Tuesday, September 18, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 619















பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 62 - ஆள்வினையுடைமை
குறள் - 619

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

விளக்கம் :-ஒருவன் மேற்கொண்ட செயல் தெய்வ அருள் கிட்டாமல் ஊழின் காரணமாக முடியாமல் போனாலும், அம்முயற்சி மேற்கொண்டு உடல் வருந்திய அளவுக்கேனும் பயனைத் தரும்.

ஆள்வினை என்பது இடைவிடாத மெய்ம்முயற்சியைக் குறிக்கும். சோம்பல் கெடுத்தாலும் முயற்சியால் ஆளக்கூடியது வினை.ஊக்கம் உடையவன் இம்மெய்ம்முயற்சியின் காரணமாக வினையை ஆளும் ஆற்றல் உடையவன் ஆகிறான்.

உழைப்பின் உயர்வையும் முயற்சியின் சிறப்பையும் உணர்த்தவே
முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஊக்கமுடைமை உள்ளத்தைப் பொறுத்தது.
ஆள்வினையுடைமை உடலால் வருந்தி உழைக்கும் முயற்சியைப் பொறுத்தது. மன உறுதியுடன் செயலில் ஈடுபடுவோர், உடல் உறுதியுடன் அயராது பாடுபடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்
ஒன்றிருந்து மற்றொன்று இல்லாவிட்டால் பயன் இல்லை. ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது.அத்துடன் இடைவிடாத மெய்ம்முயற்சியும் தேவை.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்

முயற்சி திருவினையாக்கும்.

முயன்றால் முடியாததும் உளவோ?

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

முயற்சியை வலியுறுத்தும் அமுத மொழிகள் இவை.

மெய்ம் முயற்சியை மேற்கொள்வார்க்குரிய இயல்புகளை,

மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணா யினார்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

தாம் தொடங்கிய காரியத்தை முடிப்பதிலேயே கருத்து கொண்டவர் தம் உடம்பின் வருத்தத்தைக் கவனியார், பசியையும் நோக்கார், உறங்கார், யார் செய்த தீங்கையும் பொருட்படுத்தார், காலத்தின் அருமையையும் நோக்கார், பிறர் செய்யும் அவமதிப்பையும் கருதார்.
எவ்வகை இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் செயலைச் செய்து முடிப்பதிலேயே கருத்தாய் இருப்பர் என்று குமரகுருபரர் கூறுகின்றார்.

எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் தெய்வம் கொடுக்கும் என்று எதிர்பார்த்துப் பின்னர் தெய்வத்தால் ஆகாது என்று கூறி சோம்பல் வயப்பட்டோர் வாழ்க்கையில் முன்னேற்றம் காண இயலாது. கடுமையாக உழைக்கும் ஆற்றல் பெற்றோரின் மெய்ம்முயற்சி, எக்காலத்தும் வீண் போகாது.மேற்கொள்ளும் முயற்சி உடலுழைப்புக்கேற்ற பயனைத் தரும் என்பது உறுதி.

முயலாது வைத்து முயற்றின்மை யாலே
உயலாகா ஊழ்த்திறத்த என்னார்-மயலாயும்
ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டுமென்று
ஏற்றார் எறிகால் முகத்து.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

எல்லாம் ஊழ்வினைப் படி ஆகுமென்று கருதி வாளாவிருந்து முயற்சி செய்யாமல் இருக்க மாட்டார்கள். தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து அம்முயற்சிக்கு ஏற்ப பயன் பெறுவர்.

அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ட்டம் இல்லையென்று அலட்டிக் கொள்வார்.
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் .

சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

முயற்சியின்றி சோம்பித்திரிபவர்கள் வறுமையால் அழிவார்கள். எக்காரணம் கொண்டும் சோம்பலை நம்மோடு நெருங்க விடக் கூடாது.

மிகச் சாதாரண நிலையிலிருந்து மிகப் பெரிய தொழிலபதிராக உயர்ந்த ஜி.டி.நாயுடு,
செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து ருஷ்யாவின் புகழை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்திய ஸ்டாலின் , கணித மேதை இராமானுசம், ரேடியம் கண்டு பிடித்த மேரி கியூரி விண் முட்டப் பறக்கும் விமானம் கண்டறிந்த ரைட் சகோதரர்கள், இளைஞர்களை கனவு காணச் சொன்ன அப்துல் கலாம் அவர்கள்
இன்னும் செயற்கரிய செய்த செயல் வீரர்கள் அனைவருமே அயரா உழைப்பினாலும் அரிய முயற்சியினாலும் அல்லவோ பெரிய சாதனைகள் செய்து வெற்றிக்கனியை எட்டிப் பறித்தனர்.

உழைத்து வாழ்ந்தால்
உயர்ந்து வாழலாம்.
முயற்சியில்லையேல்
முன்னேற முடியாது.
முயலாதவனை உலகம் பழிக்கும்.

வெந்ததைத் தின்று
வீணே திரியாமல்
விட்டுப்பார் உழைப்புக்கு அழைப்பு - அதில்தான்
அடங்கியுள்ளது உன் பிழைப்பு.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...