பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 43 - அறிவுடைமை
குறள் - 422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
விளக்கம் :-மனம் போன போக்கில் போக விடாமல் தடுத்து தீயவற்றினின்றும் விலக்கிக் காத்து நல்லதன்பால் செலுத்தி அறம் வளரச் செய்வது அறிவாகும்.
அறிவு மனிதனுக்கு அரிய, பெரிய ஓர் அதிசய உடைமையாய் அமைந்திருக்கிறது.
அறிவு இயற்கை அறிவு, செயற்கை அறிவு என இரு நிலைகளில் உள்ளது.
பிறப்புரிமையில் இயல்பாய் அமைந்தது இயற்கையறிவு.
கல்வி, கேள்வி, சிந்தனை முதலிய பயிற்சிகளால் விளைந்து விரிந்தது செயற்கை அறிவு.
அறிவுடையவன் ஆற்றல்களை வளர்த்துக் கொள்கிறான் -சாலமன்.
மணிக்கு ஒளி போல் மனிதனுக்கு அறிவு பெருமை தருகிறது. ஒளியிழந்த மணி இழிவுறுதல் போல அறிவிழந்த மனிதன் கழிவுறுகிறான்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
தன்னை அறிவது அறிவு.
பின்னை அறிவது பேயறிவு.
- திருமூலர்.
அறிவை அறிவதே ஆகும் பொருள் என்று
உறுதி சொன்ன உண்மையினை ஒரும்நாள் எந்நாளோ?
- தாயுமானவர்.
கண்ணால் கண்டும், காதால் கேட்டும், உணர்வால் ஓர்ந்தும் அறிவு நலங்களை மனிதன் அடைந்து கொள்கின்றான். அந்த அறிவுத் துறைகளுக்கெல்லாம் மூல நிலையங்களாய் நூல்கள் அமைந்துள்ளன.
அறிவினான் மாட்சி யொன்றில்லா ஒருவன்
பிறிதினான் மாண்டது எவனாம்? -பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும்மற் றின்ன
அணியெல்லாம் ஆடையின் பின்.
- பழமொழி - முன்றுரையரையனார்.
ஆடையின்றி அணிகளை மாத்திரம் அணிந்து கொண்டு ஒருவன் நிற்பானானால் அவன் எல்லோராலும் எள்ளி இகழப்படுவான். அறிவின் மாட்சியை எளிதே காட்சிப்படுத்துகிறார். உடலுக்கு உடை போல உயிருக்கு அறிவு என்கிறார்.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.
அறிவுடைய ஒருவனையே வேந்தனும் விரும்பி மதிப்பளிப்பான்
அறிவுடையோனா றரசுஞ் செல்லும்.
- புறநானூறு.
அச்சமுள் ளடக்கி யறிவகத் தில்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலி னக்குடி
எச்சமற் றேமாந் திருக்கை நன்றே.
_ நறுந்தொகை .
அறிவும், ஆண்மையும் இல்லாத மக்களைப் பெறுதலைக் காட்டிலும் மக்கட்பேறு இல்லாது இருப்பதே நன்று.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதன்.
மனதை அதன் வழியில் போக விடாது நல்வழியில் செலுத்துவதே அறிவு.
மடம் கொன்று அறிவகற்றும் கல்வி .
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .
அறியாமையை நீக்கி அறிவை விரிவடையச் செய்வது கல்வி .
அறிவன், கலைஞன், கவிஞன், ஞானி என உலகில் எழுகின்ற எவரும் அறிவினால் பெருகி வந்துள்ளனர். மனதைத் தன் வசமாக்கிக் அதனை தெளிவாக நடத்துபவன் ஒளியும், இன்பமும் பெருகி வாழ்வான்.
மனித மனம் ஒரு குரங்கு என்பர். அதனை அதன் போக்கில் போக விடாது தீய வழியில் செலுத்தாது நன்வழியில் செலுத்துவதே அறிவாகும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment