Sunday, September 2, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 879














பால் - பொருட்பால்
இயல் - அங்கவியல்
அதிகாரம் - 88 - பகைத் திறம் தெரிதல்
குறள் - 879

இளைதாக முள்மரங் கொல்க களையுநர்
கைக்கொல்லுங் காழ்த்த விடத்து.

விளக்கம் - இளையதாக இருக்கும் போதே முள் மரத்தைக் களைந்து அழித்திடுக. அது முதிர்ந்துவிட்டால் களைபவரின் கையை வருத்தும்

பகை தோன்றாமல் தடுத்து விடுவது நன்மை. ஒருகால் தோன்றி வளர்ந்து விட்டால், அது முதிரும் முன்னமே அதை வென்று அழிக்க வேண்டும். முள்மரத்தை இளையதாக இருக்கும் போதே களைந்து விடுவது போல் ஒழிக்க வேண்டும். இல்லையானால் அதே இள மரம் வைரம் ஏறி முதிர்ந்த பிறகு வெட்டுவோரின் கையை வருத்துவது போல் துன்பம் தரும்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்



போர்த் தொழில் புரியேல்

முனைமுகத்து நில்லேல்

ஒன்னாரைத் தேறேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

யாருடனும் பகை கொண்டு சண்டை செய்யாதே.

போர் முனையிலே போய் நிற்காதே.

பகைவர்களை நம்பாதே.

பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்.
- உலகநீதி - உலகநாதர்.

சண்டை நடக்கும் இடத்திற்குப் போகாதே.


சிறிய பகைஎனினும் ஓம்புதல் தேற்றார்
பெரிதும் பிழைபாடுடையர்-நிறையகத்து
ஆழ்நீர் மடுவில் தவளை குதிப்பினும்
யானை நிழல்காண் பரிது.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

தெளிவு - பகை சிறியதாக இருப்பினும் அதனின்று தன்னைக் காத்துக் கொள்ள உணராதவர் பிழைபாடுடையவர் ஆவர். ஆழமான நீர் நிறைந்த மடுவின் கண் சிறு தவளை குதித்தாலும் அத் தண்ணீரில் மிகப் பெரிய யானையின் நிழலைக் காணுதல் அரிதாகி விடும்.
பகை சிறிதெனினும் அதைப் பொருட்படுத்தாது இருத்தல் கூடாது.

கடன், நெருப்பு, பகை இவற்றை ஆரம்பத்திலேயே அழித்து விட வேண்டும். வளர விட்டால் பிறகு நம்மையே அழித்து விடும். இதனைத் தான் வடமொழியில்
ருணசேஷம், அக்கினிசேஷம், சத்துருசேஷம் என்று குறிப்பிடுவர்.

வட்டிக்குக் கடன் வாங்கி வட்டியும் குட்டி போட்டு கடன் தொல்லையால் அழிந்த குடும்பங்கள் உண்டு.

நெருப்பையும் பற்றி எரியத் துவங்கும் போதே  நீர் ஊற்றி அணைக்காமல் வளர விட்டால் மூண்டு பெரிதாகி உடைமைகளையும், உயிரையும் அழிக்கும்.

சிறிய பகைதானே என்று பொருட்படுத்தாமல் விட்டு விட்டால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வன்மம் வளர்ந்து வாழ்வையே அழிக்கும்.

பகை சிறியதாக இருக்கும் போதே களைந்துவிட வேண்டும். பக்குவமாகப் பேசி விட்டுக் கொடுத்து நட்பாக்கிக் கொள்ள வேண்டும். சரி வரவில்லையாயின் விட்டு விலகுதல் வேண்டும். பகை முற்றி நம்மையே பதம் பார்க்கும்படியாக வளரவிடக் கூடாது.

பகையை சிறியதாக இருக்கும் போதே களைந்து நட்பாக்கிக் கொள்ளுதலே பெருமை பயக்கும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...