பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 61 - மடி இன்மை
குறள் - 604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
விளக்கம் - சோம்பலில் சிக்குண்டு மேலான முயற்சி செய்யாதவருக்குக் குடிப் பெருமை குன்றிக் குற்றமும் பெருகும்.
எந்த செயலையும் செய்ய முடியாது என்று சோர்வடைதல் கூடாது. முயற்சியும், ஊக்கமும் இருந்தால் ஆற்றல் தானே வரும்.
திருந்திய முயற்சியின்றி சோம்பித்திரிந்தால் ஒருவரது குடிப் பெருமையும் அழியும். குற்றமும் பெருகும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
சோம்பித் திரியேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.
முயற்சியின்றி சோம்பேறியாகத் திரியாதே.
சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர்.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.
சோம்பலுடையவர்கள் வறுமையுற்று வருந்தி அலைவார்கள்.
தேடாது அழிக்கின் பாடா முடியும்.
- கொன்றை வேந்தன்.
வருந்தி உழைத்துச் சம்பாதிக்காமல் சோம்பேறியாக இருக்கின்ற பொருளை செலவழித்துக் கொண்டிருந்தால் பின்பு துன்பமாக முடியும்.
தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும்
பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.
தன் தொழிற் கருவியையும், தன் கைப்பொருளையும் பிறர் கையில் கொடுத்து விட்டுச் சோம்பியிருக்கின்ற அறிவில்லாதவனும் பதரேயாவான்.
உற்றதொழில் செய்வோர்க் குறுபஞ்ச மில்லையாம்.
- நீதி வெண்பா
சோர்வில்லாமல் தமக்கேற்ற தொழிலைச் செய்து கொண்டிருப்போர்க்கு உண்டாகின்ற பஞ்சம் எதுவும் இல்லையாம்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .
தெளிவு - தாம் துவங்கிய செயலை முடிப்பதிலேயே கருத்து கொண்டவர் உடம்பின் வருத்தத்தைக் கவனிக்க மாட்டார். பசி, தூக்கத்தை பொருட்படுத்த மாட்டார், யார் என்ன தீங்கு செய்யினும் அதையும் பொருட்படுத்தார், காலத்தின் அருமையையும் நோக்கார், பிறர் செய்யும் அவமதிப்பையும் கொள்ளார்.
எந்த இடையூறுகளையும் பொருட்படுத்தாது செயலைச் செவ்வனே செய்து முடிக்க பெரு முயற்சியுடன் முனைவார்.
தன் குடியை அழிக்கும் இயல்பினையுடைய மடியை நாம் கொள்ளல் கூடாது.
முயற்சியின்றி சோம்பி இருந்தால் குடிப் பெருமை கெட்டு, குற்றங்களும் பெருகும்.
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிருட்டம் இல்லையென்று அலட்டிக் கொள்வார்.
- திரைப்படப் பாடல்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
முயற்சி திருவினையாக்கும்.
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மடியை மடியச் செய்து
முயல்வோம் வெல்வோம்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment