Wednesday, September 5, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 101














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 11-செய்ந்நன்றி அறிதல்
குறள் - 101

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.

விளக்கம் - நாம் முன்பு ஓர் உதவியும் செய்யாமல் இருக்க பிறர் நமக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் , விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் சமமாகாது.

ஒருவருக்கொருவர் உதவி செய்யாவிட்டால் உலக வாழ்க்கை நடைபெறாது. அவ்வாறு உதவி செய்வோரை மறவாமல் அவர் செய்த நன்மையைப் போற்றுவது சிறந்த கடமையாகும்.அத்தகைய உதவியிலும் பலவகை உண்டு.
இதற்கு முன் அவருக்கு ஒரு உதவியும் செய்யாதிருக்கும் போது காரணமில்லாமல் ஒருவர் மனமுவந்து தாமே உதவி செய்வதும் உண்டு. அந்த உதவிக்கு கைம்மாறு இல்லை. மண்ணுலகம், விண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் அவை அந்த உதவிக்கு ஈடாகாது.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


நன்றி மறவேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

பிறர் நமக்குச் செய்த உதவியை ஒருபோதும் மறக்கக் கூடாது.

செய்த நன்றி யொருநாளும் மறக்கவேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.

ஒருவர் செய்த உதவியை ஒரு பொழுதும் மறவாதே.

நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர்.
- மூதுரை - ஒளவையார்.

நற்குணமுடைய செய்ந்நன்றி பாராட்டும் ஒருவனுக்குச் செய்த உதவியானது, கருங்கல்லின் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல் அழியாது விளங்கும்.நல்லவரல்லாத அன்பில்லாத மனமுடையவருக்குச் செய்த உதவியானது நீர் மேல் எழுத்து போல் அப்பொழுதே அழிந்துவிடும்.

என்று முகமன் இயம்பா தவர்கண்ணுஞ்
சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து.
- நன்னெறி - சிவப்பிரகாசர்.

பூவினால் விளங்குகின்ற கூந்தலை உடையவளே அழகிய கையானது தன்னைப் புகழ்தல் கருதியோ நாவினுக்கு சுவை மிக்க உணவினை ஊட்டுகிறது?புகழ அன்று. அது போல குற்றமற்ற பெரியோர் தமக்கு உபசாரம் சொல்லாதவரிடத்தும் தாமே சென்று வேண்டியது கொடுப்பர். பயன் கருதாது பொருளை வழங்குவர்.

நன்றி பயன்தூக்கி வாழ்தல் நனியினிதே.
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.

பிறர் செய்த உதவியினது பயனை ஆய்ந்தறிந்து வாழ்வது மிகவும் இனிமை தருவதாகும்.

நன்றி பயன்தூக்கா நாணி லியும்.....
எச்சம் இழந்து வாழ்வார்.
- திரிகடுகம்-நல்லாதனார்.

செய்நன்றியின் பயனை அளந்தறியாத நன்றி மறந்த நாணமற்றவன் மக்கட் பேரற்று வருந்துவான்.

நன்றி சாம் நன்றறியாதார் முன்னர்.
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

பிறர் செய்யும் நன்மைகளை நன்மையென அறியாத கீழ் மக்கள் பால் செய்த நன்றி கெடும்.

கைம்மாறு கருதாது, மற்றவர் நமக்குச் செய்த உதவிக்கு மண்ணையும், விண்ணையும் கொடுத்தாலும் அவை ஈடாதல் அரிது.

கைம்மாறு கருதாது பிறருக்கு உதவுவோம்.


பிறர் செய்த உதவியை எப்பொழுதும் மறவாமல் இருப்போம்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்


No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...