பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 97 - மானம்
குறள் - 967
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
விளக்கம் - தன்னை மதித்துத் தம்மோடு சேர்த்துக் கொள்ளாதவர் பின் சென்று பணிந்து உயிர் வாழ்தலைக் காட்டிலும், மானத்தோடு இறந்தான் எனப்படுதல் நன்று.
மானம் என்றால் இழிவான நிலைக்கு ஆளாகாமல் காத்தல் என்ற பொருள் பேச்சு வழக்கில் உண்டு.
தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருந்த அதனால் உண்டாகும் உணர்ச்சியே மானமாகும்.
மானம் என்பது தன் வீடு, தன் நாடு முதலியவற்றின் பெருமையையும், உயர்ந்த கொள்கைகளின் பெருமையையும் காக்கப் பயன்படுவதே மானமாகும்.
உயிர் வாழ்க்கையின் அடிப்படைக் கெடுவதாக இருந்தாலும், உயிர் நீங்குவதாக இருந்தாலும், உயர்ந்த நெறியிலிருந்து உயர்ந்த குணமுடையோர் பிறழமாட்டார்கள். பிறழும் நிலை வந்தால், அந்த நெறிகளை வாழவைத்து, உயிரை விட்டு விடுவார்கள். இத்தகைய உணர்ச்சிக்கே மானம் என்பது பெயர் .
தன்னோடு பொருந்தாமல் பிரிந்து வாழ்கின்றவர்களைத் தானே நாடி அவர்களின் பின் சென்று உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்ய மனம் ஒவ்வாமல் மானத்தோடு இறந்தான் என்று உலகம் சொல்லுமாறு அழிவதே சிறந்தது.
மானம் இழந்தும் உயிர் வாழலாம். ஆனால் அப்படியாவது சாகா நிலைபெற முடியுமா?முடியாதே. ஆதலால் மானமும் அழிந்து, உயிரும் அழிவதால் என்ன பயன்? ஏதேனும் ஒன்றைக் காக்க வேண்டும். உயிரை நெடுங்காலம் காத்தல் இயலாது. அதனால் அதை இழந்தாவது மானத்தைக் காத்தல் வேண்டும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
மானம் இழந்தபின் வாழாமை முன்இனிதே.
_இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.
மானம் இழந்த பின் உயிர் வாழாதிருத்தல் இனிமையுடையதாகும்.
உயிரை விட மானமே பெரிது.
உற்றஇடத்தில் உயிர் வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்!
- மூதுரை_ ஒளவையார்.
கருங்கல் தூணானது பெரிய பாரத்தைச் சுமந்தால் பிளந்து முறியுமேயன்றி தளர்வுற்று வளையாது. அது போல மானங் காப்பவர் இழுக்கு நேரும்போது உயிரை விடுவரேயன்றி மானத்தைக் கைவிடார்.
தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம்
இன்னுயிர் ஓம்பினும் ஒம்புக- பின்னர்ச்
சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்கு
இறுவரை யில்லை யெனின்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .
இனிமேல் தமக்கு இறத்தல் இல்லை என்று உறுதியாக உணர்ந்தால் மானத்தை இழந்தேனும் உயிரைப் பாதுகாக்க.
பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்துண்கை
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.
_ நல்வழி - ஒளவையார்.
பிறரிடம் சென்று இச்சகம் பேசி வாங்கி உண்டு மானமிழந்து உயிர் வாழ்தலை விட உயிரை விட்டு மானத்தைக் காத்தல் உயர்வுடையது.
தனக்கு தகவல்ல செய்தாங் கோராற்றல்
உணற்கு விரும்புங் குடரை - வனப்பற
ஆம்பற்றாள் வாடலே போல அகத்தடக்கித்
தேம்பதாங் கொள்வ தறிவு.
_ அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.
தகுதியற்ற காரியங்களைச் செய்து உடல் வளர்ப்பதைக் காட்டிலும், நீரற்ற இடத்தில் ஆம்பல் கொடி வனப்பு கெட்டு வாடுதல் போல, மானங்கெடின் மடிதலே நன்று.
மதியாதார் முற்றம் மதித்தொரு காற்சென்று
மிதியாமை கோடி யுறும்.
- நாலு கோடிப் பாடல்கள் - ஒளவையார்.
தன்னை மதிக்காதவரை மதித்துச் சென்று அவர் வீட்டுப்படியை மிதியாதிருப்பது கோடி பெறும்.
நம்மை மதியாதவர் பின் சென்று பணிந்து உயிர் வாழ்தலைக் காட்டிலும், மானத்தோடு உயிர் விடுதலே நன்று.
உயிரினும் உயர்ந்தது மானம் !
இழந்தும் உயிர்வாழ்தல் ஈனம்!
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment