Wednesday, November 7, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 638
















பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 64 - அமைச்சு
குறள் - 638

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

விளக்கம் :- அறிந்து சொல்பவரின் அறிவுரையை மதிக்காது, தானும் அறியாமல் இருக்கும் அரசனுக்கு உறுதி தருவனவற்றை எடுத்துரைத்தல் அமைச்சனின் கடமையாகும்.


தலைவனுக்குத் தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அமைச்சன் வேண்டும். கல்வி, கேள்வி மற்றும் அனுபவ ஞானம் உள்ளவனாயும், மதிநுட்பம் மிகுந்தவனாகவும் இருத்தல் வேண்டும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

அமைச்சனுக்கு அழகாவது மேல் வருங் காரியத்தை முன்னறிந்து அரசனுக்குச் சொல்லுதல்.

கதங்கொள் சீற்றத்தை யாற்றுவா னினியன கழறிப்
பதங்கொள் பாகனு மந்திரி யொத்தனன் பன்னூல்
விதங்க ளாலவன் மெல்லென மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை யொத்ததோர் யானை.
- கம்பராமாயணம் .

யானையானது மதங்கொண்ட போது அதன் வழி சென்று நல்வழிக்குக் கொண்டு வரும் பாகனைப் போல அமைச்சனானவன் அரசன் வெகுண்ட போதுஇதங்கள் கூறி நல்வழிப்படுத்துவர்.

செவிசுடச் சென்றாங்கு இடித்தறிவு மூட்டி
வெகுளினும் வாய்வெரீஇப் பேரா – கவிழ்மதத்த
கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும்
அம்மாண் பினவே அமைச்சு.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

பொழியும் மதத்தினையுடைய யானையானது தன் வசம் அடங்காமல் ஓடும் போது அதனை விடாது சென்று அங்குசம் இட்டு இடித்து அதன் மதத்தை அடக்கி இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பாகனைப் போல, அரசன் வெகுண்டு தன்னிலை தவறுங்கால் அவன் செவிகளில் நன்மொழிகளை இடித்துரைத்து அறிவு புகட்டி அவனை தன்னியல்பிற்கு கொணர்பவராக அமைச்சர் இருத்தல் வேண்டும்.

மன்னவர் மனத்தையுங் கால தேசத்தையும்
வாழ்குடி படைத் திறமையும்
மந்திரா லோசனையு மெல்லா மறிந்தவன்
வளமான மதி மந்திரி .
-அறப்பளீசுர சதகம் - அம்பலவாணக் கவிராயர்.

மன்னவரின் மனத்தை நன்கறிந்து, நாடு, நாட்டு மக்கள், படை பலம் முதலியவற்றில் ஆலோசனை கூறுதல் முதலிய எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனே மதிநுட்பமுடைய நல்ல அமைச்சனாவான்.

அரசனுக்கு உறுதி தருவனவற்றை எடுத்துரைத்தல் நல் அமைச்சனின் தலையாய கடமையாகும்.
அமைச்சன் அறநெறிகளை அறிந்தவனாகவும், அறிவு நிரம்பியவனாகவும் இருத்தல் வேண்டும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...