பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 60 - ஊக்கமுடைமை.
குறள் - 591
உடைய ரெனப்படுவது ஊக்கம்அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று.
விளக்கம் :-ஒருவருக்கு உடைமை என்று சொல்லப்படுவது ஊக்கம் உடைமையே. அஃது இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் ஆகார்.
உடைமைகளில் சிறந்தது ஊக்கம் உடைமை.ஊக்கம் உடைமை இருந்தால் உறுதியாக முயன்று மற்ற எல்லா உடைமைகளையும் பெற்று விடலாம்.
ஊக்கமுடைமை என்பது மனத்தளர்ச்சியின்றி எழுச்சியுடன் செயல்புரிதலாகிய உள்ளக் கிளர்ச்சியைக் குறிக்கும், ஒரு செயலை ஆர்வத்துடன் முனைந்து செய்வதற்கு இவ்வுள்ளக் கிளர்ச்சி இன்றியமையாதது.
ஒரு செயலை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலால் உள்ளத்தில் சுரந்தெழும் செயலுணர்வோடு கூடிய உள்ளக் கிளர்ச்சியே ஊக்கம் எனப்படும்.
ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை ஆகிய மூன்று அதிகாரங்கள் உணர்த்தும் கருத்துகள் வாழ்வில் முன்னேற்றப் பாதைக்கு நம்மை வழிநடத்தும்.
எண்ணமே வாழ்வு - என்பர்.
எண்ணும் எண்ணம் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும். எண்ணியர் திண்ணியரானால் எண்ணியது எண்ணியவாறே ஏற்றமுடன் sடக்கும். இடையறா ஊக்கம் ஆக்கத்திற்கு வழிவகுக்கும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
ஊக்கமது கைவிடேல்.
_ ஆத்திசூடி - ஒளவையார்.
செய்யும் செயலில் மன எழுச்சியைக் கைவிடாதே.
ஊக்கமுடைமை யாக்கத்திற்கு அழகு.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.
செய்யும் செயலில் மனம் தளராதிருத்தல் செல்வத்திற்கு அழகாகும்.
உலையா முயற்சி களைகணா ஊழின்
வலிசிந்தும் வண்மையும் உண்டே
_ நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .
இளைத்தவில்லாத முயற்சியையே பற்றுக் கோடாகக் கொண்டு, ஊழினது வலிமையைச் சிதைக்கின்ற வலிமையும் ஊக்கத்திற்கு உண்டு.
இளைத்தவில்லா முயற்சியால் ஊழையும் வெல்லலாம்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் _ என்பது நம் ஐயனின் திருவாக்கன்றோ?
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .
தாம் துவங்கிய செயலைச் செய்து முடிப்பதிலேயே கருத்து கொண்டவர் உடலின் வருத்தத்தைக் கவனியார், பசியையும் பொருட்படுத்தார் , கண்ணுறங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதனையும் பொருட்படுத்தார், காலத்தின் அருமையையும் நோக்கார், பிறர் செய்யும் அவமதிப்பையும் கருதார்.
ஒரு செயலை ஊக்கத்துடன் முடிக்க முன்னிற்போர் தமக்கு வரும் எவ்வகை இடையூறுகளையும் பொருட்படுத்த மாட்டார்.
ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே யொருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.
- நாலடியார் -சமண முனிவர்கள்.
துவளுகின்ற சிறு கொம்பாகி, வழியிலே நின்ற இளமரமும் உள்வயிரம் கொண்ட போது யானையைக் கட்டுவதற்கு ஆதாரமான தறியாகிவிடும். தான் நின்ற நிலையிலிருந்து கீழ் இறங்குதல் இல்லாத படி முயற்சியுடையவனாக வாழ்பவரது வாழ்க்கையும் அத்தன்மையதே.
முயற்சி திருவினையாக்கும்.
உள்ளூ ரவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் - தள்ளாது
அழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு.
- பழமொழி நானூறு - முன்றுறையரையனார்.
பழைய ஊரிலேயுள்ள ஆரவாரமிகுந்த கடைத்தெருவில் மேய்ந்த பழைய கன்றே பிற்காலத்தில் வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டு.
கையிலுள்ள முதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியினால் அதனைப் பெரிதாக்கி, தன்னை இகழ்ந்த ஊரும் மெச்சும் படி வாழலாம். முயற்சி தான் வேண்டும் என்பதை அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு என்ற பழமொழி உணர்த்துகிறது.
ஆக்கத்தை இழப்பினும்
ஊக்கத்தை இழக்காதீர்
ஊக்கம் உடைமை
உயர்ந்ததோர் உடைமை.
உடல் ஊனம் கூட உண்மையில் குறையன்று
ஊக்க மின்மையே
உண்மையில் ஊனம்
உழைப்பை மறப்பதே
உலகில் ஈனம்!
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்