Wednesday, November 7, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 376















பால் - அறத்துப்பால்
இயல் - ஊழியல்
அதிகாரம் - 38 - ஊழ்
குறள் - 376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

விளக்கம் - ஊழால் தமக்குரியனவல்லாத பொருளை எவ்வளவுதான் பரிந்து போற்றினாலும் நில்லாது போய்விடும். அதே போல் தமக்குரிய பொருளை வெளியே கொண்டு போய்ச் சொரிந்தாலும் அவை நம்மை விட்டு நீங்காது.

ஓரறிவு உயிர்கள் முதல் மக்கள் வரையில் பல வகை உயிர்களுக்கும் உடம்பெடுத்துப் பிறப்பது முதல் இறப்பதுவரை ஒருவகை ஒழுங்கு முறைக்கு உட்பட்டே நடந்து வருகின்றன.

மக்கள் வாழும் வாழ்க்கையில் நிகழும் இன்பம் துன்பம், எழுச்சி வீழ்ச்சி, ஆக்கம் கேடு, நன்மை தீமை, வறுமை உடைமை முதலிய பலவும் ஊழ் வழியே நடந்து வருகிறது.

நன்மை பெறுவதற்குக் காரணமான ஊழ் ஆகூழ் .
நன்மை இழப்பதற்குக் காரணமான ஊழ் போகூழ் என்று கூறப்படும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும்ஊழ்
கூட்டும் படியின்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்.
- நல்வழி - ஒளவையார்.

பூமியிலுள்ள மனிதர்களே கேளுங்கள், தேடுதற்குரிய பொருள்களானவை ஊழின் அளவின்றி சேராவாம். சேர்ந்தாலும் நிலை பெறாவாம். ஆதலினால் மரியாதையே தேடத் தக்கது.

வருந்தி யழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா
-நல்வழி - ஒளவையார்.

ஊழ்வினையால் பரிந்து அழைத்தாலும் வரக்கூடாதவைகள் ஒரு போதும் வாராது. நம்மிடம் பொருந்தியிருப்பவற்றை வேண்டாம் என்று வெறுப்பினும் போகாவாம்.
இருவினைப் பயன்களான இன்ப துன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டு தான் இருக்கும்.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி- தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன்.
_ மூதுரை - ஒளவையார்.

ஆழமாகிய கடலின் நீரை அழுந்தும்படியாக அமிழ்த்தி மொண்டாலும், ஒரு படியானது நான்கு படிநீரை முகவாது. அது போல பெண்டிர்க்கு மிக்க பொருளும், தக்க நாயகனும் கிடைத்தாலும் அவரவருடைய ஊழினளவாகிய பயனே அனுபவிக்கப்படும்.

அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்
அரசரோ டிருந்தர சாளினு மாளுவர்.

குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர்
அற்றைப் பகலே யழியினு மழிவர்
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

வீடுகள் தோறும் இரந்து பிச்சையெடுப்போரும் செல்வம் பெற்று அரசாண்டாலும் ஆளுவர்.

மலையளவு பெரும் பொருள் படைத்தவர்களும் பெற்ற அப்பொழுதே அதனை இழப்பினும் இழப்பர்.
எல்லாம் ஊழின் பயனே ஆகும்.

ஊழின் வலிமையே வலியதாகும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...