Thursday, March 7, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 190















பால் - அறத்துப்பால்,
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 19 - புறங்கூறாமை.
குறள் - 190.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு .

விளக்கம் :- அயலாரது குற்றங்களைக் காண்பது போல் தன்னிடத்து உள்ள குற்றங்களையும் காண வல்லவராயின், நிலைபெற்ற உயிருக்கு வருவதொரு தீது உண்டோ? ஒன்றுமில்லை.

தன் குற்றங்களை உணர்ந்து தன்வரையில் ஒருவன் நல்லவனாக இருந்தாலே போதுமானது. ஆனால் அதை விடுத்து நாம் என்னவோ மகாத்மாவின் மறு அவதாரங்கள் போல் அடுத்தவர்களின் குறைகளைப் பற்றியே பேசித் திரியக்கூடாது.

உளமார ஒருவரை நல்வழிப்படுத்துவதற்காக சற்று கடிந்து பேசுதல் வேறு. ஆனால் தன்னை அதிமேதாவியாகக் காட்டிக் கொள்ள மற்றவர்களின சிறு தவறுகளைக் கூட பூதாகாரப்படுத்திக் காட்டுபவர்களும் உண்டு.

யாராக இருப்பினும் தன் குறைகளை, தான் செய்யும் குற்றங்களை உணர்ந்தாலே , பிறருடைய குறைகளை பெரிதுபடுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள்.

எல்லோரும் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கி நடப்பது என்பது அரிதான காரியம். ஆனால் முடிந்த வரையில் நம்மை நாம் சீர்தூக்கிப் பார்த்து குறைகளை நிவர்த்தி செய்து கொண்டால் அடுத்தவர் குற்றங்களைப் பற்றிப் பேசும் கீழ்மை நமக்குள் வராது.

தன் கண்ணில் தூணை வைத்துக் கொண்டு எதிரி கண்ணில் துரும்பெடுப்பார்கள் _ என்று ஒரு வழக்குண்டு.


புறங்கூறுவோர் மற்றவர்களின் குற்றங்களைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண முடியுமானால் உயிருக்குத் துன்பம் நேராது. அவ்வாறு தம் குற்றத்தை உணர்ந்தாலே, மற்றவர் குற்றங்களை எடுத்துக் கூறுவது குற்றம் என்பதை உணர்ந்து அதைக் கைவிடுவார்கள். அதனால் மனம் திருந்தி நன்மையும் அடைவார்கள்.

குற்றங்களைத் தேடிக் கண்டு பிடித்து குறை சொல்லிக் கொண்டே இருப்பதை விட சிறு நிறைகளையும் மனம் திறந்து பாராட்டிப் பாருங்கள் .எல்லாமே நிறைவாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 



வெட்டெனப் பேசேல்
_ ஆத்திசூடி - ஒளவையார்.

கத்திவெட்டைப் போல் ஒருவரோடும் கடினமாகப் பேசாதே.

குற்றம் பார்க்கின் சுற்ற மில்லை.

_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.

குற்றமேயில்லாதவர் ஒருவருமில்லை. ஒருவருடைய குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால் உறவாவார் ஒருவருமில்லை.

கெளவை சொல்லி னெவ்வருக்கும் பகை.
- கொன்றை வேந்தன்.

பிறர்மேல் பழிச் சொற்களை சொல்லிக் கொண்டேயிருந்தால் அவன் எல்லோருக்கும் பகையாவான்.

குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்.
_ உலகநீதி - உலகநாதர்.

ஒருவர் செய்த குற்றங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிக் கொண்டுத் திரிய வேண்டாம்.

நட்டார் புறங்கூறான் வாழ்த னனியினிதே.
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.

நட்பு செய்தவர்களை பழி சொல்லாதவனாய் வாழ்தல் இனிமை பயப்பதாகும்.

பொய்ம்மேற் கிடவாத நாவும் புறனுரையைத்
தன்மேற் படாமைத் தவிர்ப்பானும் - மெய்ம்மேல்
பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே
தணிக்கு மருந்து தலை.

- அறநெறிச்சாரம் _ முனைப்பாடியார்.

புறங்கூறுதலாகிய தீமை தன்னிடத்து நிகழாமல் காப்பவன் பொய்யை பேசாத நாவையும், மெய் பேசும் பண்புடைமையையும் பெற்றவப்போதே பிறவிப் பிணி தீர்க்கும் தலையாய மருந்தைப் பெற்றவனாவான்.

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி யெழுந்த
பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீ தாயின்
எழுநூறும் தீதாய் விடும்.

- நாலடியார் -சமண முனிவர்கள்.

சான்றோர்கள் தமக்கு ஓர் உதவியைச் செய்தவர்க்கும், அவரிடம் தோன்றிய நூறு பிழைகளையும் முன் செய்த ஒரு நன்மையைப் பாராட்டி பொறுத்துக் கொள்வர். கீழோர்க்கு, ஒருவர் எழுநூறு உதவிகளைச் செய்து, பின் அவர் செய்யும் ஒரு செயல் தீயதானால், அந்த எழுநூறு நன்மைகளை விட்டுவிட்டு ஒரு தீமையையே பெரிதாகப் பாராட்டிக் கொண்டிருப்பர்.

மற்றவர் குறைகளைச் சுட்டிக் காட்ட நாம் யார்? நமக்கென்ன தகுதி இருக்கிறது? முதலில் நாம் குற்றமில்லாமல் நடப்போம். பிறகு அடுத்தவர் குறைகளைக் காணலாம் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வந்து விட்டாலே மற்றவர்கள் குறைகளை பெரிதுபடுத்திக் கூறிக் கொண்டிருக்க மாட்டார்கள். அவ்வாறு நடந்தால் யாருக்கும் எந்த துன்பமும், மன வருத்தமும் நேராது.

ஊருக்கு நாம் 
உபதேசம் செய்வதைவிட்டு
உத்தமராய் நம்வரையில்
வாழ்ந்து காட்டுவோம்!

நாட்டுக்கு நாம்
நல்லறிவு சொல்வதைவிட்டு
நல்லவராய் நாணயமாய்
வாழ்ந்து காட்டுவோம்!

அடுத்தவரை குற்றஞ்சொல்லி 
வாழ்வதை விட்டு
அடிமனத்தின் குற்றங்களை
அகற்றிக் காட்டுவோம்!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...