Saturday, September 29, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 223














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 23 - ஈகை 
குறள் - 223

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.

விளக்கம் - யான் வறியவன் என்று துன்பம் தரும் சொல்லை இரந்து நிற்கின்றவன் சொல்லுமுன்னே அவன் முகம் நோக்கி குறிப்பறிந்து கொடுத்து உதவுதல் என்பது நல்லகுடிப் பிறப்பு உடையவரிடத்தில் மட்டுமே உண்டு.

பிறருக்குக் குறிப்பறிந்து கொடுத்து அவர் இன்புறுதல் கண்டு ஆனந்தம் அடைவதே ஈகையின் இன்பமாகும்.நற்குடியில் பிறந்தவர்கள் தாமே முன்வந்து ஈந்து மகிழ்வர்.
பிறர் கையேந்தும் வரை காத்திருக்க மாட்டார்கள்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்



அறம் செய விரும்பு
ஈவது விலக்கேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.
தருமம் செய்வதற்கு விரும்பு.

ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதை நீ தடுக்காதே.

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.
வறியவர்கட்குக் கொடுத்து உதவாத உலோபிகளின் பொருளைத் தீயோர் அபகரித்துச் செல்வர்.

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.

அறம் செய்வதை ஒரு பொழுதும் மறக்காதே.

சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
- நல்வழி - ஒளவையார்.

இவ்வுலகில் இரண்டு சாதியின்றி வேறில்லை. வறியவர்களுக்கு ஈந்து உதவுபவர் உயர்குலத்தினர். கொடாதவர் இழிகுலத்தினர்.

என்று முகமன் இயம்பாதவர் கண்ணும் 
சென்றுபொருள் கொடுப்பர் தீதற்றோர்-துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து.
- நன்னெறி - சிவப்பிரகாசர்.

அழகிய கையானது தன்னைப் புகழ்தல் கருதியோ நாவினுக்கு சுவை மிகுந்த உணவை விரும்பி ஊட்டுகிறது? அது போல ஈகைக்குணமுடைய பெரியோர்கள் தனக்கு உபச்சார வார்த்தைகளைச் சொல்லாதவரிடத்தும் தாமே வலியச் சென்று அவர்க்கு வேண்டும் பொருளை வழங்குவர்.

வாங்குங் கவளத்து ஒருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்டு
ஊரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

யானை வாயினின்று தவறிச் சிந்திய உணவினால் அது கவலை கொள்ளாது. ஆனால் அந்த உணவை ஒரு கோடி எறும்புகள் உண்டு உயிர் வாழும். அதுபோல பெருஞ்செல்வம் உடையவர்கள் ஒரு பகுதியை வறியவர்கட்கு ஈந்து மகிழ்ந்தால் எத்தனையோ உயிர்கள் பிழைக்கும் .

இரத்தலின் கொடுமையை உணர்ந்து, வறியவரைக் கையேந்தும் நிலைக்கு ஆளாக்காமல் அவர் தம் நிலையைக் குறிப்பால் உணர்ந்து கொடுப்பதே நற்குடிப் பிறந்தாரின் ஈகைக்குணமாகும்.

சுய விளம்பரத்திற்காகவும், தன் பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளவும் தருமம் செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொள்வது ஈகையன்று.
குறிப்பறிந்து கொடுத்து உதவுவதே ஈகை .
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...