பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - 28 - கூடா ஒழுக்கம் .
குறள் - 278
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
விளக்கம் :- தம்முடைய மனத்திலே மாசு படிந்து கிடக்க, மாட்சிமைப்பட்ட தவக் கோலம் பூண்டு நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் பொய்யான வஞ்சக மாந்தர் பலர் உலகில் உள்ளனர்.
தவ ஒழுக்கம் உடையவர்களுக்கே தவக் கோலம் பொருந்தும். தீயவஞ்சக எண்ணம் உடையவர்கள் மனதில் ஏராளமான அழுக்குகளை வைத்துக் கொண்டு , புண்ணிய தலங்களில் நீராடி தம்மை தவசிகள் போல் காட்டிக் கொள்வது குற்றம். தீங்கு செய்வதற்கு அந்த கோலத்தை பயன்படுத்துவது வஞ்சகமே ஆகும். புறத்தே நீராடித் தூய்மை காட்டி அகத்தே அழுக்குகளை மறைத்து வாழ்வோர் அநேகம் பேர் உள்ளனர். வெறுந் தோற்றத்தைக் கண்டு நாம் ஏமாறக் கூடாது.
மனத்தை வசப்படுத்தும் ஆற்றல் உடையவரே உண்மையான தவயோகிகள்.
மனத்தை நல்வழிப்படுத்தாது, பொய் வேடம் புனைவோரிடம் வஞ்சிக்கும் தன்மை மிகுந்திருக்கும். தவக்கோலத்தை நம்பி ஒரு தீங்கும் இல்லை எனக் கருதி மகளிரும், மற்றவரும் ஐயமின்றி நெருங்கி அன்புடன் பழகுவார்கள். அந்த வாய்ப்பை தீயொழுக்கத்திற்குப் பயன்படுத்தும் போலிகளை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
நம் ஐயன் வள்ளுவன் சொன்னது போல்
மனத்துக் கண் மாசிலன் ஆக இருப்பவனே அறமுடையவன்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
நேரா நோன்பு சீரா காது .
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.
மனம் பொருந்திச் செய்யாத தவம் செம்மையாக முடியாது.
யானைக் கில்லை தானமுந் தருமமும்.
பூனைக் கில்லை தவமுந் தயையும்.
_ நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.
யானைக்குக் கை நீண்டிருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை.
பூனை கண்ணை மூடிக் கொண்டு இருந்தாலும் அது தவம் செய்தலும், உயிர்களிடத்து தயை கொள்ளுதலும் இல்லை.
தவ ஒழுக்கமும், சீவகாருண்யமும் உடையவர் போல் காணப்படுபவர் அவை இல்லாமலும் இருப்பர்.
வேடத்தினாலேயே ஒருவரை மதிக்கலாகாது என்பதனை இவ்விரு வரிகளும் உணர்த்துகின்றன.
இத்தரையோர் தம்மில் இருவரே மேலானோர்
சித்தி ரசவாதி சிவயோகி- முத்தனையாய்!
நல்குரவு முற்பவமு நாசம் புரிவரே
அல்லவர் வீரியக் கீடம்.
- நீதி வெண்பா
முத்தினைப் போன்றவளே! இவ்வுலகத்தில் இல்லாமையையும், பிறப்பையும் ஒழிக்கின்ற சித்தர்களும், யோகிகளுமே மேன்மையானவர்கள். இவ்விருவரல்லாத பொய் வேடம் புனையும் மற்றையோர் புழுக்களுக்கு ஒப்பாவர்.
ஞானமில்லா வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனமதே செய்து இரந்துண்டு இருப்பினும்
மானநலம் கெடும் அப்புவி யாதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
- திருமந்திரம் - திருமூலர்.
பொய்யான பொருந்தாத கோலங்களைப் புனைந்து கொண்டு, இழிவான பழிக்கத்தக்க செயல்களைச் செய்கின்றனர். மானம் எனும் பண்பு நலன் கெட்டு விடுமே என்று நினைக்கவில்லை. உண்மையில் இன்ப வாழ்வு வேண்டினால் பொய்யான ஒப்பனைக்கோலங்களை, ஈனச் செயல்களை ஒழிக்க வேண்டும்.
புனித நீராடி பொய் வேடம் பூண்டு தவசியாய்க் காட்டிக் கொள்வதை விட நன்னெறிகளைக் கடைபிடித்து நல்லவனாய் வாழ்வதே நன்று.
மனமது செம்மையானால்
மந்திரம் தேவையில்லை.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment