பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 102. - நாணுடைமை.
குறள் - 1011.
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
விளக்கம் :- நாணமாவது , இழிந்த செயல் காரணமாக நாணமடைதல் ஆகும். வேறு வகையில் வரும் நாணங்கள் அழகிய நெற்றியையுடைய மகளிரின் நாணம் போன்றவை.
நாணுடைமை என இங்கு குறிப்பிடப்படுவது பெண்களிடம் இயல்பாகக் காணப்படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நால்வகைக் குணங்களில் ஒன்றாகிய நாணத்தைக் குறிப்பதன்று .
பெண்களிடம் இயல்பாகத் தோன்றும் நாணம் பெண்மைக்கே உரிய ஒரு உன்னதமான மெய்ப்பாடு. இத்தகைய மெய்ப்பாடு, தோன்றும் காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்பத்தனிச் சிறப்பைப் பெறுவதோடு அப்பெண்ணைப் பார்க்கின்றவர்களின் உறவு நிலைக்கேற்ப பல்வகைப் பட்ட உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
ஆனால் இங்கு நம் வள்ளுவர் காட்டும் நாணம், தகாதசெயல்களைச் செய்வதற்குத் துணியாமல் மனம் ஒடுங்குதல் என்பதைக் குறிக்கும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
உயர்ந்தோர் தமக்கொவ்வாத கருமங்களில்
நாணுதலுடையராம் தன்மை.
- பரிமேலழகர் .
நற்பண்புகளால் உயர்ந்தோர் அறநெறிகளுக்கு மாறான செயல்களைச் செய்வதற்கு நாணுவர்.
மனக் கட்டுப்பாடின்றி புலன் வழியே சென்று தவறு செய்யின் ,தவறினை உணர்ந்து, எத்தகையச் செயலைச் செய்து விட்டோம் என வருந்தி வெட்கத்துடன் இயல்பாகவே தலை குனிவதும் உயர்ந்தோர்க்குரிய இலக்கணமாகும்.
நிறை குணம் என்ற சான்றாண்மை நாணம் என்னும் நல்ல தன்மையை இடமாகக் கொண்டது.
ஆடு மாடுகள் நுழைந்து தோட்டத்தைப் பாழாக்காமல் இருக்கும் பொருட்டு போடப்படுவது முள்வேலி .
அதைப் போன்றே புலன் வழியே மனத்தைச் செலுத்தாது மனம் போன வழியே போக விடாது தடுத்து நிறுத்தி குற்றம் செய்யாமல் மனத்தைப் பாதுகாக்கும் வேலியாக அரணாக இருப்பது தான் நாண் வேலி ஆகும்.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.
புலனடக்கம் இன்றி மனம் செல்கின்றவாறெல்லாம் போகாமல் தன் வழியில் மனத்தை நிறுத்த வேண்டும்.
சையெனத் திரியேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.
பெரியோர் சீ என்று வெறுக்கும் படி நாணமற்றுத் திரியாதே.
பழந்தமிழர்கள் ஒழுக்கத்திற்கும், மானத்திற்கும் முதலிடம் தந்து பழிக்கஞ்சி நாணுடைமையோடு வாழ்ந்தனர்.
உயிர் பெரிதா ? ஒழுக்கம் பெரிதா?
உயிர் பெரிதா? மானம் பெரிதா?
உயிர் பெரிதா? நாணம் பெரிதா?
என்ற போராட்டம் எழுமிடத்து எந்நிலையிலும் மேலோர் உயிரைக் காட்டிலும் ஒழுக்கம், மானம், நாணம் ஆகியவற்றைக் காத்து உயிர் துறக்கவும் தயாராக இருப்பர்.
ஈன்றெடுத்த தாயே பசியால் வாடி வருந்தினாலும்,
செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை - என்றல்லவா ஆணையிடுகிறார் அறங்கூறும் வள்ளுவர்.
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் ? யானே கள்வன்
மன்பதைக் காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே.
சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்.
ஆராயாமல் நீதி வழங்கி குடிப் பெருமையைக் குலைத்து விட்டோமேயென்று தான் செய்த தவறுக்கு நாணித்தலை குனிந்து நானே கள்வன் என்று தன் இன்னுயிரையும் நீத்தான் பாண்டிய நெடுஞ்செழியன்.
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள்அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படும் ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுமதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே.
- புறநானூறு - சேரமான் கணைக்கால் இரும்பொறை.
சோழன் செங்கணனோடு போர் புரிந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையில் இடப்பட்டான். அப்படிச் சிறையிலிட்டவரின் உபகாரத்தால் வந்த தண்ணீரை அருந்தாமலேயே மானங் காக்க உயிர் துறந்தான்.
மானத்தைப் பெரிதெனக் கருதி வாழ்ந்த பழந்தமிழர்கள் நாணத்தையும் மிகச்சிறந்த உடைமையாகப் பெற்றிருந்தனர்.
செய்யத் தகாத இழி செயல்களுக்கும், பழி செயல்களுக்கும் நாணுவதே நாணமாகும். பிறவெல்லாம் அழகிய நுதலையுடைய குல மகளிர் கொள்ளும் நாணத்திற்குச் சமம்.
முன்பெலாம் உலகில் நல்ல
உத்தமர் அதிகம் வாழ்ந்தார்.
பண்பெனும் பெட்டகத்தைப்
பரிந்துமே உயிராய்க் காத்தார்.
இன்றுள உலகில் அந்த
மானின மக்கள் இல்லை.
மானமே போனால் என்ன
சாண் வயிறடைந்தால் போதும்
என்று வீண் கொள்கை பேசும்
ஈனரே மலிந்து விட்டார்
ஒன்றுமே இல்லை இந்த
உலகில் நாண் செத்ததம்மா!
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment