பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 42 - கேள்வி
குறள் - 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
விளக்கம் -செவியால் கேட்டுச் சொற்களின் சுவை உணராமல் கேள்வி இன்பத்தை அறியாமல் வாயின் உணர்வை மட்டும் உடைய மக்கள் இறந்தால் என்ன?உயிருடன் வாழ்ந்தால் தான் என்ன?
கேள்விச் செல்வம் மிகச் சிறந்த செல்வமாகும். படிக்காதவராக இருப்பினும் கற்றறிந்த ஆன்றோர்களின் மொழியை செவியாறக் கேட்டுச் சிறப்புற வேண்டும்.
நல்ல நூல்களை படிக்க முடியாமல் போகலாம். அல்லது கல்வியறிவே இல்லாதவர்களாகவே இருந்தாலும், கற்றறிந்தவர்கள் சொல்லும் பொருளைக் கேட்டாவது அறிய வேண்டும். செவி இன்பத்தை நுகர வேண்டும்.
செவியால் கேட்டறியும் சுவையை உணராது வாய்ச் சுவைக்கு, உணவின் சுவைக்கு முக்கியத்துவம் தருபவர்களை இறந்தென்ன? இருந்தென்ன என்று வன்மையாக கடிந்துரைக்கின்றார்.
கேள்விச் செல்வத்தை வலியுறுத்தும் தொடர்புடைய சில பாடல்களைப் பார்ப்போம்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
கேள்வி முயல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.
கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்.
வாய்ப்பறை யாகவு நாக்கடிப் பாகவும்
சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.
- நறுந்தொகை-அதிவீரராம பாண்டியர்.
வாயே பறையாகவும், நாவே குறுந்தடியாகவும் கொண்டு அறிவுடையோர் சொல்லும் கருத்துகளை மனம் புறம் போகாமல் பாதுகாத்துக் கேளுங்கள்.
கண்டவர் காமுறூஉங் காமருசீர் காதிற்
குண்டலம் பெய்வ செவியல்ல - கொண்டுலகில்
மூன்றும் உணர்ந்தவற்றின் முன்னது முட்டின்றிச்
சூன்று சுவைப்ப நெறி.
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்
பார்த்தவர் விரும்பும் சீரிய அழகினையுடைய காதில் அழகிய குண்டலங்கள் அணியப்படுவன செவிகள் ஆகா.
உலகின்கண் அறம், பொருள்.இன்பங்களை உணர்த்தும் நூல்களைக் கேட்டறிந்து கொண்டு, அவற்றுள் தலையாயதான அற நூலைக் கேட்டு இன்புறுவனவே செவிகளாகும்.
அறம்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம்கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறம்கேட்டும் பெற்ற சிவகதி தானே.
- திருமந்திரம் - திருமூலர்.
அறநூல் கருத்துகளை ஆன்றோர்களிடம் கேட்டும், மெய்ப்பொருள் உரைகளையும், தீவினைகளால் விளையும் பாவங்களையும் சான்றோரிடம் கேட்டும், வழிபாட்டுக்குரிய மறைமொழிகளைக் கேட்டும், புறக்கருத்துகளைக் கேட்டும், பொன்னொளி வீசும் இறைவனின் ஆற்றல்களை அடியார்களைக் கேட்டும் அறிவதே அடைதற்குரிய நற்கதியாகும்.
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும்
படிக்க பக்கநின்று கேட்டாலும்
_ திருவருட்பா -வள்ளலார்.
படிப்பதைப் பக்கத்தில் நின்று செவி வழியாகக் கேட்டாலும் தீஞ்சுவை என்று இறைவன் பால் உருகுகின்றார்.
செல்வம் அயல் இருந்து வருவது,மயல் மிகுந்து புரிவது. நல்வழியை ஒருவுவது, அல்வழியில் பெருகுவது, கொடுக்கக் குறைவது, எடுக்கத் தேய்வது.தாயத்தார் பகுப்பது, கள்வர், பகைவரால் கவர்ந்து கொள்ளக் கூடியது.
கல்வி உள்ளேயிருந்து விளைவது, அமுதமயமானது, அடுத்தவர்க்கு அருள்வது, கொடுக்கக் குறையாதது, எடுக்குந் தோறும் பெருகுவது, ஈயுந் தோறும் வளர்வது, எவராலும் கவர்ந்து கொள்ள முடியாதது.கேடில் விழுச்செல்வம் என்ற பீடும், பெருமையும் பெற்றது.
இத்தகு சிறப்புகள் பெற்ற கல்வியைக் கற்ற கற்றறிந்தார் கூறும் சொற்களின் சுவையைக் கேட்டு உணர வேண்டும்.
நல்லனவற்றைக் கேட்டு நலம் பல பெற வேண்டும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment