Thursday, March 7, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 591














பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 60 - ஊக்கமுடைமை.
குறள் - 591

உடைய ரெனப்படுவது ஊக்கம்அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று.

விளக்கம் :-ஒருவருக்கு உடைமை என்று சொல்லப்படுவது ஊக்கம் உடைமையே. அஃது இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் ஆகார்.

உடைமைகளில் சிறந்தது ஊக்கம் உடைமை.ஊக்கம் உடைமை இருந்தால் உறுதியாக முயன்று மற்ற எல்லா உடைமைகளையும் பெற்று விடலாம்.

ஊக்கமுடைமை என்பது மனத்தளர்ச்சியின்றி எழுச்சியுடன் செயல்புரிதலாகிய உள்ளக் கிளர்ச்சியைக் குறிக்கும், ஒரு செயலை ஆர்வத்துடன் முனைந்து செய்வதற்கு இவ்வுள்ளக் கிளர்ச்சி இன்றியமையாதது.

ஒரு செயலை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலால் உள்ளத்தில் சுரந்தெழும் செயலுணர்வோடு கூடிய உள்ளக் கிளர்ச்சியே ஊக்கம் எனப்படும்.

ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை ஆகிய மூன்று அதிகாரங்கள் உணர்த்தும் கருத்துகள் வாழ்வில் முன்னேற்றப் பாதைக்கு நம்மை வழிநடத்தும்.

எண்ணமே வாழ்வு - என்பர்.
எண்ணும் எண்ணம் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும். எண்ணியர் திண்ணியரானால் எண்ணியது எண்ணியவாறே ஏற்றமுடன் sடக்கும். இடையறா ஊக்கம் ஆக்கத்திற்கு வழிவகுக்கும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

ஊக்கமது கைவிடேல்.
_ ஆத்திசூடி - ஒளவையார்.

செய்யும் செயலில் மன எழுச்சியைக் கைவிடாதே.

ஊக்கமுடைமை யாக்கத்திற்கு அழகு.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

செய்யும் செயலில் மனம் தளராதிருத்தல் செல்வத்திற்கு அழகாகும்.

உலையா முயற்சி களைகணா ஊழின்
வலிசிந்தும் வண்மையும் உண்டே

_ நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

இளைத்தவில்லாத முயற்சியையே பற்றுக் கோடாகக் கொண்டு, ஊழினது வலிமையைச் சிதைக்கின்ற வலிமையும் ஊக்கத்திற்கு உண்டு.
இளைத்தவில்லா முயற்சியால் ஊழையும் வெல்லலாம்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் _ என்பது நம் ஐயனின் திருவாக்கன்றோ?

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.

- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

தாம் துவங்கிய செயலைச் செய்து முடிப்பதிலேயே கருத்து கொண்டவர் உடலின் வருத்தத்தைக் கவனியார், பசியையும் பொருட்படுத்தார் , கண்ணுறங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதனையும் பொருட்படுத்தார், காலத்தின் அருமையையும் நோக்கார், பிறர் செய்யும் அவமதிப்பையும் கருதார்.

ஒரு செயலை ஊக்கத்துடன் முடிக்க முன்னிற்போர் தமக்கு வரும் எவ்வகை இடையூறுகளையும் பொருட்படுத்த மாட்டார்.

ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே யொருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.

- நாலடியார் -சமண முனிவர்கள்.

துவளுகின்ற சிறு கொம்பாகி, வழியிலே நின்ற இளமரமும் உள்வயிரம் கொண்ட போது யானையைக் கட்டுவதற்கு ஆதாரமான தறியாகிவிடும். தான் நின்ற நிலையிலிருந்து கீழ் இறங்குதல் இல்லாத படி முயற்சியுடையவனாக வாழ்பவரது வாழ்க்கையும் அத்தன்மையதே.
முயற்சி திருவினையாக்கும்.

உள்ளூ ரவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் - தள்ளாது
அழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு.

- பழமொழி நானூறு - முன்றுறையரையனார்.

பழைய ஊரிலேயுள்ள ஆரவாரமிகுந்த கடைத்தெருவில் மேய்ந்த பழைய கன்றே பிற்காலத்தில் வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டு.
கையிலுள்ள முதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியினால் அதனைப் பெரிதாக்கி, தன்னை இகழ்ந்த ஊரும் மெச்சும் படி வாழலாம். முயற்சி தான் வேண்டும் என்பதை அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு என்ற பழமொழி உணர்த்துகிறது.

ஆக்கத்தை இழப்பினும்
ஊக்கத்தை இழக்காதீர்
ஊக்கம் உடைமை
உயர்ந்ததோர் உடைமை.
உடல் ஊனம் கூட உண்மையில் குறையன்று
ஊக்க மின்மையே
உண்மையில் ஊனம்
உழைப்பை மறப்பதே
உலகில் ஈனம்!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 51














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்.
குறள் - 51.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

விளக்கம் - மனையறத்திற்கு வேண்டிய நற்பண்புகளும், செய்கைகளும் உடையவளாகித் தம் கணவனுடைய வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கையை அமைத்து நடத்திச் செல்கின்றவளே சிறந்த மனைவி ஆவாள். நல்லதொரு வாழ்க்கைத் துணையாவாள்.

கணவனும், மனைவியும் ஒருவரிடம் ஒருவர் கொண்ட காதல் இல்வாழ்க்கையில் அன்பாய்ப் பாய வேண்டும்.

இல்லறம் எனும் நல்லறம் நடத்தத் தேவையான நற்குணங்கள் இல்லாளிடம் இருக்க வேண்டும். மனைத்தக்க மாண்புகள் வேண்டும். கணவன், மனைவி இருவரும் 
கருத்தொருமித்து , கணவனது வருவாய்க்குத் தக்கவாறு கருத்தாய் வாழ்க்கை நடத்துபவளே சிறந்த வாழ்க்கைத் துணை.

ஆடம்பத்திற்கு ஆசைப்பட்டு தன் மனம் போனபடி கணவனை ஆட்டுவித்து, அவன் வளத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்தாதவளாயின் இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகிவிடும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்.
_ நறுந்தொகை _ அதிவீரராம பாண்டியர்.

ஒருவனுக்கு உரியவளாய் இல்லறம் நடத்தும் நற்குடிப் பிறந்த பெண்ணுக்கு அழகு தன் கணவனை உண்டி முதலியவற்றால் உபசரித்துப் பூசித்தலாகும்.


பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் 

- ஒளவையார்.

கணவன் சொற் கேட்டு அவனுக்கு ஏற்றபடி வாழ்க்கை நடத்தும் குணவதியானால் என்ன நேர்ந்தாலும் சேர்ந்து வாழலாம்.

இருவரும் கருத்தொருமித்து இல்லறம் நடத்தினால் வறுமை முதலான எந்த இன்னல்களையும் எதிர்கொள்ளலாம்.

கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள்-உட்கி
இடன் அறிந்துஊடி யினிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண் .

- நாலடியார் -சமண முனிவர்கள்.

கண்ணுக்கினிய தோற்றம் உடையவளும், தன் கணவன் விருப்பப்படி தன்னை அலங்கரித்துக் கொள்பவளும், அச்சம் உடையவளும், ஊராரைக் கண்டுநாணும் குணம் உடையவரும், தன் கணவனுக்கு அஞ்சி, சமயமறிந்து அவனோடு பிணங்கி ஊடல் தீர்க்கின்ற மென்மைத் தன்மையுள்ள மொழிகளைப் பேசுபவளே மனைவியாவாள்.

காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதிலொரு கருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி என்முகத்தாய் நோக்கறான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.

- நன்னெறி - சிவப்பிரகாசர்.

கண்களிரண்டும் ஒன்றையே ஒரு சேரக் காண்பதுபோல கணவன் மனைவி இருவர் நோக்கமும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை.
_ மூதுரை - ஒளவையார்.

நற்குணமனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடாகும்.

அன்னை தயையும் அடியாள்பணியும் மலர்ப்
பொன்னி னழகும் புவிப் பொறையும் - வன்னமுலை
வேசித் துயிலும் விறன்மந்திரி மதியும்
பேசில் இவையுடையாள் பெண் .

- நீதிவெண்பா.

தாயின் கருணையும் ,பணிப் பெண்ணின் தொண்டும், திருமகளைப் போன்ற அழகும், பூமாதேவியைப் போன்ற பொறுமையும், வேசியைப் போன்ற துயிலின்பமும், ஆலோசனை வழங்குவதில் மந்திரியைப் போன்ற மதிநுட்பமும் ஆகிய அரிய இயல்புகள் உடையவளே பெண் எனத் தக்கவளாவாள்.

இல்லறத்துக்கு ஏற்ற இனிய நற்குணங்கள் பொருந்தியவளாய், வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்துபவளாய் இருப்பவளே சிறந்த துணையாவாள்.

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.

- கலித்தொகை - பாலை பாடிய பெருங்கடுங்கோ.

ஒரே ஆடையை இரண்டாகக் கிழித்து இருவரும் உடுத்துமளவு வறுமை நிலை ஏற்படினும் மனம் ஒன்றி இயைந்து நடத்தும் வாழ்க்கையே இனிமையானது, 
அத்தகு வாழ்க்கைத் துணை அமையப் பெற்றாலே வாழ்வு நலம் பெறும். வளம் பெறும்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 199














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 20- பயனில சொல்லாமை.
குறள் - 199.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.


விளக்கம் - மயக்கம் நீங்கிய தெளிந்த அறிவினையுடையார் பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.

வாய்ச்சொற்கள் நெஞ்ச நிலையைக் காட்டவல்லவை. அற நினைவு இருந்தால் பயனற்ற எண்ணங்கள் தோன்றாது. அந்த எண்ணங்களின் விளைவான பயனிலாச் சொற்களைப் பேசுதலும் இயலாது.

பயனற்ற சொற்களைப் பேசித்திரிபவன் கள்ளுண்பவனைப் போலவும், சூதாடுபவனைப் போலவும் காலத்தையும், தன் ஆற்றலையும் வீணாக்கிக் கடமையை மறக்கின்றான். ஏதோ ஒன்றை உளறி அவன் அடையும் இன்பம் பொய்யானது. தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் போலியான இன்பம். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கண்டபடி பயனற்ற சொற்களைப் பேசித் திரிவது அவன் மீதுள்ள மதிப்பு, மரியாதையையும் வீணாக்கி விடும்.

சும்மா இருப்பதே சுகம்.

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.

பேசிய வார்த்தைகள் உனக்கு எசமான்.
பேசாத வார்த்தைக்கு நீ எசமான்

- என்பது போன்ற வழக்குகள் நடைமுறையில் உண்டு.

பயனற்ற சொற்களைப் பேசுபவன் விரைவில் மரியாதை இழப்பான்.
தெளிந்த அறிவினையுடையவரோ ஆராய்ந்து, அளந்து பேசுவர். ஒருபோதும் பொருளற்ற பயனற்றச் சொற்களை பேசமாட்டார்கள்.

பயனிலாச் சொற்கள் பேசுவது பண்படாத மனத்தின் குறையாகும்.
பக்குவப்பட்டவர்கள் பார்த்துப் பதமாகப் பேசுவர்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

நொய்ய வுரையேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

பயனற்ற அற்பவார்த்தைகளைப் பேசாதே.

வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்.
உலகநீதி - உலகநாதர்.

பயனற்ற சொற்கள் பேசுவாருடைய வாயைப் பார்த்துக் கொண்டு அவர் பின் அலைய வேண்டாம்.

பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை....

நலமன்றே நல்லாறு எனல்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

பொய்யும் , புறங்கூறுதலும், கடுஞ் சொல்லும், பயனில சொல்லுதலும் ஆகிய நான்கு குற்றங்களும் வராமல் ஐம்புலன்களை அடக்கிக் காப்பதே நன்னெறியாகும்.

மையோ தடங்கண் மயிலன்னாய் சாயலே 
மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பர் - பொய்யே
குறளை கடுஞ்சொல் பயனில சொல்நான்கும்
மறலையின் வாயினவா மற்று.

- ஏலாதி - கணிமேதையார்.

மைதீட்டப்பெற்ற அழகான பெரிய கண்களை உடைய மயிலைப் போன்ற பெண்ணே! தெளிந்த அறிவினையுடைய பெரியோர்கள் எப்போதும் நல்ல சொற்களையும், உண்மையையுமே பேசுவார்கள். பொய், புறங்கூறல், கடுஞ்சொல் , பயனற்ற சொற்கள் இவையெல்லாம் புல்லறிவுடைய மூடர்களின் வாயிலிருந்து வெளிவருபவையாகும்.

நூற்கேலா
வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை

- திரிகடுகம்-நல்லாதனார்.

நூல்களுக்குத் தகாத பயனற்ற சொற்களை பிறர் விரும்பினாலும் சொல்லாது ஒழிதல் கற்றறிந்தாரின் கடமையாகும்.

போதிக்கத் தெரிந்தவன் சாதிக்க மாட்டான்
சாதிக்கத் தெரிந்தவன் போதிக்க மாட்டான்.

தெளிந்த அறிவுடைய சான்றோர்கள் மறந்தும் பொருளற்ற, பயனற்ற பேச்சுகளைப் பேசித்திரியமாட்டார்கள்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 190















பால் - அறத்துப்பால்,
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 19 - புறங்கூறாமை.
குறள் - 190.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு .

விளக்கம் :- அயலாரது குற்றங்களைக் காண்பது போல் தன்னிடத்து உள்ள குற்றங்களையும் காண வல்லவராயின், நிலைபெற்ற உயிருக்கு வருவதொரு தீது உண்டோ? ஒன்றுமில்லை.

தன் குற்றங்களை உணர்ந்து தன்வரையில் ஒருவன் நல்லவனாக இருந்தாலே போதுமானது. ஆனால் அதை விடுத்து நாம் என்னவோ மகாத்மாவின் மறு அவதாரங்கள் போல் அடுத்தவர்களின் குறைகளைப் பற்றியே பேசித் திரியக்கூடாது.

உளமார ஒருவரை நல்வழிப்படுத்துவதற்காக சற்று கடிந்து பேசுதல் வேறு. ஆனால் தன்னை அதிமேதாவியாகக் காட்டிக் கொள்ள மற்றவர்களின சிறு தவறுகளைக் கூட பூதாகாரப்படுத்திக் காட்டுபவர்களும் உண்டு.

யாராக இருப்பினும் தன் குறைகளை, தான் செய்யும் குற்றங்களை உணர்ந்தாலே , பிறருடைய குறைகளை பெரிதுபடுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள்.

எல்லோரும் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கி நடப்பது என்பது அரிதான காரியம். ஆனால் முடிந்த வரையில் நம்மை நாம் சீர்தூக்கிப் பார்த்து குறைகளை நிவர்த்தி செய்து கொண்டால் அடுத்தவர் குற்றங்களைப் பற்றிப் பேசும் கீழ்மை நமக்குள் வராது.

தன் கண்ணில் தூணை வைத்துக் கொண்டு எதிரி கண்ணில் துரும்பெடுப்பார்கள் _ என்று ஒரு வழக்குண்டு.


புறங்கூறுவோர் மற்றவர்களின் குற்றங்களைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண முடியுமானால் உயிருக்குத் துன்பம் நேராது. அவ்வாறு தம் குற்றத்தை உணர்ந்தாலே, மற்றவர் குற்றங்களை எடுத்துக் கூறுவது குற்றம் என்பதை உணர்ந்து அதைக் கைவிடுவார்கள். அதனால் மனம் திருந்தி நன்மையும் அடைவார்கள்.

குற்றங்களைத் தேடிக் கண்டு பிடித்து குறை சொல்லிக் கொண்டே இருப்பதை விட சிறு நிறைகளையும் மனம் திறந்து பாராட்டிப் பாருங்கள் .எல்லாமே நிறைவாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 



வெட்டெனப் பேசேல்
_ ஆத்திசூடி - ஒளவையார்.

கத்திவெட்டைப் போல் ஒருவரோடும் கடினமாகப் பேசாதே.

குற்றம் பார்க்கின் சுற்ற மில்லை.

_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.

குற்றமேயில்லாதவர் ஒருவருமில்லை. ஒருவருடைய குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால் உறவாவார் ஒருவருமில்லை.

கெளவை சொல்லி னெவ்வருக்கும் பகை.
- கொன்றை வேந்தன்.

பிறர்மேல் பழிச் சொற்களை சொல்லிக் கொண்டேயிருந்தால் அவன் எல்லோருக்கும் பகையாவான்.

குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்.
_ உலகநீதி - உலகநாதர்.

ஒருவர் செய்த குற்றங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிக் கொண்டுத் திரிய வேண்டாம்.

நட்டார் புறங்கூறான் வாழ்த னனியினிதே.
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.

நட்பு செய்தவர்களை பழி சொல்லாதவனாய் வாழ்தல் இனிமை பயப்பதாகும்.

பொய்ம்மேற் கிடவாத நாவும் புறனுரையைத்
தன்மேற் படாமைத் தவிர்ப்பானும் - மெய்ம்மேல்
பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே
தணிக்கு மருந்து தலை.

- அறநெறிச்சாரம் _ முனைப்பாடியார்.

புறங்கூறுதலாகிய தீமை தன்னிடத்து நிகழாமல் காப்பவன் பொய்யை பேசாத நாவையும், மெய் பேசும் பண்புடைமையையும் பெற்றவப்போதே பிறவிப் பிணி தீர்க்கும் தலையாய மருந்தைப் பெற்றவனாவான்.

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி யெழுந்த
பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீ தாயின்
எழுநூறும் தீதாய் விடும்.

- நாலடியார் -சமண முனிவர்கள்.

சான்றோர்கள் தமக்கு ஓர் உதவியைச் செய்தவர்க்கும், அவரிடம் தோன்றிய நூறு பிழைகளையும் முன் செய்த ஒரு நன்மையைப் பாராட்டி பொறுத்துக் கொள்வர். கீழோர்க்கு, ஒருவர் எழுநூறு உதவிகளைச் செய்து, பின் அவர் செய்யும் ஒரு செயல் தீயதானால், அந்த எழுநூறு நன்மைகளை விட்டுவிட்டு ஒரு தீமையையே பெரிதாகப் பாராட்டிக் கொண்டிருப்பர்.

மற்றவர் குறைகளைச் சுட்டிக் காட்ட நாம் யார்? நமக்கென்ன தகுதி இருக்கிறது? முதலில் நாம் குற்றமில்லாமல் நடப்போம். பிறகு அடுத்தவர் குறைகளைக் காணலாம் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வந்து விட்டாலே மற்றவர்கள் குறைகளை பெரிதுபடுத்திக் கூறிக் கொண்டிருக்க மாட்டார்கள். அவ்வாறு நடந்தால் யாருக்கும் எந்த துன்பமும், மன வருத்தமும் நேராது.

ஊருக்கு நாம் 
உபதேசம் செய்வதைவிட்டு
உத்தமராய் நம்வரையில்
வாழ்ந்து காட்டுவோம்!

நாட்டுக்கு நாம்
நல்லறிவு சொல்வதைவிட்டு
நல்லவராய் நாணயமாய்
வாழ்ந்து காட்டுவோம்!

அடுத்தவரை குற்றஞ்சொல்லி 
வாழ்வதை விட்டு
அடிமனத்தின் குற்றங்களை
அகற்றிக் காட்டுவோம்!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 90













பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 9 - விருந்தோம்பல்
குறள் - 90.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

விளக்கம் :- எல்லா மலரினும் மென்மையானது அனிச்சமலர். அது முகர்ந்து பார்த்த அளவிலேயே வாடிவிடும். வீட்டுக்கு வந்த விருந்தினரோ முகம் வேறுபட்டுப் பார்த்த அளவிலேயே வாடிவிடுவர்.

விருந்தோம்பல் என்பது நம் தமிழர்களின் தலை சிறந்த பண்பாடு.
உண்மையாக விருந்து என்று கூறத்தக்கது, பசித்தவர் முகமும், திக்கற்றவர் முகமும் பார்த்து அவர்களை அன்புடன் போற்றி உபசரித்தல் கடமை என்று உணர்ந்து உதவி செய்யும் அறமே எனலாம்.
பழகியவர்களை அன்போடு வரவேற்று இன்முகத்துடன் விருந்தளிக்கும் வழக்கத்தை அதற்கடுத்த நிலையில் வைத்துப் போற்றலாம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - என்பார்கள்.
முகம் வேறுபட்டு பார்த்த அளவிலேயே விருந்தினர் அனிச்சமலர் போல முகம் வாடிவிடுவார்களாம்.
எளிய உணவாயினும் அன்போடு உபசரித்தல் வேண்டும்.

நமது செல்வச் செழிப்பைப் பறைசாற்ற ஆடம்பரமாக அளிப்பது (கனிவோடு உபசரிக்காமல்) விருந்து அன்று.
இலை கொள்ளாமல் விதவிதமாக பரிமாறிவிட்டு, வந்தவர்களும் ஏதோ கொஞ்சம் வறட்டு கெளரவத்திற்காக நாசுக்காகக் கொஞ்சம் கொரித்து விட்டு மொத்தமாய் மூடி குப்பையில் வீசுவது விருந்தே அன்று.

வந்தவர் முகம் வாடாமல் அகமும் முகமும் குளிரும்படி பசியோடு இருப்பவருக்கு ருசித்துப் புசி என்ற நல்லெண்ணத்தோடு அன்போடு அளிக்கப்படுவதே விருந்தாகும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம்
- கொன்றைவேந்தன் - ஒளவையார்.

வீட்டுக்கு வந்த விருந்தினரை நன்முறையில் உபசரியாதவருக்குத் தகுதியான இல்லற ஒழுக்கம் இல்லையாம்.

மருந்தே யாயினும் விருந்தோ டுண்.
_ கொன்றை வேந்தன்.

கிடைத்தற்கரிய தேவாமிர்தமே ஆயினும் வந்த விருந்தினரோடு சேர்ந்து உண்ண வேண்டும்.

காக்கைகள் கூட தனித்து உண்பதில்லை.

உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்.

விருந்தினரோடு சேர்ந்து அன்போடு பரிமாறி உண்பதே உண்டிக்கு அழகாகும்.

உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி யுறும் .

- நாலுகோடிப் பாடல்கள்-ஒளவையார்.

அகமும் முகமும் மலர உள்ளன்போடு வரவேற்று உண்ணுங்கள், உண்ணுங்கள் என்று உபசரியாதவர் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும்.


வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின் .

- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.

தீவினைகளை விலக்கி தம்பால் வந்த விருந்தினரைப் பேணி, வரப்போகும் விருந்தினரை எதிர்நோக்கி நிற்பவரது இல்வாழ்க்கை தவத்தினும் சிறந்ததாகும்.

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர்க் கோடலும் இழந்த என்னை....

- சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்.

கணவனைப் பிரிந்து கடுந்துயரடைந்த காலத்தும் கண்ணகியானவள் விருந்தோம்பல் உரிய முறையில் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றேனே என்று அல்லலுற்று வருந்துகிறாள்.

வயிற்றுப் பசியோடு வாசல் தேடி வந்தவராயினும், நம் வீடு தேடி வந்த யாராயினும் முகங் கோணாது அன்போடு வரவேற்று உபசரிப்பதே உண்மை விருந்தாகும்.
செல்வம் பெற்றவர்கள் தம்மை உற்றவர் அனைவரையும் கனிவுடன் பேணி உபசரித்தல் வேண்டும்.

அனிச்ச மலர்
முகர்ந்தால் வாடும்
அன்பு உறவுகள்
அவமதித்தால் வாடும் !


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 967















பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 97 - மானம்
குறள் - 967

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல்  நன்று.

விளக்கம் - தன்னை மதித்துத் தம்மோடு சேர்த்துக் கொள்ளாதவர் பின் சென்று பணிந்து உயிர் வாழ்தலைக் காட்டிலும், மானத்தோடு இறந்தான் எனப்படுதல் நன்று.

மானம் என்றால் இழிவான நிலைக்கு ஆளாகாமல் காத்தல் என்ற பொருள் பேச்சு வழக்கில் உண்டு.

தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருந்த அதனால் உண்டாகும் உணர்ச்சியே மானமாகும்.
மானம் என்பது தன் வீடு, தன் நாடு முதலியவற்றின் பெருமையையும், உயர்ந்த கொள்கைகளின் பெருமையையும் காக்கப் பயன்படுவதே மானமாகும்.

உயிர் வாழ்க்கையின் அடிப்படைக் கெடுவதாக இருந்தாலும், உயிர் நீங்குவதாக இருந்தாலும், உயர்ந்த நெறியிலிருந்து உயர்ந்த குணமுடையோர் பிறழமாட்டார்கள். பிறழும் நிலை வந்தால், அந்த நெறிகளை வாழவைத்து, உயிரை விட்டு விடுவார்கள். இத்தகைய உணர்ச்சிக்கே மானம் என்பது பெயர் .

தன்னோடு பொருந்தாமல் பிரிந்து வாழ்கின்றவர்களைத் தானே நாடி அவர்களின் பின் சென்று உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்ய மனம் ஒவ்வாமல் மானத்தோடு இறந்தான் என்று உலகம் சொல்லுமாறு அழிவதே சிறந்தது.
மானம் இழந்தும் உயிர் வாழலாம். ஆனால் அப்படியாவது சாகா நிலைபெற முடியுமா?முடியாதே. ஆதலால் மானமும் அழிந்து, உயிரும் அழிவதால் என்ன பயன்? ஏதேனும் ஒன்றைக் காக்க வேண்டும். உயிரை நெடுங்காலம் காத்தல் இயலாது. அதனால் அதை இழந்தாவது மானத்தைக் காத்தல் வேண்டும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

மானம் இழந்தபின் வாழாமை முன்இனிதே.
_இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.

