Saturday, September 1, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 281














பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - 29 - கள்ளாமை.
குறள் - 281

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

விளக்கம் :- தான் பிறரால் இகழப்படாமல் இருத்தலை விரும்புகின்றவன், எந்த ஒரு பொருளையும் வஞ்சித்துக் கொள்ள மனதாலும் நினைத்தல் கூடாது. 
பிறர் பொருளை அபகரிக்க நினையாதபடி தன் மனதைக் காக்க வேண்டும்.

எல்லோரும் வாழ வேண்டும் என்னும் அருள்நோக்கம் உடையவன் பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ள நினைக்க மாட்டான். அவ்வாறு நினைந்தால் அவனது அருள்நோக்கம் அர்த்தமற்றதாகி விடும். அதனால் பிறருடைய இகழ்ச்சிக்கும் ஆளாக நேரும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


1 . வெள்ளைக்கில்லை கள்ள சிந்தை.
2. புலையும் கொலையும் களவுந் தவிர்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

1 . களங்கமற்ற வெள்ளை உள்ளம் கொண்டவனிடத்தில் வஞ்சனை எண்ணம் இருக்காது.

2. புலால் உண்ணுதல், பிற உயிர்களை துன்புறுத்துதல், திருடுதல் இவற்றை ஒரு போதும் செய்யாதே.

கொள்ளை விரும்பேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

பிறர் பொருளை அபகரிக்க ஆசைப்படாதே.

உள்ளமுருக உரைத்து பொருள் கொள்வார்
கள்ளரோ டொவ்வாரோ தாம்.
- அறநெறிச்சாரம் - திருமுனைப் பாடியார்.

கேட்போர் மனமுருகுமாறு உதட்டளவில் இனிமையாகப் பேசி இருக்கின்ற செல்வத்தை அபகரித்துக் கொள்பவர்கள் கள்வருக்கு நிகராவர்.

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்.
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

கொடிய துன்பங்கள் பின்பு விளைவதால் எப்போதும் கள்ளாமை வேண்டும்.

இன்னா கள்ள மனத்தார் தொடர்பு.
- இன்னா நாற்பது - கபிலர்.

வஞ்சித் தொழுகும் மனம் படைத்தவரின் நட்பு துன்பம் தருவதாகும்.

கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்.
- உலகநீதி - உலக நாதர்.

கொலையும், திருட்டும் செய்யும் தீயவர்களுடன் நட்பு செய்யாதே.

இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார்
உடைமை கொண்டு ஏமாப்பார் செல்வம்- மட நல்லார்
பொம்மன் முலைபோல் பருத்திடினும் மற்றவர்
நுண்ணிடைபோல் தேய்ந்து விடும்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

ஒருவரை வஞ்சித்து, கவர்ந்து பெற்ற செல்வமானது பெண்களின் பூரித்த கொங்கை போல் மிகுந்திட்டாலும், அதி விரைவில் அவர்களின் சிற்றிடை போல் குறைந்து போகும்.

வாழ்க்கையில் தேவைகளை மிகுதிப் படுத்திக் கொண்டே போனால் மேன்மேலும் பொருளை நாடி அலைய வேண்டி வரும். வரவிற்கு அதிகமாக செலவு செய்து ஆடம்பரத்திற்கு அடிமையானால் எவ்வாறேனும் பொருளைப் பெற வேண்டும் என்ற வேட்கை வளரும். அப்படிப்பட்ட வேட்கை வந்து விட்டால் பிறர் பொருளை வஞ்சிக்கவும் தயங்க மாட்டார்கள். இறுதியில் இழிவடையத் தான் நேரும்.

பிறரால் இகழப்படாது வாழ விரும்புபவன் வஞ்சித்தலை தன் மனதாலும் நினையாது காக்க வேண்டும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...