Sunday, September 2, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 137














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 14 - ஒழுக்கமுடைமை
குறள் - 137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

விளக்கம் - ஒழுக்கத்தினால் எல்லோரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

ஒழுக்கம் நமக்கு மேன்மையைத் தரும். குணம், நலம், புகழ், பெருமை, உயர்வு ஆகிய நலன்களைக் கொண்ட சிறப்பை ஒழுக்கம் தரும்.
படி இல்லாமல் மாடியும் ஏறலாம். கால் இல்லாமல் நடந்தும் செல்லலாம். ஆனால் ஒழுக்கம் இல்லாமல் மேன்மையடையவே முடியாது.

ஒழுக்கம் தவறிய ஒருவன் தான் செய்யாத பழிபாவங்களைக் கூட செய்யவில்லை என்று சொன்னால் உலகம் அதனை ஒப்பாது. ஆதலின் அவன் இல்லாத பழியையும் ஏற்க நேரிடும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்


1 அழகலா தனசெயேல்.
2. சீர்மை மறவேல்
3.குணமது கைவிடேல்
4 இயல்பலா தனசெயேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

1. இழிவான செயல்களை ஒரு போதும் செய்யாதே.
2. புகழ் தரக்கூடிய நல்லொழுக்க குணத்தை மறந்து விடாதே.
3 நற்குணங்களை விட்டு விடாதே.
4. நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.

1. நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு.
2. பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் .
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

1. நீதி நூல்களில் சொல்லப்பட்ட வழிகளை அறிந்து நல்லொழுக்க வழியில் நட.
2. கீழ் மக்களிடத்தில் சிறப்பான ஒழுக்கம் என்பது காணப்படுவதில்லை.


நல்லா றொழுக்கின் தலை நின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் - பல்பொறிய
செங்கண் புலிஏறு அறப்பசித்துத் தின்னாவாம்
பைங்கண் புனத்தபைங் கூழ்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

தெளிவு - பல புள்ளிகளையுடைய, சிவந்த கண்களையுடைய புலியானது மிகுந்த பசி கொண்டும் கொல்லைகளிலுள்ள பசிய பயிர்களைத் தின்ன மாட்டா.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - என்பர். அதுபோல நல்லொழுக்க நெறிகளில் உறுதியாக நின்றவர்கள் வறுமையுற்றாலும் முறையல்லாதவற்றைச் செய்ய மனங்கொள்ள மாட்டார்கள்.

பொறாமையுடையவரிடம் செல்வம் சேராது. ஒழுக்கம் இல்லாதவனிடத்து உயர்வு நிலைக்காது.
ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் உண்டாகும் தீங்கினை எண்ணி, உயர்ந்தோர்கள் ஒழுக்கத்தினின்று சிறிதும் தவறமாட்டார்கள். ஒழுக்கமுடையவர்கள் மேன்மை அடைவார்கள். ஒழுக்கம் தவறியவர்கள் பிறர் யாரும் அடையாத பெரும் பழியையும் அடைவார்கள்.

ஒழுகுவதே ஒழுக்கம் .
உயர்ந்தோர் சென்ற நெறியில் ஒழுகுவதே மேன்மையைத் தரும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...