மானம் இழந்த பின் உயிர் வாழாதிருத்தல் இனிமையுடையதாகும்.
உயிரை விட மானமே பெரிது.

உற்றஇடத்தில் உயிர் வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்!

- மூதுரை_ ஒளவையார்.

கருங்கல் தூணானது பெரிய பாரத்தைச் சுமந்தால் பிளந்து முறியுமேயன்றி தளர்வுற்று வளையாது. அது போல மானங் காப்பவர் இழுக்கு நேரும்போது உயிரை விடுவரேயன்றி மானத்தைக் கைவிடார்.

தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம்
இன்னுயிர் ஓம்பினும் ஒம்புக- பின்னர்ச்
சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்கு
இறுவரை யில்லை யெனின்.

- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

இனிமேல் தமக்கு இறத்தல் இல்லை என்று உறுதியாக உணர்ந்தால் மானத்தை இழந்தேனும் உயிரைப் பாதுகாக்க.

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்துண்கை
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.

_ நல்வழி - ஒளவையார்.

பிறரிடம் சென்று இச்சகம் பேசி வாங்கி உண்டு மானமிழந்து உயிர் வாழ்தலை விட உயிரை விட்டு மானத்தைக் காத்தல் உயர்வுடையது.

தனக்கு தகவல்ல செய்தாங் கோராற்றல்
உணற்கு விரும்புங் குடரை - வனப்பற
ஆம்பற்றாள் வாடலே போல அகத்தடக்கித்
தேம்பதாங் கொள்வ தறிவு.

_ அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்.

தகுதியற்ற காரியங்களைச் செய்து உடல் வளர்ப்பதைக் காட்டிலும், நீரற்ற இடத்தில் ஆம்பல் கொடி வனப்பு கெட்டு வாடுதல் போல, மானங்கெடின் மடிதலே நன்று.

மதியாதார் முற்றம் மதித்தொரு காற்சென்று
மிதியாமை கோடி யுறும்.

- நாலு கோடிப் பாடல்கள் - ஒளவையார்.

தன்னை மதிக்காதவரை மதித்துச் சென்று அவர் வீட்டுப்படியை மிதியாதிருப்பது கோடி பெறும்.

நம்மை மதியாதவர் பின் சென்று பணிந்து உயிர் வாழ்தலைக் காட்டிலும், மானத்தோடு உயிர் விடுதலே நன்று.

உயிரினும் உயர்ந்தது மானம் !
இழந்தும் உயிர்வாழ்தல் ஈனம்!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 1011















பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 102. - நாணுடைமை.
குறள் - 1011.

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.


விளக்கம் :- நாணமாவது , இழிந்த செயல் காரணமாக நாணமடைதல் ஆகும். வேறு வகையில் வரும் நாணங்கள் அழகிய நெற்றியையுடைய மகளிரின் நாணம் போன்றவை.

நாணுடைமை என இங்கு குறிப்பிடப்படுவது பெண்களிடம் இயல்பாகக் காணப்படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நால்வகைக் குணங்களில் ஒன்றாகிய நாணத்தைக் குறிப்பதன்று .

பெண்களிடம் இயல்பாகத் தோன்றும் நாணம் பெண்மைக்கே உரிய ஒரு உன்னதமான மெய்ப்பாடு. இத்தகைய மெய்ப்பாடு, தோன்றும் காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்பத்தனிச் சிறப்பைப் பெறுவதோடு அப்பெண்ணைப் பார்க்கின்றவர்களின் உறவு நிலைக்கேற்ப பல்வகைப் பட்ட உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.

ஆனால் இங்கு நம் வள்ளுவர் காட்டும் நாணம், தகாதசெயல்களைச் செய்வதற்குத் துணியாமல் மனம் ஒடுங்குதல் என்பதைக் குறிக்கும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

சால்பு பண்பு முதலிய குணங்களால்
உயர்ந்தோர் தமக்கொவ்வாத கருமங்களில்
நாணுதலுடையராம் தன்மை.

- பரிமேலழகர் .

நற்பண்புகளால் உயர்ந்தோர் அறநெறிகளுக்கு மாறான செயல்களைச் செய்வதற்கு நாணுவர்.
மனக் கட்டுப்பாடின்றி புலன் வழியே சென்று தவறு செய்யின் ,தவறினை உணர்ந்து, எத்தகையச் செயலைச் செய்து விட்டோம் என வருந்தி வெட்கத்துடன் இயல்பாகவே தலை குனிவதும் உயர்ந்தோர்க்குரிய இலக்கணமாகும்.

நிறை குணம் என்ற சான்றாண்மை நாணம் என்னும் நல்ல தன்மையை இடமாகக் கொண்டது.

ஆடு மாடுகள் நுழைந்து தோட்டத்தைப் பாழாக்காமல் இருக்கும் பொருட்டு போடப்படுவது முள்வேலி .
அதைப் போன்றே புலன் வழியே மனத்தைச் செலுத்தாது மனம் போன வழியே போக விடாது தடுத்து நிறுத்தி குற்றம் செய்யாமல் மனத்தைப் பாதுகாக்கும் வேலியாக அரணாக இருப்பது தான் நாண் வேலி ஆகும்.

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.

புலனடக்கம் இன்றி மனம் செல்கின்றவாறெல்லாம் போகாமல் தன் வழியில் மனத்தை நிறுத்த வேண்டும்.

சையெனத் திரியேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

பெரியோர் சீ என்று வெறுக்கும் படி நாணமற்றுத் திரியாதே.

பழந்தமிழர்கள் ஒழுக்கத்திற்கும், மானத்திற்கும் முதலிடம் தந்து பழிக்கஞ்சி நாணுடைமையோடு வாழ்ந்தனர்.

உயிர் பெரிதா ? ஒழுக்கம் பெரிதா?
உயிர் பெரிதா? மானம் பெரிதா?
உயிர் பெரிதா? நாணம் பெரிதா?
என்ற போராட்டம் எழுமிடத்து எந்நிலையிலும் மேலோர் உயிரைக் காட்டிலும் ஒழுக்கம், மானம், நாணம் ஆகியவற்றைக் காத்து உயிர் துறக்கவும் தயாராக இருப்பர்.

ஈன்றெடுத்த தாயே பசியால் வாடி வருந்தினாலும்,
செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை - என்றல்லவா ஆணையிடுகிறார் அறங்கூறும் வள்ளுவர்.

பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் ? யானே கள்வன்
மன்பதைக் காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே.

சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்.

ஆராயாமல் நீதி வழங்கி குடிப் பெருமையைக் குலைத்து விட்டோமேயென்று தான் செய்த தவறுக்கு நாணித்தலை குனிந்து நானே கள்வன் என்று தன் இன்னுயிரையும் நீத்தான் பாண்டிய நெடுஞ்செழியன்.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள்அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படும் ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுமதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே.

- புறநானூறு - சேரமான் கணைக்கால் இரும்பொறை.

சோழன் செங்கணனோடு போர் புரிந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையில் இடப்பட்டான். அப்படிச் சிறையிலிட்டவரின் உபகாரத்தால் வந்த தண்ணீரை அருந்தாமலேயே மானங் காக்க உயிர் துறந்தான்.

மானத்தைப் பெரிதெனக் கருதி வாழ்ந்த பழந்தமிழர்கள் நாணத்தையும் மிகச்சிறந்த உடைமையாகப் பெற்றிருந்தனர்.

செய்யத் தகாத இழி செயல்களுக்கும், பழி செயல்களுக்கும் நாணுவதே நாணமாகும். பிறவெல்லாம் அழகிய நுதலையுடைய குல மகளிர் கொள்ளும் நாணத்திற்குச் சமம்.

முன்பெலாம் உலகில் நல்ல
உத்தமர் அதிகம் வாழ்ந்தார்.
பண்பெனும் பெட்டகத்தைப்
பரிந்துமே உயிராய்க் காத்தார்.
இன்றுள உலகில் அந்த
மானின மக்கள் இல்லை.
மானமே போனால் என்ன
சாண் வயிறடைந்தால் போதும் 
என்று வீண் கொள்கை பேசும்
ஈனரே மலிந்து விட்டார்
ஒன்றுமே இல்லை இந்த
உலகில் நாண் செத்ததம்மா!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...