் ஆண்டவன் விட்ட வழி" மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள் போதுமடா சாமி! போதும்! போதும்! ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச் சாயம் போயின வார்த்தையின் நிறங்கள் இனி ஒவ்வொரு சொல்லையும் ஒட்டடை தட்டுவோம் இனிமேல் வார்த்தைகளை இடம் மாற்றிப் போடுவோம் அத்தனை சொல்லிலும் ஆக்சிஜன் ஏற்றுவோம் வார்த்தை மாறினால் வாழ்க்கை மாறும் முதலில் வாழ்க்கையிலிருந்து வார்த்தையை மீட்போம் பின்னர் அர்த்தத்திலிருந்து வார்த்தையை மீட்போம் வாழ்வின் நீள அகலம் கருதி வார்த்தைகளிலும் நாம் மழித்தல் நீட்டல் செய்வோம்
மரித்தான் என்ற சொல்லை யெறிந்து வாழ்வை வென்றான் என்று புகல்வோம் தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம் எதிரி என்ற வார்த்தை எதற்கு? தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம் சதிபதி இருவர் சண்டைகள் இட்டால் முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம் இலைகள் கழிந்த கிளைகள் கண்டால் அடுத்த வசந்த ஆரம்பம் என்போம் நொந்த தேகம் நோயில் விழுந்தால் உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம் வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால் மையைச் சுற்றிலும் வெண்மையென்போம் நிலவைத் தொலைத்த வானம் என்பதை விண்மீன் முளைத்த விண்வெளி என்போம் எதிர்மறை வார்த்தைகள் உதிர்ந்து போகட்டும் உடன்பாட்டு மொழிகள் உயிர் கொண்டெழட்டும் பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப் புதிய நிலத்தில் பதியன்போடுவோம் புளித்த வார்த்தைகள் மாறும்போது சலித்த வாழ்க்கையும் சட்டென்று மாறும்.
காலை இளம்பரிதி கண் விழிக்கும் வேளையிலே பெண்ணே நீ எழவேண்டாம் கண்ணுறங்கு கண்மணியே மானே உன் விழியொழியில் இரவி ஒளி குன்றிடுவான் தேனே ஆரணங்கே தென்பாண்டி ஆணிமுத்தே மானே மரகதமே மைவிழியே மணிவிளக்கே பெண்ணே குலக்கொடியே உன் அத்தை மெச்சும் அஞ்சுகமே பாராட்டு வார்த்தை கேட்டு படுத்துறங்க வேண்டாமடி பையத்துயில் எழடி நம் பையன் பள்ளிக்கு போகவேண்டும்.
மானுட வாழ்வையும் அதன் நிலையாமையையும் எத்தனையோ எத்தனையோ பெரும் புலவர்களும், அடியார்களும் பாடியிருப்பினும் மிக உயரிய துறவு நிலையில் நின்று பாடிய பட்டினத்து அடிகளுக்கென்று ஒரு தனித்த, உயர்ந்த இடம் இருப்பது பேருண்மை.
அதனால் தான் தாயுமானவசுவாமிகள் "பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறக்கை அரிது" _எனப்படுகிறார்.
பட்டினத்து அடிகளின் பாடல்களில் உடற்கூறு வண்ணம் மிக பிரபலமானது.
தெருவில் பிச்சைக்காரரைக் காண்கிறோம். அவர்களுக்கு ஏதாவது கொடுத்து உதவினால் அவர்கள் இரந்து வாழ்வதற்கு ஊக்கமூட்டியது போல் ஆகின்றது.
இரப்பதை விட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ஒன்றும் உதவாமல் வந்தால் அவர்களுடைய உயிர் வாழ்க்கைக்காக ஒன்றும் செய்யாமல் ஒதுங்கிய குற்ற உணர்வு ஏற்படுகிறது. எல்லோரும் இவ்வாறே எண்ணி உதவாமல் விட்டு விட்டால் அவர்களில் சிலர் திருட்டு முதலியன செய்து பிழைக்கத் துணிவார்கள். சிலர் வறுமையால் வாடி பட்டினியால் துன்புற்று மெலிவார்கள். இந்நிலையில் என்ன செய்வது?
தனி நன்மையைக் கருதி உதவவும் வேண்டும். சமூக நலன் கருதி இரக் கும் தொழிலை அவர்கள் கைவிடுமாறு சீர்திருத்தமும் செய்ய வேண்டும். ஐயன் வள்ளுவர் இந்த இரண்டையுமே தனித்தனியாக இரண்டு அதிகாரங்களில் கூறுகின்றார்.
இரப்போர் நல்லவர்களை நாடி இரக்க வேண்டும் என்றும், அவர்கட்கு உதவுவது கடமை என்றும் இரவு - என்னும் அதிகாரத்தில் கூறுகின்றார்.
அதனை அடுத்து இரந்து உயிர் வாழ்வது தவறான வாழ்க்கை என்று இரவச்சம் என்னும் அதிகாரத்தில் அந்தத் தொழிலைக்கடிந்து கூறுகின்றார்.
அதனால் தான் தக்கவர்களைக் கண்டால் இரந்து உதவி பெறலாம் என்று ஓர் இடத்தில் இரப்பவர்களின் உயிர் வாழ்க்கையைக் கருதி இரக்கம் கொண்டு கூறிய பின், கண் போல் சிறந்த மிக நல்லவரிடத்தும் இரந்து உதவி பெறாமல் வாழ்வதே கோடி மடங்கு நல்லது என்று நாட்டின் பொதுநலம் கருதிய போது கடிகின்றார்.
இரப்பாரை அவமதித்து இழிவுரை கூறாது மனமுவந்து பொருள் கொடுப்போரைக் கண்டால் இரப்பவர் உள்ளம் மகிழ்ந்து நின்று, உள்ளுக்குள்ளே இன்புறும் தன்மையை அடையும்.
விளக்கம் - பணிவு உடையவனாகவும், இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவருக்கு அணியாம்.மற்றைய பிற அணிகள் எல்லாம் அழகு தருவன அல்ல. அன்பு கலந்த இன்சொல்லை வழங்குவதே அறத்தின் தன்மையாம்.
பேச்சுத்திறன் மக்களுக்கே சிறப்பியல்பாக அமைந்துள்ளது. அதை நல்ல வகையில் பயன்படுத்தினால் நன்மை அடையலாம். அதனால் பலரை மகிழ்விக்க முடியும்.
கேட்குங் காலத்து இனிமை பயக்கும் சொற்கள் இன்சொற்கள் என்பதை வள்ளுவர் ஒப்பவில்லை.
மாசற்ற அன்புள்ளத்திலிருந்து தோன்றிய வஞ்சனை முதலிய தீங்குகள் இல்லாத, அறத்தினை உணர்ந்த சான்றோர்களின் வாயிலிருந்து தோன்றும் சொற்களே உண்மையான இன் சொற்கள் என்கிறார்.
அத்தகு இன்சொல் பேசுதலும், பணிவுமே உண்மையான அணிகலனாகும்.உடல் அழகிற்கு அணியும் மற்றவை உண்மை அணிகள் ஆகா.
கடுஞ்சொல் பேசுதல் நம் மனதிலும் வன்மம் வளர்க்கும். மனதை விகாரமாக்கும். கேட்போர் மனதையும் புண்படுத்தும். நரம்பில்லாத நாக்கு தானே என்று வரம்பின்றி வார்த்தைகளைக் கொட்டி விட்டால் பிறகு அள்ளியெடுக்க முடியாது.
விளக்கம் - உள்ளத்தில் அன்பு இருக்க, அதன் வழியே இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடலாம். அன்பு இல்லாதவருக்கு உள்ள உடம்பு எலும்பினாலும் தோலினாலும் போர்த்தப்பட்ட வெற்றுடம்பே ஆகும்.
அன்பு என்பது இயற்கையான உணர்வு. மக்கள், மாக்கள் என அனைத்து உயிர்களுக்கும் அன்புணர்வு உண்டு. அன்பு இல்லாதவர்களை காண்பது அருமை.
அன்பு குறையக் குறையத் தன்னலம் பெருகும்.
அன்பு பெருகப் பெருகத் தன்னலம் தேயும். அன்புடையவர்கள் பெரும்பாலும் தன்னலம் இல்லாதவர்கள்.
அன்பு இல்லாதவர்கள் உயிருடன் வாழ்ந்தாலும் உயிரற்ற பிணத்திற்கே ஒப்பாவர்.
ஈருயிர்களிடையே காணப்படும் வாழ்வியல் காதலாயினும், மனமே படைத்துக் கொள்ளும் இறையியல் காதலாயினும் இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது உள்ளத்தே ஊற்றெடுக்கும் அன்பு என்னும் நெகிழ்ச்சிப் பண்பே ஆகும்.
விளக்கம் - நாம் முன்பு ஓர் உதவியும் செய்யாமல் இருக்க பிறர் நமக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் , விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் சமமாகாது.
ஒருவருக்கொருவர் உதவி செய்யாவிட்டால் உலக வாழ்க்கை நடைபெறாது. அவ்வாறு உதவி செய்வோரை மறவாமல் அவர் செய்த நன்மையைப் போற்றுவது சிறந்த கடமையாகும்.அத்தகைய உதவியிலும் பலவகை உண்டு.
இதற்கு முன் அவருக்கு ஒரு உதவியும் செய்யாதிருக்கும் போது காரணமில்லாமல் ஒருவர் மனமுவந்து தாமே உதவி செய்வதும் உண்டு. அந்த உதவிக்கு கைம்மாறு இல்லை. மண்ணுலகம், விண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் அவை அந்த உதவிக்கு ஈடாகாது.