Wednesday, November 7, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 701















பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 71 - குறிப்பறிதல்
குறள் - 701

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.

விளக்கம் :- ஒருவர் சொல்லாமல் இருக்க, அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிபவன் எப்போதும் உலகிற்கு ஓர் அணிகலன் ஆவான்.


பொதுவாக உலகத்தில் பிறரோடு பழகுகின்றவர்களுக்கு குறிப்பறிந்து நடக்கும் இயல்பு வேண்டும். பேசுகின்ற பேச்சும், செய்கின்ற செயலும் பிறரிடத்தில் எவ்வாறு பயன் தரும் என்பதை ஆராய வேண்டுமானால் பிறருடைய உள்ளக் கருத்தை உணர வேண்டும். அது ஒரு தனித்திறமை ஆகும்.

உணர்ச்சிமயமாக வாழ்க்கையைக் கழிப்பவர்களால் அது இயலாது. பெரும்பாலும் தம் உணர்ச்சியைப் பிறரிடம் கொட்ட விரைவார்களே அல்லாமல் பிறர் உள்ளம் எவ்வாறு உள்ளது என்பதனைச் சிறிதும் எண்ணமாட்டார்கள். ஆனால் சிலர் மிக வல்லவர்களாய்ப் பயன் பெற்று வாழ்வதற்குக் காரணம், அவர்கள் எப்போதும் பிறர் உள்ளத்தை ஆராய்ந்து உணர்ந்து நடப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அப்படிப்பட்ட குறிப்பறியும் ஆற்றல் உள்ளவர்களைத் தான் உலகம் போற்றுகிறது.

ஒரு சிலர் முகத்தாலும், கண்களாலும் உள்ளத்தின் குறிப்பினை அறியாது பேசி நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துவர்.

முகக்குறிப்பின் மூலம் உள்ளக் குறிப்பினை உணர வல்லவனை ஐயன் இந்த உலகிற்கே அணிகலன் என்றும், தெய்வம் போன்றவன் என்றும் புகழ்கின்றார்.

உள்ளக்குறிப்பு வெளிப்படும் இடம் முகம் ஆகையால் முகத்தை நோக்கியே உணர வேண்டும். முகம் என்று பொதுவாகக் கூறினாலும் கண்களிலும் உள்ளக்குறிப்பு நன்றாக வெளிப்படும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - என்பார்கள்.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் -சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.
- மூதுரை - ஒளவையார்.

கிளைகளையும், கொம்புகளையும் கொண்டு காட்டினுள் நிற்கின்ற மரங்கள் நல்ல மரங்கள் ஆகா. கற்றோர் நிறைந்த அவையின் நடுவே ஒருவர் நீட்டிய ஓலையை வாசிக்க மாட்டாமல் நின்றவனும், பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே நல்ல மரங்களாம்.
ஆரறிவுடைய மனிதராய் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரத்திற்கு ஒப்பாகவே எண்ணப்படுவர்.

நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறியுன்னி அறிவனுந்தன்
புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்
வனைந்தனைய திருமேனி வள்ளலும்அம் மாதவத்தோன்
நினைந்தவெலாம் நினைந்தந்த நெடுஞ்சிலையை நோக்கினான்.
- கம்பராமாயணம் .

மிதிலையில் சனகன் அவையில் குருவாகிய விசுவாமித்திரர் அருகில் இராமபிரான் ஓராசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அந்தப் பெரிய வில்லை பலர் ஒன்றுகூடிக்கொணர்ந்து ஒரு மேடை மீது வைத்தார்கள்.

இந்த வில்லை நீ எடுத்து வளைப்பது போல் ஒடித்து எறிவாய் என்று வாய் விட்டுக் கூறாமல், முகக்குறிப்பால் ராமபிரானை விசுவாமித்திரர் பார்த்தார்.

குறிப்பில் குறிப்புணரும் இராமபிரானும் குருநாதர் நினைந்தபடியே நினைந்து, அந்த வில்லைப் பார்க்கின்றார்.

இது பழைய வில். உனக்குப் பரசுராமர் கோதண்டம் தருவார். ஆதலால் இதை வளைக்காதே ஒடித்து விடு என்றெல்லாம் நினைந்து இராமரைப் பார்த்தார் விசுவாமித்திரர் .அவர் நினைந்த அத்தனையும் இராமர் குருநாதரின் முகக்குறிப்பால் தெரிந்து கொண்டார்.

இதே கருத்தைத்தான்

முனிகனு சைக தெலிஸி சிவதநுசு விரிசே
சமயமு அலகலல் லாடககனி ஆராண்முனி
எடுபொங்கெனோ ?
- தியாகப்பிரம்மம்

விசுவாமித்திர முனிவரின் சைகையை அறிந்து இராமர் சிவதநுசை ஒடித்து விட்டார் என்கின்றது தியாகப்பிரம்மம்.

ஒருவர் வாய் திறந்து கூறாமலேயே அவர் மனத்தில் நிகழ்வதை குறிப்பால் அறிதல் வேண்டும். அப்படி அறிய வல்லவன் எக்காலத்தும் வற்றாத நீரினையுடைய கடல் சூழ்ந்த உலகுக்கு ஓர் அணியாவான்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...