Wednesday, September 5, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 80














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 8 - அன்புடைமை.
குறள் - 80

அன்பின் வழியது உயிர் நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

விளக்கம் - உள்ளத்தில் அன்பு இருக்க, அதன் வழியே இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடலாம். அன்பு இல்லாதவருக்கு உள்ள உடம்பு எலும்பினாலும் தோலினாலும் போர்த்தப்பட்ட வெற்றுடம்பே ஆகும்.

அன்பு என்பது இயற்கையான உணர்வு. மக்கள், மாக்கள் என அனைத்து உயிர்களுக்கும் அன்புணர்வு உண்டு. அன்பு இல்லாதவர்களை காண்பது அருமை.

அன்பு குறையக் குறையத் தன்னலம் பெருகும்.
அன்பு பெருகப் பெருகத் தன்னலம் தேயும். அன்புடையவர்கள் பெரும்பாலும் தன்னலம் இல்லாதவர்கள்.
அன்பு இல்லாதவர்கள் உயிருடன் வாழ்ந்தாலும் உயிரற்ற பிணத்திற்கே ஒப்பாவர்.

ஈருயிர்களிடையே காணப்படும் வாழ்வியல் காதலாயினும், மனமே படைத்துக் கொள்ளும் இறையியல் காதலாயினும் இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது உள்ளத்தே ஊற்றெடுக்கும் அன்பு என்னும் நெகிழ்ச்சிப் பண்பே ஆகும்.

அன்புடைமைக்கு வரையறை செய்யப் புகுந்த பரிமேலழகர்

அன்பாவது தொடர்புடையாரிடத்து
காதலுடையாரிடத்து உண்டாதல்
- என உலகியல் நிலையில் வைத்துச் சொல்கிறார்.

அன்பே கடவுள்.
அன்பு தான் அனைத்துக்கும் அடிப்படை 


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


அன்பு என்பது தன்கிளை செறாஅமை.
- நெய்தல் கலி பாடிய நல்லந்துவனார்.

தன் சுற்றங்களை வெறுக்காமல், உறவு கெடாமல் இருக்கச் செய்வது அன்பு.

நம் உள்ளமும் உயிரும் துடிப்பதற்கும், கண்ணீர் பெருகுவதற்கும் காரணம் தூய அன்பு தான்.
மனித வாழ்க்கையின் பேரியல்பாகிய பிறருக்காகவே வாழ்தல் என்னும் நிலை அன்பினாலேயே அமைவதாகும். அன்பென்னும் உயரிய நிலை தொடர்புடையாரிடத்து மட்டும் தோன்றுவதில்லை. தொடர்பிலாதவரிடத்தும் பெருகும்.

இல்லானுக் கன்பிங் கிடம் பொரு ளேவன்மற்று
எல்லா மிருந்தும் அவற்கென் செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழியிலார்க் கேது விளக்கு.
- நன்னெறி - சிவப்பிரகாசர்.

நற்குணமுடைய பெண்ணே, பேச்சில்லாத ஊமைகளுக்கு பழமையான நூல் யாது பயன் செய்யும்?விழி இல்லாதவருக்கு தீபம் யாது பயன் செய்யும்? அது போல இவ்வுலகில் அன்பில்லாதவனுக்கு எல்லாம் இருந்தும் யாது பயன்?
அன்பில்லாமல் செல்வம் பயனில்லை. அறத்தையும், புகழையும் தருவது அன்பே ஆகும்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
- வள்ளலார்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே. 
- மாணிக்கவாசகர் .

இவை இறைவன் பால் பெருகும் அன்பாகும்.

உள்ளத்து அன்பை உணர்த்துவது பெருகி வரும் கண்ணீரே ஆகும். அன்புணர்வு இயற்கையானது.

அன்பு அடிப்படையாக வாழும் உடம்பே உயிர் நின்ற உடம்பு. அன்பில்லாத உடம்பு எலும்பைத்தோலால் போர்த்த உடம்பே .உயிருடன் வாழ்ந்தும் பயனற்ற உடம்பே .உயிர் அற்ற பிணமே எனலாம்.

வண்ணச்சீறடி மண் மகள் அறிந்திலள்
- சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்.

வண்ணச்சீறடி மண் மகள் அறியாதவாறு மெல்லியலாய் வளர்ந்த கண்ணகி தன் கணவனுடைய புகழைக் காப்பதற்காக நாடாளும் தலைவனிடம் சீறி வழக்குரைத்தது நெஞ்சை நெகிழ்வித்து உருக்கும் அன்பே.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...