நளனது வரலாறு கூறுவது நளவெண்பா. நளவெண்பாவின் ஆசிரியர் புலவர் புகழேந்தி.அவர் வெண்பா புலி, வெண்பாவிற் புகழேந்தி என சிறப்பிக்கப்படும் அளவு வெண்பா பாடுவதில் ஈடு இணையற்றவர்.
ஒரு முறை குலோத்துங்க சோழன் தமிழ்ச் சுவை, கவிச் சுவை நிறைந்த கற்பனைத் திறமும், காவிய நயமும் பொருந்த பாடப்பெற்ற நளவெண்பாவின் அருமை பெருமைகளை உணர்ந்து புகழேந்திப்பு லவரை தன் நாட்டிற்கு வரச் செய்து, அன்புடன் போற்றி அந்நூலை அரங்கேற்றச் செய்தான்.
புலவரும் ஒவ்வொரு பாடலையும் பாடி சொல் நயம், பொருள் நயம் முதலியவற்றை விளக்கி வந்தார்.
மல்லிகையே வெண் சங்காவண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப_ முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.
தெளிவு - வண்டுகள் மல்லிகை அரும்பையே வெண்ணிறச் சங்காகக் கொண்டு ஊதவும், சிறந்த கரும்பு வில்லையுடைய மன்மதனானவன் மலரம்புகளை ஆராய்ந்து எடுத்துத் தன் உடம்பை பாதுகாத்துக் கொண்டு வரவும், முல்லை மலர் என்னும் மென்மையான மாலை தன் தோள்களில் அணியப் பெற்று அசைந்து கொண்டிருக்கவும் அந்திப் பொழுது என்னும் அரசு மெல்ல நடந்து வந்தது.
இப்பாடலின் பொருட் சிறப்பு, வருணனை இவற்றை புகழேந்தியார் சொல்லிக் கொண்டிருந்த போது புலவர் ஒட்டக்கூத்தர் எழுந்து பாடலில் பிழையுள்ளது என்று கூறினார்.
இப்பாட்டின் முதலடியில் மல்லிகை மலரை வெண்சங்காகவும், வண்டினை சங்கூதுபவனாகவும் கூறியிருப்பது பொருத்தமானது, அழகானதுங் கூட .ஆனால் சங்கினை ஊதுபவர்கள் சங்கின் அடிப்பாகத்தையல்லவா வாயில் வைத்து ஊதுவார்கள்? இங்கே வண்டு மலரின் மேற்பக்கத்திலல்லவா ஊதுகிறது. ஆதலின் இப்பகுதி பிழையானது என்றார். அனைவருக்கும் உண்மை என்றே பட்டது. புலவர் புகழேந்திக்கும் சிறிது தயக்கம் தான்.
இருப்பினும் சிறிது சிந்தித்து நிலைமையைச் சமாளிக்கிறார்.
மதுவருந்தி மதிமயங்கித் தன்னிலைகெட்டுத் திரியும் குடியனுக்கு அடி யென்றும், நுனியென்றும் தெரியுமோ? என்று கூறினார். அனைவரும் கொல்லென்று சிரித்து மகிழ்ந்தனர்.புகழேந்தியின் நுண்ணறிவினையும், கவித்திறனையும், சமயோசிதத் திறனையும் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.
உவப்பத் தலைக்கூடும் - பேரியல்பினராகிய புலவர்கள் எவ்வளவு நுண்ணறிவு மிக்க செயல்களைச் செய்து ஏனையோர்க்கு இன்பந் தருகின்றனர்.
கற்றறிந்த பெருமக்களின் பெருமையே பெருமை.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment