Thursday, March 7, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 90













பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 9 - விருந்தோம்பல்
குறள் - 90.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

விளக்கம் :- எல்லா மலரினும் மென்மையானது அனிச்சமலர். அது முகர்ந்து பார்த்த அளவிலேயே வாடிவிடும். வீட்டுக்கு வந்த விருந்தினரோ முகம் வேறுபட்டுப் பார்த்த அளவிலேயே வாடிவிடுவர்.

விருந்தோம்பல் என்பது நம் தமிழர்களின் தலை சிறந்த பண்பாடு.
உண்மையாக விருந்து என்று கூறத்தக்கது, பசித்தவர் முகமும், திக்கற்றவர் முகமும் பார்த்து அவர்களை அன்புடன் போற்றி உபசரித்தல் கடமை என்று உணர்ந்து உதவி செய்யும் அறமே எனலாம்.
பழகியவர்களை அன்போடு வரவேற்று இன்முகத்துடன் விருந்தளிக்கும் வழக்கத்தை அதற்கடுத்த நிலையில் வைத்துப் போற்றலாம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - என்பார்கள்.
முகம் வேறுபட்டு பார்த்த அளவிலேயே விருந்தினர் அனிச்சமலர் போல முகம் வாடிவிடுவார்களாம்.
எளிய உணவாயினும் அன்போடு உபசரித்தல் வேண்டும்.

நமது செல்வச் செழிப்பைப் பறைசாற்ற ஆடம்பரமாக அளிப்பது (கனிவோடு உபசரிக்காமல்) விருந்து அன்று.
இலை கொள்ளாமல் விதவிதமாக பரிமாறிவிட்டு, வந்தவர்களும் ஏதோ கொஞ்சம் வறட்டு கெளரவத்திற்காக நாசுக்காகக் கொஞ்சம் கொரித்து விட்டு மொத்தமாய் மூடி குப்பையில் வீசுவது விருந்தே அன்று.

வந்தவர் முகம் வாடாமல் அகமும் முகமும் குளிரும்படி பசியோடு இருப்பவருக்கு ருசித்துப் புசி என்ற நல்லெண்ணத்தோடு அன்போடு அளிக்கப்படுவதே விருந்தாகும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம்
- கொன்றைவேந்தன் - ஒளவையார்.

வீட்டுக்கு வந்த விருந்தினரை நன்முறையில் உபசரியாதவருக்குத் தகுதியான இல்லற ஒழுக்கம் இல்லையாம்.

மருந்தே யாயினும் விருந்தோ டுண்.
_ கொன்றை வேந்தன்.

கிடைத்தற்கரிய தேவாமிர்தமே ஆயினும் வந்த விருந்தினரோடு சேர்ந்து உண்ண வேண்டும்.

காக்கைகள் கூட தனித்து உண்பதில்லை.

உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

விருந்தினரோடு சேர்ந்து அன்போடு பரிமாறி உண்பதே உண்டிக்கு அழகாகும்.

உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி யுறும் .

- நாலுகோடிப் பாடல்கள்-ஒளவையார்.

அகமும் முகமும் மலர உள்ளன்போடு வரவேற்று உண்ணுங்கள், உண்ணுங்கள் என்று உபசரியாதவர் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும்.


வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின் .

- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.

தீவினைகளை விலக்கி தம்பால் வந்த விருந்தினரைப் பேணி, வரப்போகும் விருந்தினரை எதிர்நோக்கி நிற்பவரது இல்வாழ்க்கை தவத்தினும் சிறந்ததாகும்.

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர்க் கோடலும் இழந்த என்னை....

- சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்.

கணவனைப் பிரிந்து கடுந்துயரடைந்த காலத்தும் கண்ணகியானவள் விருந்தோம்பல் உரிய முறையில் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றேனே என்று அல்லலுற்று வருந்துகிறாள்.

வயிற்றுப் பசியோடு வாசல் தேடி வந்தவராயினும், நம் வீடு தேடி வந்த யாராயினும் முகங் கோணாது அன்போடு வரவேற்று உபசரிப்பதே உண்மை விருந்தாகும்.
செல்வம் பெற்றவர்கள் தம்மை உற்றவர் அனைவரையும் கனிவுடன் பேணி உபசரித்தல் வேண்டும்.

அனிச்ச மலர்
முகர்ந்தால் வாடும்
அன்பு உறவுகள்
அவமதித்தால் வாடும் !


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...