பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 12 - நடுவு நிலைமை.
குறள் - 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
விளக்கம் - முன்னே தான் சமமாக நின்று பின்பு பொருளைச் சீர்தூக்கும் தராசுக்கோல் போல் அமைந்து ஒரு பக்கமாகச் சாயாமல் இருத்தல் சான்றோருக்கு அழகு.
நடுவுநிலையைப் போற்றுவோர் துலாக்கோலை (தராசை) நோக்க வேண்டும். முதலில் தான் சமமாக நின்று பிறகு வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் தன்னிடம் வைத்த பொருளின் எடையை உள்ளது உள்ளவாறே காட்டுகிறது. அதுவே அதன் பெருமைக்கு காரணமாக உள்ளது. அதுபோல் சமநிலையில் நின்று ஒரு சார்பாக இல்லாமல் பாரபட்சம் பாராமல் நடப்பதே நடுவு நிலைமையாளர்கட்கு அழகாகும்.
அறநெறியில் நின்று வாழ்க்கை நடத்தும் போது நடுவுநிலைமை தவறாமல் நீதியைப் போற்ற வேண்டும். நம்மவர், பிறர் என்ற பாகுபாடு இன்றி அறம் எல்லோருக்கும் பொதுவானது என்ற உணர்வோடு நடக்க வேண்டும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
மண்ணின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம்.
- உலகநீதி - உலக நாதர்.
ஒரஞ் சொல்லேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.
எந்நிலையிலும் ஒருதலைப்பட்சமாகப் பேசாதே. நடுவு நிலைமையுடன் நட.
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி யுறும்.
_ நாலுகோடிப் பாடல்கள் - ஒளவையார்.
கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் நடுவுநிலைமையின்றி நாபிறழ்ந்து பேசுதல் கூடாது.
இருவர் தம்சொல்லையு மெழுதரங் கேட்டே
இருவரும் பொருந்த வுரையா ராயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தான்
மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளா கும்மே.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.
இருதிறத்தார் சொற்களையும் ஒரு முறைக்கு ஏழு முறை கேட்டு ஆராய்ந்து, உண்மையுணர்ந்து நீதி வழுவாது, இருவரும் மனம் பொருந்தும்படி நடுவு நிலைமையோடு தீர்ப்பு சொல்ல வேண்டும். அவ்வாறின்றி ஒரு பக்கமாக நடந்து கொண்டால், அநீதியாக வழக்கிலே தோல்வியுற்றவர் மனங்கலங்கி நின்று அழுத கண்ணீரானது தீர்ப்பு கூறியவரின் சந்ததி முழுதையும் அறுக்கின்ற வாளாகும்.
வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.
- நல்வழி - ஒளவையார்.
நடுவுநிலைமையின்றி ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே தீய சக்திகள் வந்து சேரும். வெள்ளெருக்கம் பூ மலரும், பாதாள மூலி என்ற விடக்கொடி படரும். மூதேவி அவர் இல்லத்தில் நிலைபெற்று வாழ்வாள். பாம்புகள் குடியிருக்கும். ஒரஞ் சொன்னவர் குடியும் அழியும் குடும்பமும் பாழாகும்.
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட
தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்.
ஆராய்ச்சி மணியை அடித்த, தன் கன்றினை இழந்த பசுவின் கண்ணீருக்கு இரங்கி தன்னுடைய அருமை மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்றவர் மனுநீதிச் சோழன். தன் மகனென்றும் பாராது நடுவு நிலைமையோடு நீதி தவறாது நடந்து கொண்டதால் தான் இன்றளவும் அவர் புகழ் நிலைத்திருக்கிறது.
தான் சமனாக அமைந்து பின் தன் கண்வைக்கும் பொருளின் எடையைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் பொதுவாக அமைந்து ஒருபக்கம் சாயாமல் இருப்பதே நடுவுநிலைமை போற்றும் சான்றோர்க்கு அணியாகும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment