பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்.
குறள் - 51.
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
விளக்கம் - மனையறத்திற்கு வேண்டிய நற்பண்புகளும், செய்கைகளும் உடையவளாகித் தம் கணவனுடைய வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கையை அமைத்து நடத்திச் செல்கின்றவளே சிறந்த மனைவி ஆவாள். நல்லதொரு வாழ்க்கைத் துணையாவாள்.
கணவனும், மனைவியும் ஒருவரிடம் ஒருவர் கொண்ட காதல் இல்வாழ்க்கையில் அன்பாய்ப் பாய வேண்டும்.
இல்லறம் எனும் நல்லறம் நடத்தத் தேவையான நற்குணங்கள் இல்லாளிடம் இருக்க வேண்டும். மனைத்தக்க மாண்புகள் வேண்டும். கணவன், மனைவி இருவரும்
கருத்தொருமித்து , கணவனது வருவாய்க்குத் தக்கவாறு கருத்தாய் வாழ்க்கை நடத்துபவளே சிறந்த வாழ்க்கைத் துணை.
ஆடம்பத்திற்கு ஆசைப்பட்டு தன் மனம் போனபடி கணவனை ஆட்டுவித்து, அவன் வளத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்தாதவளாயின் இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகிவிடும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்.
_ நறுந்தொகை _ அதிவீரராம பாண்டியர்.
ஒருவனுக்கு உரியவளாய் இல்லறம் நடத்தும் நற்குடிப் பிறந்த பெண்ணுக்கு அழகு தன் கணவனை உண்டி முதலியவற்றால் உபசரித்துப் பூசித்தலாகும்.
பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம்
- ஒளவையார்.
கணவன் சொற் கேட்டு அவனுக்கு ஏற்றபடி வாழ்க்கை நடத்தும் குணவதியானால் என்ன நேர்ந்தாலும் சேர்ந்து வாழலாம்.
இருவரும் கருத்தொருமித்து இல்லறம் நடத்தினால் வறுமை முதலான எந்த இன்னல்களையும் எதிர்கொள்ளலாம்.
கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள்-உட்கி
இடன் அறிந்துஊடி யினிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண் .
- நாலடியார் -சமண முனிவர்கள்.
கண்ணுக்கினிய தோற்றம் உடையவளும், தன் கணவன் விருப்பப்படி தன்னை அலங்கரித்துக் கொள்பவளும், அச்சம் உடையவளும், ஊராரைக் கண்டுநாணும் குணம் உடையவரும், தன் கணவனுக்கு அஞ்சி, சமயமறிந்து அவனோடு பிணங்கி ஊடல் தீர்க்கின்ற மென்மைத் தன்மையுள்ள மொழிகளைப் பேசுபவளே மனைவியாவாள்.
காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதிலொரு கருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி என்முகத்தாய் நோக்கறான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.
- நன்னெறி - சிவப்பிரகாசர்.
கண்களிரண்டும் ஒன்றையே ஒரு சேரக் காண்பதுபோல கணவன் மனைவி இருவர் நோக்கமும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.
இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை.
_ மூதுரை - ஒளவையார்.
நற்குணமனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடாகும்.
அன்னை தயையும் அடியாள்பணியும் மலர்ப்
பொன்னி னழகும் புவிப் பொறையும் - வன்னமுலை
வேசித் துயிலும் விறன்மந்திரி மதியும்
பேசில் இவையுடையாள் பெண் .
- நீதிவெண்பா.
தாயின் கருணையும் ,பணிப் பெண்ணின் தொண்டும், திருமகளைப் போன்ற அழகும், பூமாதேவியைப் போன்ற பொறுமையும், வேசியைப் போன்ற துயிலின்பமும், ஆலோசனை வழங்குவதில் மந்திரியைப் போன்ற மதிநுட்பமும் ஆகிய அரிய இயல்புகள் உடையவளே பெண் எனத் தக்கவளாவாள்.
இல்லறத்துக்கு ஏற்ற இனிய நற்குணங்கள் பொருந்தியவளாய், வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்துபவளாய் இருப்பவளே சிறந்த துணையாவாள்.
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.
- கலித்தொகை - பாலை பாடிய பெருங்கடுங்கோ.
ஒரே ஆடையை இரண்டாகக் கிழித்து இருவரும் உடுத்துமளவு வறுமை நிலை ஏற்படினும் மனம் ஒன்றி இயைந்து நடத்தும் வாழ்க்கையே இனிமையானது,
அத்தகு வாழ்க்கைத் துணை அமையப் பெற்றாலே வாழ்வு நலம் பெறும். வளம் பெறும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment