Saturday, September 29, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 439




















பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 44 - குற்றங்கடிதல்
குறள் - 439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

விளக்கம் - எப்பொழுதும் தன்னையே உயர்வாக புகழ்ந்து பேசி வியத்தல் கூடாது. தனக்கு நன்மை தராத செயல்களை விரும்புதலும் கூடாது.

ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்துமதித்துக் கொள்ளக் கூடாது. அது தன் அறிவுக்கண்ணை மறைக்கக்கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவைத் தேடிக் கொள்ள நேரும். தான் செய்யும் செயல்களிலும் நல்ல நோக்கம் இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும். நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாமல் விட வேண்டும். தன்னைத்தானே மதித்து வியத்தலும், நல்ல நோக்கம் அற்ற செயலை நாடுதலும் ஆகிய குற்றங்களைக் கடியவேண்டும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


இயல்பு அலாதன செயேல்.
அழகு அலாதன செயேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.

சிறப்பில்லாத காரியங்களைச் செய்யாதே.

வல்லமை பேசேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

உன்னுடைய சாமார்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே...

பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

ஒரு நன்மையையும் தராத தீங்குகள் எனப்பட்ட யாவற்றையும் செய்யாதொழி.

தன்னை வியந்து தருக்கலும்....

செல்வம் உடைக்கும் படை.
- திரிகடுகம்-நல்லாதனார்.

தன்னைத்தானே வியந்து செருக்கடைதல் செல்வத்தை அழிக்கும் கருவியாகும்.


சிற்றுளியால் கல்லுந் தகரும் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

சிறு உளியால் பெரிய மலைகளும் உடையும். ஆனால் கொல்லன் உலைக்களத்தில் உள்ள சம்மட்டியால் அம்மலைகள் உடையாது. எனவே எல்லாம் அறிந்து விட்டோம் என்று தற்பெருமை கொண்டு செருக்கடைதல் கூடாது.

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்நீர் சொரிந்து வளர்த்தற்றால் தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

தன்னை பிறர் மதிக்கும் படிச் செய்வதற்காக தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுதல், குளிர்ந்த நீரை விட்டு விளக்கை வளர்த்தல் போலாம்.
தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளாமையே நன்மதிப்பாகும். தற்புகழ்ச்சி இழிவையே தரும்.
.
உண்மையில் உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன்னைப் பெரிதாக எண்ணி வியத்தல் கூடாது. ஒரு நன்மையையும் தராத செயலையும் ஒருவன் செய்ய விரும்புதல் கூடாது.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்










No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...