பால் - இன்பத்துப்பால்
இயல் - களவியல்
அதிகாரம் - 110 - குறிப்பறிதல்.
குறள் - 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
விளக்கம் :- அவள் என்னைப் பார்த்தாள். நான் பார்த்ததும், நோக்கித் தலை குனிந்தாள். அது அவள் வளர்க்கும் அன்புக்கு வார்க்கின்ற நீராகும்.
திருக்குறளில் இரண்டு முறை வரும் அதிகாரம் குறிப்பறிதல். பொருட்பால் அமைச்சியலில் 71 வது அதிகாரமாகவும், இன்பத்துப்பால் - களவியலில் 110வது அதிகாரமாகவும் குறிப்பறிதல் இடம் பெற்றுள்ளது.
காதலின் சிறப்புக்குக் காரணம் முழு மன உணர்வே ஆகும். அன்பின் எழுச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் சேர்க்கை இன்றியமையாதது. அணு முதல் அண்டம் வரை சேர்க்கை பெற்றிருத்தல் வெள்ளிடை மலை. சேர்க்கை இல்லையேல் வளர்ச்சி இல்லை. மக்கள் சேர்க்கை மகத்தானது. இருமனமொத்த அன்பால், தூய காதலால் விளைவது.
காதல் கொண்ட தலைவி தானே முன்வந்து என்னை நோக்கினாள். நோக்கிய பின் நாணித் தலைகுனிந்து நின்றாள். அது அவள் கொள்ளும் காதலாகிய நட்புப் பயிர் வளர அவள் பாய்ச்சிய நீராகும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
நின்னையவன் நோக்கினான்
நீயவனை நோக்கி நின்றாய்
அன்னதொரு நோக்கினிலே
ஆவி கலந்து விட்டீர்.
- குயில்பாட்டு - பாரதியார்.
நீ அவனைப் பார்த்தாய். அவன் உன்னைப் பார்த்தான். அந்த ஒரு பார்வையிலே உயிரும், உடலும் இரண்டறக் கலந்து விட்டதாகக் குயில் பாட்டில் பாரதியார் கூறுகிறார்.
எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
- கம்பராமாயணம் .
மிதிலை செல்லும் வழியில் கன்னி மாடத்து இருந்த சீதையை நோக்குகின்றார் இராமபிரான். சீதாதேவியும் அண்ணலை நோக்குகின்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் மாறிப் புக்கும் இதயம் எய்தினர். இருவருக்கும் ஒரே ஒரு பார்வையில் உணர்வும் ஒன்றிவிட்டதாம்.
நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டு மளவில் திறந்ததே -பூண்டதோர்
அன்பின்தாழ் கூந்தலால் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்த்த கதவு.
- நளவெண்பா - புகழேந்திப் புலவர்.
நளன் கண்ணாகிய தாமரை மலரை, தமயந்தியின் கண்ணாகிய கருங்குவளை மலர் போய்ச் சேர்ந்தவுடன், நீண்ட கூந்தலையுடைய தமயந்தியின் உள்ளம் என்னும் அறையானது கற்பு என்னும் தாழிட்டுப் பூட்டியிருந்த கதவானது காதல் என்னும் பேரன்பின் வேகத்தால் திறந்து கொண்டது.
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
- குறுந்தொகை - செம்புலப் பெயல் நீரார்.
அன்பு கொண்ட உள்ளமானது செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல இரண்டறக் கலந்து விடும்.
கண் ஆர்
வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்
மயல் ஊர ரவர் மகள்.
- திணைமாலை நூற்றைம்பது - கணிமேதையார்.
தன் கண்களில் நிறைந்து விளங்கும் தலைவனுக்காக மாலைகள் தொடுத்து மகிழ்ந்திருப்பாள் தலைவி என்று கூறுகிறார்.
ஒத்த அன்புடைய தலைவன் தலைவியின் பார்வையே காதல் பயிர் வளர ஊற்றப்படும் நீராகும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment