ஆசிரியர் தின வணக்கங்களும்
நல் வாழ்த்துகளும்
ஆசிரியராய்ப் பணியைத் துவங்கி
அளப்பரிய அரும்பணியாற்றி
ஆட்சி பீடந் தன்னிலே
அருமைமிகு குடியரசுத் தலைவராய்
ஆட்சி செய்து
ஆசிரியர் இனத்திற்கே
அளவிலா பெருமை சேர்த்த
டாக்டர் .இராதாகிருஷ்ணன்
அவர்களின் பிறந்த தினம்
ஆசிரியர் இனத்திற்கோர்
அரிய தினம்.
அறிவெனும் அற்புத உளி கொண்டு
ஆயிரமாயிரம் களிமண் பொம்மைகளை
ஆன்ற கலை நயத்துடன் உயிர்ப்பித்திடும்
அற்புத வரம் பெற்ற கலியுக பிரம்மாக்கள்.-தம்
ஆயுட்காலத்தில்
அநேக உயிர்ச் சிற்பங்களை
அன்றாடம் அற்புதமாகச் செதுக்கிடும்
ஆற்றல்மிகு சிற்பக்கலை வல்லுனர்கள்.
உயிரோவியங்களை உன்னதமாய்
உருவாக்கிடும் சொல்லோவியங்கள்
ஊரார் பிள்ளைகட்குக் கல்வியை
ஊட்டி வளர்த்து - அவர்தம்
உயர்வைக் கண்டு பேருவகை கொள்ளும்
தாய் மனங்கொண்ட தவசிகள்
ஈரைந்து மாதங்கள்
இன்பச் சுமையேற்று
உயிரும் மெய்யும் தந்து கருவிற்கு
உரு கொடுத்தவள் ஈன்ற தாய் .
உள்ளொளி பெருகச் செய்து
உயிரும் மெய்யும் கற்பித்து
கருணையுற்றதால்
அக இருள் நீக்கிய
ஆசான் மாண்புக்குரிய மற்றொரு தாய்.
நானிலம் போற்றும் அவர்தம்
கனிவான சேவைக்கு
நாள்தோறும் அல்லவா
நன்றி விழா நடத்தப்பட வேண்டும்?
நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவப் பெருந்தகையின்
நல்வாக்கினை நவின்றவர்களே'
நல்வாழ்வுக்கு வழிகாட்டிய
நன்மணிகளே கண்மணிகளே
குருவருள் மறந்தால்
திருவருள் கிடைக்குமோ?
உய்வித்த உம்மை
உளமார நினைந்து - நீர்
செய்திட்ட நன்மையை
நெஞ்சார உணர்ந்து
யானும் ஒரு ஆசிரியர்
எனை ஈன்றவரும் ஒரு ஆசிரியர்
என்னவரை ஈன்றவரும் ஒரு ஆசிரியர்
என்ற பெருமிதத்தோடு
குரு கொடுத்துதவிய
கூர்த்த மதியினால்
கொடுத்தேன் இவ்வலங்கலை காணிக்கையாக .
அலங்கல் - பூமாலை
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment