Wednesday, September 5, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 95














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 10- இனியவை கூறல்
குறள் - 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

விளக்கம் - பணிவு உடையவனாகவும், இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவருக்கு அணியாம்.மற்றைய பிற அணிகள் எல்லாம் அழகு தருவன அல்ல. அன்பு கலந்த இன்சொல்லை வழங்குவதே அறத்தின் தன்மையாம்.

பேச்சுத்திறன் மக்களுக்கே சிறப்பியல்பாக அமைந்துள்ளது. அதை நல்ல வகையில் பயன்படுத்தினால் நன்மை அடையலாம். அதனால் பலரை மகிழ்விக்க முடியும்.

கேட்குங் காலத்து இனிமை பயக்கும் சொற்கள் இன்சொற்கள் என்பதை வள்ளுவர் ஒப்பவில்லை.
மாசற்ற அன்புள்ளத்திலிருந்து தோன்றிய வஞ்சனை முதலிய தீங்குகள் இல்லாத, அறத்தினை உணர்ந்த சான்றோர்களின் வாயிலிருந்து தோன்றும் சொற்களே உண்மையான இன் சொற்கள் என்கிறார்.
அத்தகு இன்சொல் பேசுதலும், பணிவுமே உண்மையான அணிகலனாகும்.உடல் அழகிற்கு அணியும் மற்றவை உண்மை அணிகள் ஆகா.

கடுஞ்சொற்கள் கொடுஞ் சொற்கள். கேட்போரை சுடுஞ்சொற்கள்.
கடுஞ்சொல் பேசுதல் நம் மனதிலும் வன்மம் வளர்க்கும். மனதை விகாரமாக்கும். கேட்போர் மனதையும் புண்படுத்தும். நரம்பில்லாத நாக்கு தானே என்று வரம்பின்றி வார்த்தைகளைக் கொட்டி விட்டால் பிறகு அள்ளியெடுக்க முடியாது.

பணிவும், இன்சொல்லுமே அழகு.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


ஞயம் பட உரை.
- ஆத்திசூடி - ஒளவையார்.

கேட்பவர்களுக்கு இன்பம் உண்டாகும்படி இனிமையாகப் பேசு.

சுளிக்கச் சொல்லேல்.
- ஆத்திசூடி.

கேட்பவர்கள் சினமும், வெறுப்பும் கொள்ளக் கூடிய சொற்களைப் பேசாதே.

நாவின் நுனியில் நயமிருக்கில் பூமாதும்
நாவினிய நல்லோரும் நண்ணுவார் -நாவின் நுனி
ஆங்கடின மாகிலத் திருவும் சேராள் முன்
ஆங்கே வரு மரணமாம்.
- நீதி வெண்பா.

நாவின் நுனியில் நயமான மகிழத்தக்க இன்சொல் இருக்குமானால் அவரை நல்லவர்களும், பூமகளும் விரும்புவர்.இன் சொற்கள் பேசாதவரிடத்து பூமகளும் பொருந்தமாட்டாள். மரணத்திற்கு இணையான துன்பம் வந்து நேரும்.

இன்சொலான் ஆகுங் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத் தான்
வீவிலா வீடாய் விடும்.
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

இன்சொலால் நட்புரிமை உண்டாகும். அருள் நெஞ்சம் உண்டாகும். அவ்வருள் நெஞ்சத்தால் அழிவில்லாத வீடுபேறு உண்டாகும்.வன்சொலால் கெடு நினைவு மட்டுமே உண்டாகும்.

இன்சொலாலன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே.
_ நன்னெறி - சிவப்பிரகாசர்.

கடலால் சூழப்பட்ட பரந்த இவ்வுலக மாந்தர் இன்சொல்லால் அன்றி வன் சொல்லினால் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்.
- நல்வழி - ஒளவையார்.

வன் சொற்கள் இன்சொற்களை வெல்ல மாட்டா. இன் சொற்களே வெல்லும்.

வன்மத்தை வளர்க்கும்
வன்சொற்களை விடுத்து
இன்பம் பயக்கும்
இன்சொற்களைப் பேசி
இதமாய் பணிவாய் நடந்து
இடம் பிடிப்போம் அனைவரது
இதயங்களில் என்றும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...