Saturday, September 1, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 652














பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 66 - வினைத்தூய்மை
குறள் - 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு 
நன்றி பயவா வினை.

விளக்கம் :- செய்யும் செயல் புகழும், நன்மையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். புகழும், நன்மையும் பயக்காத செயலை என்றும் செய்யாமல் விட வேண்டும்.
தன் புகழ் கெட வரும் தூய்மையற்ற செயல்களை எப்போதும் செய்தல் கூடாது.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


தூக்கி வினை செய்
- ஆத்திசூடி ஒளவையார்.

நல்ல செயலை ஆராய்ந்து, முடிக்கும் உபாயத்தை அறிந்து செய்ய வேண்டும்.

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

ஒரு செயலின் விளைவில் இருந்தே அவன் முன்பு செய்த நன்மைகள் அறிந்து கொள்ளப்படும்.

பேரான காரியத்தை தவிர்க்க வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.

புகழ் அடைவதற்குக் காரணமான நல்ல செயல்களைச் செய்யாது விலக்க வேண்டாம்.

புண்ணியம் ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
-நல்வழி - ஒளவையார்.

புண்ணிய செயல்களால் இன்பமும், பாவச் செயல்களால் அழிவும் நேரும். எல்லா மதத்தினர் சொல்லும் கருத்தும் இதுவன்றி வேறில்லை. எனவே தீமை நீக்கி நன்மை தரும் செயல்களையே செய்க.

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்அதுதான்
எல்லோரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமற் றதுவே.
- புறநானூறு - நரி வெரூஉத் தலையார்.

நற்செயல்கள் செய்ய மாட்டீராயினும், தீயவற்றைச் செய்யாது விலக்குங்கள். யாவரும் புகழ்வதற்கும், நல்வழியில் செலுத்தி உய்யுமாறு செய்வதற்கும் அதுவே ஏற்ற வழியாகும்.

நல்லா றொழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் _ பல்பொறிய
செங்கண் புலிஏறு அறப்பசித்துத் தின்னாவாம்
பைங்கண் புனத்தபைங் கூழ் .
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

பல புள்ளிகளையுடைய சிவந்த கண்களையுடைய புலி ஏறானது மிகுந்த பசி கொண்டாலும் பசுங்கொல்லைகளில் உள்ள பசிய பயிர்களைத் தின்னாது. அது போல நன்னெறி ஒழுகுதலில் உறுதியாக நின்றவர்கள் வறுமையுற்றாலும் முறையற்ற செயல்களைச் செய்வதற்கு மனங்கொள்ள மாட்டார்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.
- கணியன் பூங்குன்றனார்.

அவரவர் செய்யும் வினைகளுக்கு ஏற்பவே தீமையும், நன்மையும் நடக்கும்.எனவே தீய செயல்களைச் செய்யாது விட்டொழிய வேண்டும்.

புகழொடு நன்மை தராத செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...