Wednesday, November 7, 2018

அவள் அழகி




பருத்திப்பூ ஒருத்தி பட்டாடைஉடுத்தி வந்தாள்
பவளக்கொடி அவளும் மகரக்குழை மாட்டி வந்தாள்
மந்தார தனவிளக்கு மஞ்சள்ப்பூசி  குளித்து வந்தாள்
வேல்வீசும் விழியழகி வெண்மயிலாய்ஆடி வந்தாள்  
தேம்பி அழுகவிட்டாள்தேகம் இளைக்கவிட்டாள் பாரதியை பாடும்மென்னைபட்டினத்தார் ஆக்கிவிட்டாள்
கனவில் செய்த காதலுக்கு எவளைச்சென்று நோகுவதுஅலுவல் அங்கு குவிந்திருக்குஇப்படியா தூங்குவது...   
நன்றிகளுடன் _ இல்மீ உமர்          


தூரிகை














.






குறள்வழிச் சிந்தனைகள் - 1093
















பால் - இன்பத்துப்பால்
இயல் - களவியல்
அதிகாரம் - 110 - குறிப்பறிதல்.
குறள் - 1093

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

விளக்கம் :- அவள் என்னைப் பார்த்தாள். நான் பார்த்ததும், நோக்கித் தலை குனிந்தாள். அது அவள் வளர்க்கும் அன்புக்கு வார்க்கின்ற நீராகும்.

திருக்குறளில் இரண்டு முறை வரும் அதிகாரம் குறிப்பறிதல். பொருட்பால் அமைச்சியலில் 71 வது அதிகாரமாகவும், இன்பத்துப்பால் - களவியலில் 110வது அதிகாரமாகவும் குறிப்பறிதல் இடம் பெற்றுள்ளது.

காதலின் சிறப்புக்குக் காரணம் முழு மன உணர்வே ஆகும். அன்பின் எழுச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் சேர்க்கை இன்றியமையாதது. அணு முதல் அண்டம் வரை சேர்க்கை பெற்றிருத்தல் வெள்ளிடை மலை. சேர்க்கை இல்லையேல் வளர்ச்சி இல்லை. மக்கள் சேர்க்கை மகத்தானது. இருமனமொத்த அன்பால், தூய காதலால் விளைவது.

காதல் கொண்ட தலைவி தானே முன்வந்து என்னை நோக்கினாள். நோக்கிய பின் நாணித் தலைகுனிந்து நின்றாள். அது அவள் கொள்ளும் காதலாகிய நட்புப் பயிர் வளர அவள் பாய்ச்சிய நீராகும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


நின்னையவன் நோக்கினான்
நீயவனை நோக்கி நின்றாய்
அன்னதொரு நோக்கினிலே 
ஆவி கலந்து விட்டீர்.
- குயில்பாட்டு - பாரதியார்.

நீ அவனைப் பார்த்தாய். அவன் உன்னைப் பார்த்தான். அந்த ஒரு பார்வையிலே உயிரும், உடலும் இரண்டறக் கலந்து விட்டதாகக் குயில் பாட்டில் பாரதியார் கூறுகிறார்.

எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
- கம்பராமாயணம் .

மிதிலை செல்லும் வழியில் கன்னி மாடத்து இருந்த சீதையை நோக்குகின்றார் இராமபிரான். சீதாதேவியும் அண்ணலை நோக்குகின்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் மாறிப் புக்கும் இதயம் எய்தினர். இருவருக்கும் ஒரே ஒரு பார்வையில் உணர்வும் ஒன்றிவிட்டதாம்.

நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டு மளவில் திறந்ததே -பூண்டதோர்
அன்பின்தாழ் கூந்தலால் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்த்த கதவு.
- நளவெண்பா - புகழேந்திப் புலவர்.

நளன் கண்ணாகிய தாமரை மலரை, தமயந்தியின் கண்ணாகிய கருங்குவளை மலர் போய்ச் சேர்ந்தவுடன், நீண்ட கூந்தலையுடைய தமயந்தியின் உள்ளம் என்னும் அறையானது கற்பு என்னும் தாழிட்டுப் பூட்டியிருந்த கதவானது காதல் என்னும் பேரன்பின் வேகத்தால் திறந்து கொண்டது.

செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
- குறுந்தொகை - செம்புலப் பெயல் நீரார்.

அன்பு கொண்ட உள்ளமானது செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல இரண்டறக் கலந்து விடும்.

கண் ஆர்
வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்
மயல் ஊர ரவர் மகள்.
- திணைமாலை நூற்றைம்பது - கணிமேதையார்.

தன் கண்களில் நிறைந்து விளங்கும் தலைவனுக்காக மாலைகள் தொடுத்து மகிழ்ந்திருப்பாள் தலைவி என்று கூறுகிறார்.

ஒத்த அன்புடைய தலைவன் தலைவியின் பார்வையே காதல் பயிர் வளர ஊற்றப்படும் நீராகும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்



குறள்வழிச் சிந்தனைகள் - 376















பால் - அறத்துப்பால்
இயல் - ஊழியல்
அதிகாரம் - 38 - ஊழ்
குறள் - 376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

விளக்கம் - ஊழால் தமக்குரியனவல்லாத பொருளை எவ்வளவுதான் பரிந்து போற்றினாலும் நில்லாது போய்விடும். அதே போல் தமக்குரிய பொருளை வெளியே கொண்டு போய்ச் சொரிந்தாலும் அவை நம்மை விட்டு நீங்காது.

ஓரறிவு உயிர்கள் முதல் மக்கள் வரையில் பல வகை உயிர்களுக்கும் உடம்பெடுத்துப் பிறப்பது முதல் இறப்பதுவரை ஒருவகை ஒழுங்கு முறைக்கு உட்பட்டே நடந்து வருகின்றன.

மக்கள் வாழும் வாழ்க்கையில் நிகழும் இன்பம் துன்பம், எழுச்சி வீழ்ச்சி, ஆக்கம் கேடு, நன்மை தீமை, வறுமை உடைமை முதலிய பலவும் ஊழ் வழியே நடந்து வருகிறது.

நன்மை பெறுவதற்குக் காரணமான ஊழ் ஆகூழ் .
நன்மை இழப்பதற்குக் காரணமான ஊழ் போகூழ் என்று கூறப்படும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும்ஊழ்
கூட்டும் படியின்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்.
- நல்வழி - ஒளவையார்.

பூமியிலுள்ள மனிதர்களே கேளுங்கள், தேடுதற்குரிய பொருள்களானவை ஊழின் அளவின்றி சேராவாம். சேர்ந்தாலும் நிலை பெறாவாம். ஆதலினால் மரியாதையே தேடத் தக்கது.

வருந்தி யழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா
-நல்வழி - ஒளவையார்.

ஊழ்வினையால் பரிந்து அழைத்தாலும் வரக்கூடாதவைகள் ஒரு போதும் வாராது. நம்மிடம் பொருந்தியிருப்பவற்றை வேண்டாம் என்று வெறுப்பினும் போகாவாம்.
இருவினைப் பயன்களான இன்ப துன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டு தான் இருக்கும்.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி- தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன்.
_ மூதுரை - ஒளவையார்.

ஆழமாகிய கடலின் நீரை அழுந்தும்படியாக அமிழ்த்தி மொண்டாலும், ஒரு படியானது நான்கு படிநீரை முகவாது. அது போல பெண்டிர்க்கு மிக்க பொருளும், தக்க நாயகனும் கிடைத்தாலும் அவரவருடைய ஊழினளவாகிய பயனே அனுபவிக்கப்படும்.

அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்
அரசரோ டிருந்தர சாளினு மாளுவர்.

குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர்
அற்றைப் பகலே யழியினு மழிவர்
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

வீடுகள் தோறும் இரந்து பிச்சையெடுப்போரும் செல்வம் பெற்று அரசாண்டாலும் ஆளுவர்.

மலையளவு பெரும் பொருள் படைத்தவர்களும் பெற்ற அப்பொழுதே அதனை இழப்பினும் இழப்பர்.
எல்லாம் ஊழின் பயனே ஆகும்.

ஊழின் வலிமையே வலியதாகும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 638
















பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 64 - அமைச்சு
குறள் - 638

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

விளக்கம் :- அறிந்து சொல்பவரின் அறிவுரையை மதிக்காது, தானும் அறியாமல் இருக்கும் அரசனுக்கு உறுதி தருவனவற்றை எடுத்துரைத்தல் அமைச்சனின் கடமையாகும்.


தலைவனுக்குத் தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அமைச்சன் வேண்டும். கல்வி, கேள்வி மற்றும் அனுபவ ஞானம் உள்ளவனாயும், மதிநுட்பம் மிகுந்தவனாகவும் இருத்தல் வேண்டும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

அமைச்சனுக்கு அழகாவது மேல் வருங் காரியத்தை முன்னறிந்து அரசனுக்குச் சொல்லுதல்.

கதங்கொள் சீற்றத்தை யாற்றுவா னினியன கழறிப்
பதங்கொள் பாகனு மந்திரி யொத்தனன் பன்னூல்
விதங்க ளாலவன் மெல்லென மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை யொத்ததோர் யானை.
- கம்பராமாயணம் .

யானையானது மதங்கொண்ட போது அதன் வழி சென்று நல்வழிக்குக் கொண்டு வரும் பாகனைப் போல அமைச்சனானவன் அரசன் வெகுண்ட போதுஇதங்கள் கூறி நல்வழிப்படுத்துவர்.

செவிசுடச் சென்றாங்கு இடித்தறிவு மூட்டி
வெகுளினும் வாய்வெரீஇப் பேரா – கவிழ்மதத்த
கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும்
அம்மாண் பினவே அமைச்சு.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

பொழியும் மதத்தினையுடைய யானையானது தன் வசம் அடங்காமல் ஓடும் போது அதனை விடாது சென்று அங்குசம் இட்டு இடித்து அதன் மதத்தை அடக்கி இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பாகனைப் போல, அரசன் வெகுண்டு தன்னிலை தவறுங்கால் அவன் செவிகளில் நன்மொழிகளை இடித்துரைத்து அறிவு புகட்டி அவனை தன்னியல்பிற்கு கொணர்பவராக அமைச்சர் இருத்தல் வேண்டும்.

மன்னவர் மனத்தையுங் கால தேசத்தையும்
வாழ்குடி படைத் திறமையும்
மந்திரா லோசனையு மெல்லா மறிந்தவன்
வளமான மதி மந்திரி .
-அறப்பளீசுர சதகம் - அம்பலவாணக் கவிராயர்.

மன்னவரின் மனத்தை நன்கறிந்து, நாடு, நாட்டு மக்கள், படை பலம் முதலியவற்றில் ஆலோசனை கூறுதல் முதலிய எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனே மதிநுட்பமுடைய நல்ல அமைச்சனாவான்.

அரசனுக்கு உறுதி தருவனவற்றை எடுத்துரைத்தல் நல் அமைச்சனின் தலையாய கடமையாகும்.
அமைச்சன் அறநெறிகளை அறிந்தவனாகவும், அறிவு நிரம்பியவனாகவும் இருத்தல் வேண்டும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 118
















பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 12 - நடுவு நிலைமை.
குறள் - 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம் - முன்னே தான் சமமாக நின்று பின்பு பொருளைச் சீர்தூக்கும் தராசுக்கோல் போல் அமைந்து ஒரு பக்கமாகச் சாயாமல் இருத்தல் சான்றோருக்கு அழகு.


நடுவுநிலையைப் போற்றுவோர் துலாக்கோலை (தராசை) நோக்க வேண்டும். முதலில் தான் சமமாக நின்று பிறகு வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் தன்னிடம் வைத்த பொருளின் எடையை உள்ளது உள்ளவாறே காட்டுகிறது. அதுவே அதன் பெருமைக்கு காரணமாக உள்ளது. அதுபோல் சமநிலையில் நின்று ஒரு சார்பாக இல்லாமல் பாரபட்சம் பாராமல் நடப்பதே நடுவு நிலைமையாளர்கட்கு அழகாகும்.

அறநெறியில் நின்று வாழ்க்கை நடத்தும் போது நடுவுநிலைமை தவறாமல் நீதியைப் போற்ற வேண்டும். நம்மவர், பிறர் என்ற பாகுபாடு இன்றி அறம் எல்லோருக்கும் பொதுவானது என்ற உணர்வோடு நடக்க வேண்டும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


மண்ணின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம்.
- உலகநீதி - உலக நாதர்.

ஒரஞ் சொல்லேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.
எந்நிலையிலும் ஒருதலைப்பட்சமாகப் பேசாதே. நடுவு நிலைமையுடன் நட.

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி யுறும்.
_ நாலுகோடிப் பாடல்கள் - ஒளவையார்.

கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் நடுவுநிலைமையின்றி நாபிறழ்ந்து பேசுதல் கூடாது.

இருவர் தம்சொல்லையு மெழுதரங் கேட்டே
இருவரும் பொருந்த வுரையா ராயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தான்
மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளா கும்மே.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

இருதிறத்தார் சொற்களையும் ஒரு முறைக்கு ஏழு முறை கேட்டு ஆராய்ந்து, உண்மையுணர்ந்து நீதி வழுவாது, இருவரும் மனம் பொருந்தும்படி நடுவு நிலைமையோடு தீர்ப்பு சொல்ல வேண்டும். அவ்வாறின்றி ஒரு பக்கமாக நடந்து கொண்டால், அநீதியாக வழக்கிலே தோல்வியுற்றவர் மனங்கலங்கி நின்று அழுத கண்ணீரானது தீர்ப்பு கூறியவரின் சந்ததி முழுதையும் அறுக்கின்ற வாளாகும்.

வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.
- நல்வழி - ஒளவையார்.

நடுவுநிலைமையின்றி ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே தீய சக்திகள் வந்து சேரும். வெள்ளெருக்கம் பூ மலரும், பாதாள மூலி என்ற விடக்கொடி படரும். மூதேவி அவர் இல்லத்தில் நிலைபெற்று வாழ்வாள். பாம்புகள் குடியிருக்கும். ஒரஞ் சொன்னவர் குடியும் அழியும் குடும்பமும் பாழாகும்.


வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட
தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்.

ஆராய்ச்சி மணியை அடித்த, தன் கன்றினை இழந்த பசுவின் கண்ணீருக்கு இரங்கி தன்னுடைய அருமை மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்றவர் மனுநீதிச் சோழன். தன் மகனென்றும் பாராது நடுவு நிலைமையோடு நீதி தவறாது நடந்து கொண்டதால் தான் இன்றளவும் அவர் புகழ் நிலைத்திருக்கிறது.

தான் சமனாக அமைந்து பின் தன் கண்வைக்கும் பொருளின் எடையைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் பொதுவாக அமைந்து ஒருபக்கம் சாயாமல் இருப்பதே நடுவுநிலைமை போற்றும் சான்றோர்க்கு அணியாகும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 278















பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - 28 - கூடா ஒழுக்கம் .
குறள் - 278

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

விளக்கம் :- தம்முடைய மனத்திலே மாசு படிந்து கிடக்க, மாட்சிமைப்பட்ட தவக் கோலம் பூண்டு நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் பொய்யான வஞ்சக மாந்தர் பலர் உலகில் உள்ளனர்.

தவ ஒழுக்கம் உடையவர்களுக்கே தவக் கோலம் பொருந்தும். தீயவஞ்சக எண்ணம் உடையவர்கள் மனதில் ஏராளமான அழுக்குகளை வைத்துக் கொண்டு , புண்ணிய தலங்களில் நீராடி தம்மை தவசிகள் போல் காட்டிக் கொள்வது குற்றம். தீங்கு செய்வதற்கு அந்த கோலத்தை பயன்படுத்துவது வஞ்சகமே ஆகும். புறத்தே நீராடித் தூய்மை காட்டி அகத்தே அழுக்குகளை மறைத்து வாழ்வோர் அநேகம் பேர் உள்ளனர். வெறுந் தோற்றத்தைக் கண்டு நாம் ஏமாறக் கூடாது.

மனத்தை வசப்படுத்தும் ஆற்றல் உடையவரே உண்மையான தவயோகிகள்.
மனத்தை நல்வழிப்படுத்தாது, பொய் வேடம் புனைவோரிடம் வஞ்சிக்கும் தன்மை மிகுந்திருக்கும். தவக்கோலத்தை நம்பி ஒரு தீங்கும் இல்லை எனக் கருதி மகளிரும், மற்றவரும் ஐயமின்றி நெருங்கி அன்புடன் பழகுவார்கள். அந்த வாய்ப்பை தீயொழுக்கத்திற்குப் பயன்படுத்தும் போலிகளை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

நம் ஐயன் வள்ளுவன் சொன்னது போல் 
மனத்துக் கண் மாசிலன் ஆக இருப்பவனே அறமுடையவன்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்

நேரா நோன்பு சீரா காது .
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

மனம் பொருந்திச் செய்யாத தவம் செம்மையாக முடியாது.

யானைக் கில்லை தானமுந் தருமமும்.
பூனைக் கில்லை தவமுந் தயையும்.
_ நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

யானைக்குக் கை நீண்டிருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை.

பூனை கண்ணை மூடிக் கொண்டு இருந்தாலும் அது தவம் செய்தலும், உயிர்களிடத்து தயை கொள்ளுதலும் இல்லை.

தவ ஒழுக்கமும், சீவகாருண்யமும் உடையவர் போல் காணப்படுபவர் அவை இல்லாமலும் இருப்பர்.
வேடத்தினாலேயே ஒருவரை மதிக்கலாகாது என்பதனை இவ்விரு வரிகளும் உணர்த்துகின்றன.

இத்தரையோர் தம்மில் இருவரே மேலானோர்
சித்தி ரசவாதி சிவயோகி- முத்தனையாய்!
நல்குரவு முற்பவமு நாசம் புரிவரே
அல்லவர் வீரியக் கீடம்.
- நீதி வெண்பா

முத்தினைப் போன்றவளே! இவ்வுலகத்தில் இல்லாமையையும், பிறப்பையும் ஒழிக்கின்ற சித்தர்களும், யோகிகளுமே மேன்மையானவர்கள். இவ்விருவரல்லாத பொய் வேடம் புனையும் மற்றையோர் புழுக்களுக்கு ஒப்பாவர்.

ஞானமில்லா வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனமதே செய்து இரந்துண்டு இருப்பினும்
மானநலம் கெடும் அப்புவி யாதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
- திருமந்திரம் - திருமூலர்.

பொய்யான பொருந்தாத கோலங்களைப் புனைந்து கொண்டு, இழிவான பழிக்கத்தக்க செயல்களைச் செய்கின்றனர். மானம் எனும் பண்பு நலன் கெட்டு விடுமே என்று நினைக்கவில்லை. உண்மையில் இன்ப வாழ்வு வேண்டினால் பொய்யான ஒப்பனைக்கோலங்களை, ஈனச் செயல்களை ஒழிக்க வேண்டும்.

புனித நீராடி பொய் வேடம் பூண்டு தவசியாய்க் காட்டிக் கொள்வதை விட நன்னெறிகளைக் கடைபிடித்து நல்லவனாய் வாழ்வதே நன்று.

மனமது செம்மையானால்
மந்திரம் தேவையில்லை.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 36
















பால் - அறத்துப்பால்
இயல் - பாயிரம்
அதிகாரம் - 4 - அறன்வலியுறுத்தல்.
குறள் - 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

விளக்கம் :-பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அறஞ்செய்தலை தொடர்ந்து செய்து கொண்டு போக வேண்டும். அதுவே உடல் அழியுங் காலத்தில் உயிர்க்கு உற்ற துணையாக வந்து நிற்கும்.


அறம் என்பது யாது? செயலா? சொல்லா? எண்ணமா? மூன்றுமே ஆகும். மூன்றனுள்ளும் செயலுக்கும், சொல்லுக்கும் எண்ணமே அடிப்படை ஆகையால், எண்ணத்தின் தூய்மையே முதன்மையானது.

அறம் செய்வதில் தயக்கமோ, காலம் தாழ்த்தலோ, ஒத்தி வைத்தலோ கூடாது. இப்போது இளமைப் பருவம் ஆகையால் அறத்தைப் பற்றிக் கவலை வேண்டா, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று புறக்கணிக்கக் கூடாது. இளமை முதற்கொண்டே அறம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் அறமே, அழிவு வரும் காலத்தில் அழியாத் துணையாக நிற்கும்.

அகத்தே எண்ணும் எண்ணங்களின் தூய்மையாலும், நெஞ்சின் இன்ப, துன்ப உணர்வுகளாலும் அறத்தை அறியக்கூடுமே அல்லாமல் புறத்தே உள்ள உயர்வு தாழ்வுகளை வைத்து அறத்தை அளந்தறிய முடியாது.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


அறம் செய விரும்பு.
அறனை மறவேல்
தானமது விரும்பு
- ஆத்திசூடி - ஒளவையார்.

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.

அறம் செய்வதை ஒருபோதும் மறக்காதே.

இரந்தோர்க் கீவது முடையோர் கடனே.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்

இரப்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் தருமம் செய்வது பொருளுடையோரின் கடமையாகும்.

கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.
- நன்னெறி - சிவப்பிரகாசர்.

கொண்டு செல்கின்ற கொடிய நமன் அணுகுவதற்கு முன்னே மனங் கனிந்து அறம் செய்து உய்ய வேண்டும்.
வெள்ளம் வருவதற்கு முன் கரையைக் கட்டி வைக்காதவர் அது பெருக்கெடுத்து வரும் போது ஒன்றும் செய்ய முடியாது. எனவே காலன் வருமுன்னே அறம் செய்து பிழைக்கக்கடவாய்.

தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள் இறைமையுஞ் செய்து - மனக்கினிய
போகந் தருதலால் பொன்னே அறத்துணையோடு
ஏகமா நண்பொன்று மில்.
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்

திருமகளைப் போன்றவளே! செய்தவனுக்குத் துணையாக இருந்து, அவனைப் பலரும் அறியுமாறு செய்து, சுற்றத்தார் பலருக்கும் தலைவனாகவும் செய்து, மனத்திற்கினிமையான செல்வத்தினையும் கொடுப்பதால் அறம் செய்வதே அனைத்திலும் சிறந்தது. அதற்கு இணையான நட்பினர் ஒருவரும் இல்லை.

மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவம்அடக்கம்
செம்மை யொன்றின்மை துறவுடைமை நன்மை
திறம்பா விரதந் தரித்த லோடின்ன
அறம் பத்தும் ஆன்ற குணம்.
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.

உண்மையும், பொறுமையும், பெருமையும், தவமும், அடக்கமும், நடுவு நிலைமையும், தனக்கென ஒன்று இல்லாதிருத்தலும் , பற்று விடுதலும், நல்லன செய்தலும், மாறுபடாத விரதங்களை மேற்கொள்ளுதலும் ஆகிய பத்து அறங்களும் மேலானவை என்று அறநெறிச்சாரம் கூறுகின்றது.

அறநெறியில் நின்று அறம் செய்வதை வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செய்தல் வேண்டும். தள்ளிப் போடாமல் இயன்றவரை செய்தல் வேண்டும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 701















பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 71 - குறிப்பறிதல்
குறள் - 701

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.

விளக்கம் :- ஒருவர் சொல்லாமல் இருக்க, அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிபவன் எப்போதும் உலகிற்கு ஓர் அணிகலன் ஆவான்.


பொதுவாக உலகத்தில் பிறரோடு பழகுகின்றவர்களுக்கு குறிப்பறிந்து நடக்கும் இயல்பு வேண்டும். பேசுகின்ற பேச்சும், செய்கின்ற செயலும் பிறரிடத்தில் எவ்வாறு பயன் தரும் என்பதை ஆராய வேண்டுமானால் பிறருடைய உள்ளக் கருத்தை உணர வேண்டும். அது ஒரு தனித்திறமை ஆகும்.

உணர்ச்சிமயமாக வாழ்க்கையைக் கழிப்பவர்களால் அது இயலாது. பெரும்பாலும் தம் உணர்ச்சியைப் பிறரிடம் கொட்ட விரைவார்களே அல்லாமல் பிறர் உள்ளம் எவ்வாறு உள்ளது என்பதனைச் சிறிதும் எண்ணமாட்டார்கள். ஆனால் சிலர் மிக வல்லவர்களாய்ப் பயன் பெற்று வாழ்வதற்குக் காரணம், அவர்கள் எப்போதும் பிறர் உள்ளத்தை ஆராய்ந்து உணர்ந்து நடப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அப்படிப்பட்ட குறிப்பறியும் ஆற்றல் உள்ளவர்களைத் தான் உலகம் போற்றுகிறது.

ஒரு சிலர் முகத்தாலும், கண்களாலும் உள்ளத்தின் குறிப்பினை அறியாது பேசி நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துவர்.

முகக்குறிப்பின் மூலம் உள்ளக் குறிப்பினை உணர வல்லவனை ஐயன் இந்த உலகிற்கே அணிகலன் என்றும், தெய்வம் போன்றவன் என்றும் புகழ்கின்றார்.

உள்ளக்குறிப்பு வெளிப்படும் இடம் முகம் ஆகையால் முகத்தை நோக்கியே உணர வேண்டும். முகம் என்று பொதுவாகக் கூறினாலும் கண்களிலும் உள்ளக்குறிப்பு நன்றாக வெளிப்படும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - என்பார்கள்.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் -சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.
- மூதுரை - ஒளவையார்.

கிளைகளையும், கொம்புகளையும் கொண்டு காட்டினுள் நிற்கின்ற மரங்கள் நல்ல மரங்கள் ஆகா. கற்றோர் நிறைந்த அவையின் நடுவே ஒருவர் நீட்டிய ஓலையை வாசிக்க மாட்டாமல் நின்றவனும், பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே நல்ல மரங்களாம்.
ஆரறிவுடைய மனிதராய் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரத்திற்கு ஒப்பாகவே எண்ணப்படுவர்.

நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறியுன்னி அறிவனுந்தன்
புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்
வனைந்தனைய திருமேனி வள்ளலும்அம் மாதவத்தோன்
நினைந்தவெலாம் நினைந்தந்த நெடுஞ்சிலையை நோக்கினான்.
- கம்பராமாயணம் .

மிதிலையில் சனகன் அவையில் குருவாகிய விசுவாமித்திரர் அருகில் இராமபிரான் ஓராசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அந்தப் பெரிய வில்லை பலர் ஒன்றுகூடிக்கொணர்ந்து ஒரு மேடை மீது வைத்தார்கள்.

இந்த வில்லை நீ எடுத்து வளைப்பது போல் ஒடித்து எறிவாய் என்று வாய் விட்டுக் கூறாமல், முகக்குறிப்பால் ராமபிரானை விசுவாமித்திரர் பார்த்தார்.

குறிப்பில் குறிப்புணரும் இராமபிரானும் குருநாதர் நினைந்தபடியே நினைந்து, அந்த வில்லைப் பார்க்கின்றார்.

இது பழைய வில். உனக்குப் பரசுராமர் கோதண்டம் தருவார். ஆதலால் இதை வளைக்காதே ஒடித்து விடு என்றெல்லாம் நினைந்து இராமரைப் பார்த்தார் விசுவாமித்திரர் .அவர் நினைந்த அத்தனையும் இராமர் குருநாதரின் முகக்குறிப்பால் தெரிந்து கொண்டார்.

இதே கருத்தைத்தான்

முனிகனு சைக தெலிஸி சிவதநுசு விரிசே
சமயமு அலகலல் லாடககனி ஆராண்முனி
எடுபொங்கெனோ ?
- தியாகப்பிரம்மம்

விசுவாமித்திர முனிவரின் சைகையை அறிந்து இராமர் சிவதநுசை ஒடித்து விட்டார் என்கின்றது தியாகப்பிரம்மம்.

ஒருவர் வாய் திறந்து கூறாமலேயே அவர் மனத்தில் நிகழ்வதை குறிப்பால் அறிதல் வேண்டும். அப்படி அறிய வல்லவன் எக்காலத்தும் வற்றாத நீரினையுடைய கடல் சூழ்ந்த உலகுக்கு ஓர் அணியாவான்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

தீபாவளி






எத்திக்கும் ஒளிரட்டும்
இருளெல்லாம் விலகட்டும்
மனமதனில் மகிழ்ச்சிப்பூ
மணம்வீசி மலரட்டும்

ஆற்றல் பெருகட்டும்
அகந்தை அழியட்டும்
ஆனந்தம் பெருக்கெடுத்து
அகிலத்தை நிறைக்கட்டும்

உள்ளம் உயரட்டும்
உறவெல்லாம் இணையட்டும்
பலகாரச் சுவையோடு
பாசமொன்றாய் கலக்கட்டும்  

மரபோடு இல்லையென்ற
மறுப்பெல்லாம் கிடக்கட்டும்
செலவோடு வந்தாலும் 
சிறப்பாக இருக்கட்டும்

வேட்டுகளில் மகிழ்ச்சியில்லை
வறியோர்க்கு உதவிடுவோம்!
வருங்காலம் நமைப்போற்றும்
வளம்பெற்று வாழ்ந்திடுவோம்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நன்றிகளுடன் 
_ இல்மீ உமர்  

மோடி வித்தை







கூனற்கழுதையையா இந்தக்குருட்டு அரசாங்கம்


திருவோடு ஏந்தியெங்கள் விவசாயி தெருவிருக்க 
வினைதீர்க்க வரவில்லை இவ்விதியற்ற அரசாங்கம்

சல்லிக்கட்டு வேண்டுமென்று சனமெல்லாம் திரண்டபோது
சலக்காடித் திரிந்ததய்யா இத்தரங்கெட்ட அரசாங்கம்

கறுப்புப் பணம் கொணர்ந்து கட்டிக்குவிப்பதாக 
இருப்பைத் தொலைத்து நிற்கும் இழிவான அரசாங்கம்

ஆயிரம் துன்பத்தில் யாம் ஆழ்ந்து கிடக்கையிலே
ஆதிசிவன் பார்த்ததையா அஞ்ஞான அரசாங்கம்

வெள்ளத்தில் ஊறி நாங்கள் வீங்கிக்கிடக்கையிலே 
விமானப்பயணம் செய்யும் வீணர்களின் அரசாங்கம் 

இலட்சங்களில் உறுதிசொல்லி இலட்சியமும் முடிந்தபின்னர் 
மோடிவித்தை காட்டுதய்யா முட்டாப்பய அரசாங்கம்

டெங்கு நோய்க்கு பலவுயிர்கள் பலியாகிப் போகையிலே
பட்டேலுக்கு சிலைதிறந்து பல்லிளிக்கும் அரசாங்கம்

பாசிசம் பேணுகின்ற பாழ்பட்ட அரசாங்கம்

சிலஉண்மை சொல்லிவிட்டால் சிறைத்தள்ளும் அரசாங்கம்

கார்ப்பரேட் முதலைகட்க்கு கவரிவீசும் அரசாங்கம்

எரிபொருளின் விலைஉயர்த்தி ஏய்த்திருக்கும் அரசாங்கம்

வரிக்கொள்ளை செய்யுதய்யா வக்கற்ற அரசாங்கம்*

நாத்தீகவாதி என்றால் நார் நாராய்க் கிழித்திருப்பேன்
ஆத்தீகவாதியானேன் ஆண்டவனே கேளுமையா!


நன்றிகளுடன் 
_ இல்மீ உமர்   


சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...