Friday, September 28, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 517














பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 52 - தெரிந்து வினையாடல்
குறள் - 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

விளக்கம் :-இச்செயலை இக்கருவியால் இவன் முடிக்க வல்லன் என்று ஆராய்ந்து அச்செயலை அவனிடத்தே விடல் வேண்டும்.

எண்ணிய செயலை முடித்தல் என்பது மனிதர்களின் தலையாய கடமை ஆகும். எடுத்துக் கொண்ட செயலில் இடையீடு இன்றி மனதைச் செலுத்தினால் தான் அச்செயல் முழு வெற்றியடையும். இல்லையெனில் எடுத்துக் கொண்ட செயலும் நிறைவேறாது போகும். பழியும் வந்து சேரும்.
நன்மை விளையும் செயல் ஒன்றைத் தொடங்கி முயன்று முடிக்கும் போது தான் பெருமை வந்து சேரும்.



இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யா மையோடு இளிவு தலைத் தரும்.
- நற்றிணை - தேய்புரி பழங்கயிற்றினார்.

பொருள் தேடும் முயற்சியைக் கைவிட்டு விட்டால் இகழ்ச்சி வருவதோடு பொருளும் கிட்டாது. எடுத்துக் கொண்ட செயல் முடியாமையோடு முயற்சியின்மையானது இழிவையும் தரும்.
இதனைத் தான் நம் ஐயனும்,

வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
என்கிறார்.

தன் கடமையைச் சரியாகச் செய்யாதவரை இவ்வுலகமானது கைவிட்டு விடும். அதனால் செய்தொழிலில் முயற்சியுடன் இருக்க வேண்டும். வாழ்வில் இன்பம் முயற்சியினால் வருவதாகும்.
அத்தகு முயற்சியோடு செயல் ஆற்றவல்லவர் என்பதை ஆராய்ந்து செயலைச் செய்யத் தகுதியானவரிடத்து விடல் வேண்டும்.

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிர்.
- குறுந்தொகை -பாலை பாடிய பெருங்கடுங்கோ.

புறத்தே சென்று பொருள் தேடுதலும் அரசருக்கு உதவுதலும் ஆகிய வினைகள் ஆடவர்க்குக் கடமை. பெண்களுக்குச் கடமை இல்லறம் போற்றல் ஆகும். 

பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவ தன்றென
- குறுந்தொகை - மிளைகிழான் நல்வேட்டன்.

நன்றாகச் சீர்தூக்கி ஆராய்ந்து ஈடுபட்ட செயல்களில் சில நேரங்களில் பிழைகள் ஏற்படுதல் உண்டு. அந்நிலையில் மனந்தளராது நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
பெரியவர் தம் மனதில் கருதிய ஆள்வினை முழுவதும் முடித்து மீள்வதே கடமை.

ஒரு செயலைச் செய்து முடிக்கும் போது பொருத்தமில்லாத கூறுகளை விலக்கி நீர் விடுத்துப் பாலை மட்டும் உண்ணும் அன்னப்பறவை போல நற்செயல்களை எடுத்துக் கொண்டு அதை வெற்றியடையச் செய்ய முயல வேண்டும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - என்ற
வள்ளுவரின் வாக்கின் படி நினைப்பதெல்லாம் உயர்ந்ததாக நினைக்க வேண்டும். அப்போதுதான் அதில் இயன்ற வரை ஈடுபட்டு வெற்றி காண முடியும்.

செய்ய வேண்டிய செயல்களைக் குறித்த காலத்தில் நிறைவேற்றுதல்தான் அறம் நிறைந்த செயலாகும். தன் கடமைகளைச் சரிவரச் செய்பவர் எப்போதும் புகழுக்கு உரியவராகிறார்.
வலிமையான அலைகளையும் அடக்கியாளக் கற்றுக் கடலுக்குச் செல்லும் மீனவன் நிறைந்த மீன்களோடு திரும்பி வருதல் போல வினையைத் திறம்படச் செய்பவன் வெற்றியாளனாகிறான்.

அறத்தலைப் பிரியா தொழுகலுஞ் சிறந்த
கேளிர் கேடுபல வூன்றலு நாளும்
வருந்தா வுள்ளமோ டிருந்தோர்க் கில்லெனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர் நறுநுதன்
- அகநானூறு - முள்ளியூர்ப் பூதியார்.

கடமையைச் சரிவரச் செய்பவர்களுக்கே புகழும், இன்பமும், வள்ளன்மையும் வாய்க்குமென அகநானூறு குறிப்பிடுகின்றது.

எண்ணிய செயலை எண்ணியவாறு முடித்தலும் வினையாண்மை ஆகும். முயன்று ஆராய்ந்து இச்செயலை இதன் மூலம் இவன் முடிப்பான் என்று ஆய்ந்து அச்செயலை அவன் கண் விடல் வேண்டும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...