Saturday, September 1, 2018

நான் செய்த குற்றம்













தனிப்பாடல்கள் பல தந்துள்ள இராமச்சந்திரக் கவிராயர் ஒருநாள் கல்வியறிவில்லாத ஒருவனை காணச் செல்கிறார். அவனைப் பலவாறு புகழ்ந்து பாடுகிறார். ஆனால் அவனோ அப்புகழுரைகளுக்குச் சிறிதும் தகுதியற்றவன். கொடைக் குணமும் இல்லாதவன். எனவே புலவரிடம், நான் ஒன்றும் தர முடியாது என்று திருப்பி அனுப்பி விடுகிறான். புலவருக்கு பெருத்த ஏமாற்றம் .

அறிவு சான்ற அறிஞர் பெருமக்களை அன்புடன் அழைத்துப் போற்றி, இன்சொல்பேசி, போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வாரி வழங்கும் வள்ளல்கள் பலர் இருக்கிறார்கள் நாட்டில் .அத்தகைய நாட்டில் தான் இவனும் இருக்கிறான்.இவனிருப்பது கூடக் குறையில்லை. இவனிடம் சென்று, பொருள் பெற வேண்டி, கல்லா ஒருவனை அவனிடம் இல்லா நலங்களை இருப்பதாகக் கூறிப் புகழ்ந்தேனே, அதுதான் என் குறை என்று வருந்திப் பாடுகிறார்.


கல்லாத வொருவனைநான் கற்றாய் என்றேன்
காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்.
பொல்லாத வொருவனைநான் நல்லா யென்றேன்
போர்முகத்தை யறியானைப் புலியே யென்றேன்
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை
வழங்காத கையனைநான் வள்ள லென்றேன்
இல்லாத சொன்னேனுக் கில்லை யென்றான்
யானுமென்றன் குற்றத்தால் ஏகின் றேனே.


கல்வியறிவற்ற அவனை நான் கற்றவனே என்றேன். காட்டில் வேட்டையாடி வாழ்பவனை நாடாளும் மன்னவனே என்றேன். தீக்குணங்கள் நிறைந்தவனை நல்லவனே என்றேன். போர் செய்தே அறியாத அவனைப் புலியே என்றேன். சூம்பியதோளை உடைய அவனை போர் வலிமை மிக்க புயத்தினை உடையவனே என்றேன். கொடுத்தறியாத கையை உடையவனை வள்ளலே என்றேன். இத்தனையும் அவனிடம் இல்லாதவைதானே! எனவே தான் அவன் எனக்கு இல்லை என்றான் என்று இராமச்சந்திரக் கவிராயர் மனம் நொந்து பாடுகின்றார்.

இல்லாத நலங்களை இருப்பதாகப் புனைந்துரைத்ததால் இல்லை என்று அனுப்பி விட்டான் என்னை என்று தன் ஏமாற்றத்தையும் பொருட்செறிவோடு வடித்துத் தந்த புலவரின் தீந்தமிழ்த் திறனை எவ்வாறு போற்றுவது?

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்


No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...