Tuesday, September 4, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 175















பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 18 - வெஃகாமை.
குறள் - 175

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய  செயின்.

விளக்கம் :-பிறர் பொருளை விரும்பி எவரிடத்தும் அறிவில்லாத செயல்களைச் செய்தால், நுணுகி ஆராய்ந்து பெற்ற அறிவினால் ஆகும் பயன்யாது?

பிறர் பொருளைக் கண்டு பொறாமைப்படுதலே குற்றமானபோது, பிறர் பொருளை வெளவக் கருதுவது குற்றம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
அன்புடையவர்கள் தம் பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவுவாரேயன்றி, பிறர் பொருளைக் கைக்கொள்ளக் கருதார்.

தம் பொருள் போல் பிறர் பொருளையும் போற்றுவதே நடுவு நிலைமையுடையவர் கொள்கையாகும்.
நுட்பமாய் அமைந்து பல நூல்களையும் கற்றதால் விரிந்த அறிவு பெற்றவர்கள் பிறர் பொருளை விரும்பாமல் வாழ வேண்டும். அவர்களும் பிறர் பொருளை விரும்பி அதற்காக நெறியற்ற செயல்களைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அந்த அறிவினால் என்ன பயன்? யாதொன்றுமில்லை. அவர்கள் அறிவில்லாதவர்களாகவே கருதப்படுவர்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்

கொள்ளை விரும்பேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

பிறருடைய பொருளைக் கைக்கொள்ள ஆசைப்படாதே.

கிட்டாதாயின் வெட்டென மற.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

நீ விரும்பிய பொருள் உனக்குக் கிடைக்கவில்லையெனின் சீக்கிரத்தில் அதனை மறந்து விடு. எப்படியும் அடைய வேண்டும் என்று எண்ணாதே.

பிறர் கைப்பொருள் வெளவான் வாழ்தலினிதே.
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.

பிறருடைய பொருளை அபகரிக்காதவனாய் வாழ்வது மிகவும் இனிமை பயப்பதாகும்.

எய்தாத வேண்டார் இரங்கார் இழந்தற்கு.
- ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்.

உண்மை அறிவுடையவர்கள் கிடைத்தற்கரியவற்றை விரும்பவும் மாட்டார்கள். தம்மால் இழக்கப்பட்டனவற்றிற்கு வருந்தவும் மாட்டார்கள்.

அஃகும் செய்யலென அறிந்தா ராய்ந்தும்
வெஃகல் வெகுடலே தீக்காட்சி - வெஃகுமான்
கள்ளத்த வல்ல கருதினிவை மூன்றும்
உள்ளத்த வாகா வுரை.
- ஏலாதி - கணிமேதையார்.

பிறர் பொருளைக் கைப்பற்ற விரும்புதலை விடுக.சினங் கொள்ளுதலை ஒழிக. தீயவற்றைக் காணாதொழிக.
இக்கருத்துகளை நன்கு அறிந்திருந்தும் ஒருவன் தீயவற்றைச் செய்ய விரும்புவானாயின் அவன் ஏதோ ஒரு செயலை முடிப்பதற்காக தீயவை செய்கிறான் என்று உணர்தல் வேண்டும். அவன் உள்ளத்தில் கள்ளம் மறைந்துள்ளது என்பதையும் அறியலாம்.

அறிவை நாடியவர்களும், அருளை நாடியவர்களும் பிறருடைய பொருளைக் கைக்கொள்ள நினைக்க மாட்டார்கள்.
பிறர் பொருள் விரும்பாமையே பெருமையைத் தரும்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...