அறப்பளீசுர சதகம் -
அம்பலவாணக் கவிராயர்
மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
வாயிலா தவனொரு பதர்
வாள் பிடித்து எதிரி வரினோடிப் பதுங்கிடும்
மனக்கோழை தானொரு பதர்
ஏறா வழக்குரைத் தனை வரும் சீசீயென்று
இகழநிற் பானொரு பதர்
இல்லாள் புறஞ்செலச் சம்மதித் தவளோடு
இணங்கி வாழ்பவனொரு பதர்
வேறொருவர் மெச்சாது தன்னையே தான் மெச்சி
வீண்பேசு வானொரு பதர்
வேசையர்க ளாசை கொண்டு உள்ள மனையாளை
விட்டுவிடு வானொரு பதர்
ஆறாத துயரையு மிடியையும் தீர்த்தருள் செய்
அமலவெம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுர தேவனே!
தெளிவு - கலைகளில் வல்லமை பெற்றிருந்தும் அவையில் பேச அஞ்சி நிற்பவனும், வாளுடன் பகைவன் வந்தால் பதுங்கி ஒதுங்கும் கோழையும், மற்றவர் சீசீ என்று இகழும் படி வாழ்பவனும், ஒழுக்கமற்ற மனைவியோடு கண்டுங் காணாது ஒத்து வாழ்பவனும், தன் பெருமையே தானே வியந்து வீண் பேச்சு பேசி பெருமை கொள்பவனும், வேசிகள் மீதுள்ள ஆசையால் கட்டிய மனைவியைக் கைவிடுபவனும் பதரேயாவார்கள்.
தீராத துன்பத்தையும், வறுமையும் தீர்த்தருள் புரிந்து காத்தருளும் அறப்பளீசுர தேவனே. நான் நீங்காமல் அனுதினமும் உன்னையே மனதில் துதிக்கின்றேன்.
No comments:
Post a Comment