Saturday, September 1, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 1002














பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 101 - நன்றியில் செல்வம்.
குறள் - 1002

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

விளக்கம் - பொருளால் எல்லாம் உண்டாகும் என்று கருதிப் பிறருக்குக் கொடுக்காமல் உலோபம் செய்யும் மயக்கத்தினால் சிறப்பில்லாத பிறப்பு உண்டாகும்.

வாழ்க்கைக்குத் தேவையானவற்றையே மக்கள் தேடிச் சேர்க்கத் தொடங்கினார்கள். அப்படிச் சேர்த்து வைத்தவைகளுக்கே பொருள் என்றும் செல்வம் என்றும் பெயர் கொடுத்து வழங்கினார்கள்.

நம் ஐயன், செல்வத்தைப் பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகும் என்று கூறி, அத்தகைய செல்வத்தை நன்மையற்ற செல்வம் (நன்றியில் செல்வம்) என்று கடிகின்றார். பயன்படுத்தாத செல்வம் உடையவர்களையே - உலோபிகளையே _ அதன் வாயிலாகக் கடிந் துரைக்கின்றார்.

பொருளைச் சேர்த்து வைத்து ஒருவருக்கும் உதவாமல் இருத்தல் கூடாது. அவ்வாறு செய்வது தான் இழிபிறப்புக்குக் காரணமாகும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


தானமது விரும்பு.
- ஆத்திசூடி - ஒளவையார்.
மற்றவர்களுக்கு தானம் கொடுத்தலை விரும்பிச் செய்.

தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்.
- தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.

பொருளை வருந்தித் தேடி அனுபவிக்காமல் புதைத்து வைக்காதே.
தருமம் செய்வதை ஒரு பொழுதும் மறக்காதே.

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

பொருள் உடையவர்கட்கு அழகாவது, சுற்றத்தார் வறுமையுற்ற போது அவர்கட்கு உதவி செய்து அவர்களைப் பாதுகாத்தலாம்.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம் .
-நல்வழி - ஒளவையார்.

பணத்தினை வருந்திச் சேர்த்து அதனை தான் உண்ணாமலும், அறஞ்செய்யாமலும் புதைத்து வைத்து நன்மைகளை இழந்த மனிதர்களே, கேளுங்கள். உடலை விட்டு உயிர் நீங்கிய பின்பு பாவிகளே அந்தப் பணத்தை யார்தான் அநுபவிப்பார்?
இருக்கும் போதே உதவுங்கள்.

பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட் கேற்ப
விருப்ப மொடுகொடுப்பர் மேலோர்.
- நன்னெறி - சிவப்பிரகாசர்.

உதவும் குணம் கொண்ட பெரியோர்கள், வளர்தலையும் குறைதலையும் பொருந்திய செல்வத்தை விருப்பத்துடன் அன்போடு கொடுப்பர். ஒன்றும் கொடாது இருக்க மாட்டார்கள்.

ஒன்றாக நல்லது உயிரோம்பல் ஆங்கதன்பின்
நன்றாய்த் தடங்கினார்க் கீத்துண்டல் - என்றிரண்டும்
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து .
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.

அறங்களுள் சிறந்து உயர்ந்தது பிற உயிர்களைப் பாதுகாத்தல், மற்றவர்களுக்குக் கொடுத்துதவி செய்து உண்ணுதல். இவ்விரு அரிய செயல்களைச் செய்து புகழ் பெற்றவனை மேலுலகம் வருகவென்று வாயில் திறந்து வரவேற்கும்.

வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையான்
நல்குரவே போலும் நனிநல்ல - கொன்னே
அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று
பலரால் இகழப் படான்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

வள்ளன்மை இல்லாதவன் பெற்ற செல்வத்தை விட கொடுக்கும் குணமுடையவனின் வறுமையே மிகவும் நல்லது. ஏனெனில் வள்ளன்மை இல்லாதவன் கருணையற்றவன், அன்பில்லாதவன், கண்ணோட்டம் இல்லாதவன் என்று பலராலும் வீணே பழிக்கப்படுவார்.

பொருள் படைத்தவர்கள் மற்றவர்கட்கு மனமுவந்து உதவி செய்து வாழ வேண்டும். பிறருக்கு உதவாது உலோபியாக வாழ்ந்தால் இழிந்த பிறப்பு தான் உண்டாகும்.

காசேதான் கடவுள் என்று பூட்டி வைப்பவன் கயவன்.
கைம்மாறு கருதாது உற்ற நேரத்தில் உதவுபவன்தான் கடவுள்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...