Wednesday, December 26, 2018

ஏன் அழுதாய் அஞ்சுகமே!















ஏன் அழுதாய் அஞ்சுகமே!


இராஜபட்சே கனவில் வந்து 
இராத்தூக்கம் கெடுத்தாரோ?

இராப்பொழுதில் அழுததற்கு
மோடி வரி விதித்தாரோ?

வெற்றிகரத் தோல்வி என்று 
வித்தாரம்  உரைத்தாரோ?

வெற்றிபெற்ற நடிகர் வந்து 
பூட்டு ஏதும் உடைத்தாரோ?
   
இரு மாத இட்டிலிக்கு 
ஏழுகோடி கேட்டாரோ?

இசை தந்த வித்தகரை 
வசை பாடி வைத்தாரோ?

அனுமனுக்குச் சமயம் சொல்லி 
விழல்க் கதைகள் கதைத்தாரோ?

ஆடைக்கடைக் காரர் வந்து 
விளம்பரத்தில் முறைத்தாரோ?

எங்களுக்கே சகிக்கவில்லை 
எப்படி நீ சகித்திடுவாய்?

இது இப்போதைக்கு உருப்படாது
இனியவளே உறங்கிடுவாய்... 


_ நன்றிகளுடன் 
_ இல்மீ உமர் 
     


     

Saturday, December 22, 2018

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை

















தமிழில் உள்ள இலக்கியங்களின் பாடல்கள் பெரும்பாலும் விளங்குவதில்லை, அதற்கு உரை தேவைப்படுகிறது.

உரை தேடியும், நிகண்டுகளில் மரபுச் சொற்களுக்கு பொருள் தேடியும் துவண்டு போவதால் சங்க இலக்கியங்களை நாங்கள் தொடுவது இல்லை.

👆👆👆
என்று கதைப்போரும் உளர்.

பிறகு வந்த புதுக்கவிதைக்காரர்கள் மரபுக் கவிதைகளையும்,
அதனை எழுதுவோர்களையும், அதனை ஏற்பவர்களையும் கூட சாடினார்கள்.

புதுக்கவிதையில் வித்தகம் புரியும் மு. மேத்தா ஒருமுறை இப்படி எழுதினார்...

👇👇👇

மரபுகளைக் 
கட்டிப்பிடித்துக்கொண்டு
மாரடிக்கும் மகாப் பெரிய 
மனிதர்களை 
மன்னித்து விடுவோம். 
என்கிறார்.

இன்னும் கூறுகிறார்
👇👇👇

நான் பழைய சொற்களுக்குள் 
பதுங்கிக்கொள்பவன் அல்ல.
புதிய சொற்களின் மூலம் 
போராட வந்தவன்.
என்று எழுதினார்.

இக்கருத்தில் இணக்கமும் இருக்கலாம், பிணக்கமும் இருக்கலாம்.

இருப்பது அப்படியே இருக்கட்டும்.

நான் கூற விரும்பியது...
👇👇👇

சில இலக்கியங்களில் சில பாடல்களை பிற்சேர்க்கை 
என்று வைத்துவிடுவது உண்டு.
அது இலக்கிய ஓட்டத்துக்கு பொருந்தவில்லை,
பொருள் விளங்கவில்லை  
முந்தைய பாடல்களுள் இது போன்ற சொற்கள் இடம்பெறவில்லை,
முரணாக நிற்கிறது
இன்னும் பல காரணங்களுக்காகவும்.

அது போக சில கட்சி சார்ந்தவர்கள், அவர்கள் கொண்ட கொள்கைக்கு மாறாக உள்ள பாடல்களை இது பிறகு வந்தவர்கள் எழுதித் திணித்து வைத்த பிற்சேர்க்கை என்று உறுதியாக உரைத்து முடித்துவிடுவார்கள்.

எது எப்படியோ தமிழ் கற்ற சான்றோர்கள் இலக்கியங்களுள் பிற்சேர்க்கை என்று கூறப்படும் பாடல்களையெல்லாம் தொகுக்க வேண்டும்.

 இதற்கான முன்னெடுப்புகள் இருந்திருக்கலாம், என் தேடலில் அப்படி முன்னெடுப்புகள் கிட்டவில்லை.

இலக்கியங்களை வாசிப்பவர்கள் பிற்சேர்க்கைப் பாடல்களை பெரும்பாலும் அவதானிப்பதில்லை.

தனிப்பாடல் திரட்டு போன்று பிற்சேர்க்கைப் பாடல்களையெல்லாம் தொகுத்து, அதற்கு பொருள் கொடுத்து வெளியிட்டால் எத்தனை சிறப்பாக இருக்கும்.

அது தமிழுக்கு செய்யும் தொண்டல்லவா?

பொருள் விளங்காமையாற் பிற்சேர்க்கையாக வைக்கப்பட்டுள்ள அறநெறிசாரத்தின் ஒரு பாடலுடன் விடைபெறுகிறேன்...
👇👇👇

அருள்வட்ட மாக அறிவு கதிராய்ப்
பொருள்வட்ட மெல்லாம் விளக்கி-- இருள்வட்டம்
மாற்றும் அறிவான ஞான வளரொளியான்
வேற்றிலிங் கந்தோன்றும் வென்று.

கடுநடை இலக்கியங்களுக்கு பொருள் தந்த இம்மூத்த குடி இதுபோன்ற பாடல்களுக்கு தெளிவு தர முடியாதா?

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?
_ பாரதிதாசன்

வாழ்க தமிழ்...
உயர்க தமிழர்...

நன்றிகளுடன்
_ இல்மீ உமர் 


🌈🌈🌈💗💗🙏💗💗🌈🌈🌈 

அழகே ஆரணங்கே!















அழகே ஆரணங்கே!
என் ஆருயிரும் ஆனவளே!

சிலையே சிற்றிடையே!
என் சித்தமெல்லாம் நிறைந்தவளே!

கலையே! கவியமுதே!_
என் கண்தேடும் காரிகையே!

உயிரே! எனதுயிரே!_
என் ஊனோடும் உறைந்தவளே!

உனை நான் கரம்பிடித்தால் இவ்வுலகேழும்
வாங்கிடுவேன்.

வெண்ணிலவைத் துண்டாடி
உன் முற்றத்திலே விளக்கெரிப்பேன்.

வானவரை வென்று உந்தன்
வாசலிலே காவல் வைப்பேன்.

கடலைத் திடலாக்கி
என் கண்ணீரில் முத்து செய்வேன்.





நன்றிகளுடன்
_இல்மீ உமர்  

Tuesday, December 11, 2018

தரளத்தை எறுழிக்கு இட்டது போலாகிவிடும்



குறள்  எண்  - 377

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

பொதுவான உரை

ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.


கல்லாதார் கற்றாரை எள்ளுதல்





கற்காதவர்கள் நிறைந்திருக்கும் அவையில் புகுந்து, அந்த புல்லர்களையெல்லாம் 
தன் வாய் வித்தையால் வென்று பெருமிதமாக வாழ்வான் (மானம் கெட்ட வாழ்க்கை). 
அப்படி வாழ்ந்த அந்த மண்டூகம் அதே செருக்கோடும், திமிரோடும் கற்றவர்களை
 இகழ்ந்து பேசுவான்.

👆👆👆
 இப்படிப்பட்ட பதர்களுக்கு ஒரு பழமொழி சொல்கிறார்
பழமொழி நானூரின் ஆசிரியர்.
👇👇👇
                                   மிளகு உளு உண்பான் புகல்

அதாவது மிளகில் உள்ள புழுவினை உண்டவன் என்ன பயனை
அடைவானோ  அந்த பயனை அடைவான்.

என்கிறார், இதில் ஒரு நுட்பமான குறிப்பு உண்டு.👇👇👇

மிளகு, சாதிக்காய், ஏலக்காய் முதலியவற்றில் உள்ள புழுக்களை
உண்டவர் பிழைத்தல் அரிது என்கிறார்கள்.

அப்படியானால் கற்றவர்களை இழிவு படுத்தும் கல்லாத அறிவிலிக்கு 
துன்பம் வந்து சேரும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

மேலும் என் கருத்து
👇👇👇

கற்காமல் கவட நாடகம் போடும் தற்குறிகளை கல்லாத புல்லர் என்று
சொன்னால் கற்ற புல்லரும் இருப்பர்.

யார் அந்த கற்ற புல்லர்?
👇👇👇

கற்றோரை இழிவு படுத்தும் கல்லாத புல்லரெடு இணக்கம் கொள்ளும்
கற்றவனும் புல்லன் ஆகிறான்.
சான்று 👇👇👇

எறுழியுடன் சார்ந்த ஆ

இப்போது அப்பாடலை பார்க்கலாம்
👇👇👇

அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர் 
நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் கல்வி 
அளவிறந்து மிக்கார் அறிவெள்ளக் கூறல் 
மிளகுளு வுண்பான் புகல்.


நன்றிகளுடன்
_ இல்மீ உமர்

🌾🌾🍁🍁🍃🙏🍃🍁🍁🌾🌾

நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது



பின் வரும் வார்த்தைகளை ஒரு காட்சியாக மனதில் காணுங்கள்


ஒரு வங்கிக்கு அல்லது ஏதாவது பதிவு அலுவலகம் செல்கிறீர்கள், 
ஒரு கையொப்பம் இடவேண்டும், கையில் எழுதுகோல் இல்லை வழக்கம் போல் எடுத்துச்செல்லவில்லை.

கூட்டமும் அதிகம், அருகில் உள்ளவரிடம் எழுதுகோல் கேட்கிறீர்கள்.
அவர் சிறிது சந்திப்பார், அல்லது மூடியை எடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டு எழுதுகோலைத் தருகிறார்.
(பலருக்கும் பட்டறிவு [அனுபவம்] இருக்கும்.)

கொடுப்பவருக்கு, இந்தக் கூட்டத்தில் இவன் எழுதுகோலைக் கொண்டு சென்றுவிட்டால் இவனை எங்கு சென்று தேடுவது என்ற கவலை.

கேட்டவனுக்கு, அற்பப் பேனாவுக்கு இந்த அக்கப்போரா? என்ற கவலை.

ஆக..... பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று படித்து அதை வித்தாரமாக ஊருக்கு சொல்பவனும், சிறு சிறு பொருட்களின் மீது கொண்ட பற்றினால் பகிர்தல் எந்த பண்பினைச் சிதைத்து விடுகிறான்.

👆 சிறு பொருள் மீது கொண்ட பற்றும் நம் பண்பை மாற்றுகிறது என்பதற்காக இதைச் சொன்னேன்.

(சிலருக்கு செருப்புத்திருடன் போல இவன் பேனா திருடன் என்ற ஐயம் வந்துவிடும். மனம் குழம்பிப்போவார்கள்)

👆 பகடி என்றாலும் உண்மைதான்.

இப்போது நான் சொல்லவந்தது...👇

கடுமையான வெயிலில் நடந்து செல்லும் போது ஒதுங்கி நிற்க ஒரு நிழல் கூட இல்லை.

ஆனால் நம்முடைய நிழல் நம்முடன் தான் வருகிறது. அதில் சில நிமிடம் இளைப்பாற முடிகிறதா?

அறிவியலாக அது முடியாது நாம் அறிந்தது.

நான், என்னுடையது என்று பார்த்துப் பார்த்து பராமரிக்கும் நம் உடலும், ஈட்டும் பொருளும் நாம் செத்த பிறகு நமக்கு உதவாது.

(செல்வத்தை என் தந்தை தந்தார் என்று பிள்ளைகள் எடுத்துக்கொள்ளும், என் அன்பு அப்பாவுடைய பிணம் என்று ஃபிரிட்ஜ்யில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்🙊.)

👆 ஆக இந்த யாக்கையும், செல்வமும் நிலையானது அல்ல. 👇

எனவே வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுவோம், அள்ளியும் கொடுக்க வேண்டாம்.
கிள்ளியும் கொடுக்கவேண்டாம்.

உன்னிடம் இருப்பது நொய் அளவு தான் என்றால் அதில் ஒரு பிளவளவேன்னும் வறுமைப் பட்டவருக்கு பகிருங்கள்.

(பட்டினத்தார் நினைவுக்கு வருகிறாரா? இல்லை.)

👆👆👆👆

இக்கருத்தினை பாடுகிறார் அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில்.

அப்பாடல் இதோ...👇👇👇

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்று
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணும் கடைவழிக்கே.


நன்றிகளுடன் 
_ இல்மீ உமர் 
 

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...