Sunday, September 2, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 406















பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 41 - கல்லாமை.
குறள் - 406

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் 
களரனையர் கல்லா தவர்.

விளக்கம் - கல்வி கற்காதவர் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்லப்படும் நிலையினரே தவிர, ஒன்றும் விளையாத களர் நிலத்தைப் போன்றவராவார். ஒரு பயனையும் விளைவிக்காதவரே யாவர்.

கல்வி என்னும் தலைப்பில் ஒரு அதிகாரம் அமைத்து பல உயரிய கருத்துக்களைக் கூறிய வள்ளுவர் அத்துடன் அமையாது கல்லாமை என்ற தலைப்பிலும் ஒரு அதிகாரம் வகுத்து மேலும் பல கருத்துகளை கூறியிருப்பதிலிருந்தே கல்வியைப் பற்றிய அவரது எண்ணம் நமக்கு நன்கு விளங்கும்

கல்வியின் மேன்மையையும், கல்லாமையின் இழிவையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்

எண் எழுத்து இகழேல்
ஓதுவது ஒழியேல்
இளமையில் கல்
வித்தை விரும்பு
நூல் பல கல்
கேள்வி முயல்
- ஆத்திசூடி - ஒளவையார்.

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

கல்வியின் பெருமையையும், கல்லாமையின் சிறுமையையும் பற்றிச் சொல்லாத புலவர்களே இல்லை எனலாம்.

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்.

கற்க வேண்டி பருவம் இளமைப் பருவமே. அப்போது கற்காமல் விடுவது குற்றமே என்கிறார்.

பால் குடியாத பிள்ளை உடல் மெலிந்து ஊனம் அடைகிறான். நல்ல நூல் படியாத பிள்ளை அறிவு குறைந்து அவலம் அடைகிறான்.

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.
- ஒளவையார்.

நல்ல நூல்களைப் பயிலாதவர்களுக்கு உயிரினும் மேலாக ஓம்பப்படுகின்ற ஒழுக்கமும் இருக்காது.

ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம்.
_ உலகநீதி - உலக நாதர்.
நூல்களைப் படிக்காமல் ஒருபொழுதும் இராதே.

கற்கை நன்றே கற்கை நன்றே 
பிச்சை புகினும் கற்கை நன்றே.

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதராகும்மே .

நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயிற் கீழிருப் பவனே.

எக்குடி பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்.

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

அச்சமுள் ளடக்கி யறிவகத் தில்லா
கொச்சை மக்களைப் பெறுதலி னக்குடி
எச்சமற் றேமாந் திருக்கை நன்றே.
- இப்பாடல்கள் அனைத்தும் கல்வியின் சிறப்பு பற்றியும் கல்லாமையின் இழிவு பற்றியும் நறுந்தொகையில் அதிவீரராம பாண்டியர் அருளிய அருங்கருத்துகள் ஆகும்.

அறிவில்லாத மக்களைப் பெறுவதைக் காட்டிலும் மக்கட்பேறு இல்லாதிருத்தலே நன்று என்கிறார்.

மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்கு
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
- மூதுரை - ஒளவையார்.

நாடு காக்கும் அரசனைக் காட்டிலும்
ஏடு படிக்கும் கற்றோன் சிறப்புடையன்.
அரசனுக்கு தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்பும், நன் மதிப்பும் உண்டாகும்.

வருத்தவளை வேயரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில் – தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாந் திரிந்து
தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்.
- நீதிவெண்பா.

தன்னைப் பிறர் வளைத்து வருத்தப்படுத்த மிக வருந்தி வளைந்த மூங்கில் தண்டு பெருமை பொருந்திய அரசரின் தலைமுடிக்கு மேலாய் அவர் ஏறி வரும் பல்லக்கின் மேல் இருக்கும். வளையாது நிமிர்ந்து நின்ற மூங்கிற் கொம்பு கழைக்கூத்தாடிகளின் கையிலகப்பட்டு உலகமெல்லாம் சுற்றி அவர் காலின் கீழ் இழிவடையும்.

இளமையில் வருந்திக் கல்வி கற்று கொண்டால் பெருமையும், கல்லாவிட்டால் சிறுமையும் நேரும் என்பதை நீதிவெண்பா அழகாக உரைக்கின்றது.

உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே. 
- ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்.

குருவுக்கு வேண்டுங் காலத்து உதவியும், மிக்க பொருளைக் கொடுத்தும், அவருக்கு பணிந்து வாழ்தலை வெறுக்காது கல்வியைக் கற்றல் நல்லது என்கிறான் நாடாளும் அரசனாகிய பாண்டியனே.

அக்காலத்தே அறிவொளி வீசும் ஆசானிடம் சென்று, அவர் குறிப்பறிந்து ஒழுகி அன்பைப் பெற்று கல்வி கற்றோர் உயர்ந்தார். அங்ஙனம் கற்காதவர் தாழ்வர்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்
- என்ற வள்ளுவனின் கருத்தோவியமும் இங்கு நினைத்தற்குரியது.

கல்லாதவர்கள் களர் நிலத்தை ஒப்பார்கள்.

அறிவு தரும் நூல்களைக் கற்று
கல்லாமையை இல்லாமல் செய்வோம்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...