Wednesday, September 5, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 1168














பால் - இன்பத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்
குறள் - 1168

மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

விளக்கம் - உலகத்திலுள்ள உயிர்களையெல்லாம் உறங்க வைத்த இரவு என்னையல்லாமல் வேறு துணையில்லாமல் இருப்பது இரங்கத்தக்கது.

தலை மக்கள் ஒருவரை ஒருவர் பெற விழைந்த வேட்கையில் உள்ளத்தூய்மையைக் காட்டுவதே களவியல் நோக்கம்.
தலைமக்கள் ஒருவர்க்கொருவர் அன்பால் பிணைப்புண்டு இருந்தலைவிளக்குவதே கற்பியல் நோக்கம்.

களவியலில் குறிஞ்சித் திணைகூறுகின்றார். கற்பியலில் பெரும்பாலும் பாலைத் திணை கூறுகின்றார்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


வெங்கதிரோன் றன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலிற் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னா இரா.
- நளவெண்பா - புகழேந்தியார்

காதலால் வருந்துகின்ற தமயந்தி புலம்புகின்றாள்.
இவ்விரவுப் பொழுதானது சுடுகின்றதே. காரணம் யாது தெரியவில்லையே?
வெம்மையுடைய கதிரவனை விழுங்கியதாலோ? அல்லது என் கொங்கை முற்றத்தில் தோன்றிய நெருப்பினால் கொளுத்தப் பெற்றோ? அல்லது திங்களினின்றும் வெளிப்பட்டு வருகின்ற வெண்மையான நிலவொளியாலோ? எதனால்? அறிய முடியவில்லையே. என்னைச் சுட்டெரிக்குதே என் செய்வேன் என்று புலம்புகிறாள்.
இரவு, மாலை, தென்றல், நிலவு என்பன குளிர்ச்சி உடையன. ஆனால் பிரிந்தார்க்கு வெம்மை தரும். ஆதலின் இவ்வாறு கூறப்பட்டது.

நள்ளென்று அன்றேயாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் - முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
- குறுந்தொகை - பதுமனார்.

நள்ளிரவாகிய யாமமும் இருள் செறிந்துள்ளது. சுற்றியுள்ள மக்களும் பேச்சடங்கி இனிதாக உறங்கி அமைதியாயினர்.பரந்த இடத்தையுடைய இவ்வுலகமும் தடையேதுமின்றி உறங்குகிறது. யான் ஒருத்தி மட்டுமே உறக்கமின்றித் தவிக்கிறேன் என்று வருந்துகிறாள் தலைவி.

மெய்யே கொழுநர் பிழை நலிய
வேட்கை நலிய விடியளவும்
பொய்யே உறங்கும் மடநல்லீர்.
- கலிங்கத்துப்பரணி -சயங்கொண்டார்.

தலைவன், உன்னை ஒரு பொழுதும் பிரியமாட்டேன் என்று கூறிய சொற்கள் ஒரு பக்கம் வருத்தியது. மற்றொரு பக்கம் தலைவன் மேல் கொண்ட காதல் உள்ளிருந்து வருத்தியது. இத்துன்ப நிலையினால் இரவு முழுதும் உறங்காமல் விடியும் வரையிலும் விழி மூடிப் படுத்திருக்கும் அழகிய பெண்கள் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.

தலைவன் பால் அன்பு கொண்டு நினைந்து உருகுவதால் உலக உயிர்களையெல்லாம் உறங்க வைத்த இரவு தலைவியை மட்டும் உறங்க விடாமல் செய்கிறது. இரவும் என்னைப் போல் துணையின்றி இருப்பது இரங்கத்தக்கது என்கின்றாள்.

பிரிவின் கொடுமையை விட யுகமாக நீண்டு கழியும் உறங்கவிடாமல் செய்யும் இரவின் கொடுமை கொடியது.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்


No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...