Saturday, June 11, 2022

சிப்பி தொடா நித்திலமே!

 




சிப்பி தொடா நித்திலமே!
சிற்ப உடல் அற்புதமே!

பாவலரும் பாடவொண்ணா 
காவனத்துப் பூவணமே!

ஓவியனும் கீறவொண்ணா 
ஒய்யார மானினமே!
 
தேன் பொதிந்தச்சொல்லினமே!
தேவருண்டக் கள்ளினமே!

பட்டினமே! சிட்டினமே!
நித்தமுந்தன் சொப்பனமே!

வட்டவிழிப் பார்வையினால் 
வட்டெறிந்த வல்லினமே!

மேகவுடை போட்டுவந்த 
மெலிதான மெல்லினமே!

இறைமறுப்புவார்த்தை சொல்லும் 
இனிதான இடையினமே!

மண்சுமந்த அண்ணலவன்
பெண்சுமந்த செய்தியினை 
நீயறியச் சொல்லவந்தேன்
கேளடி என் கோகிலமே!

மண்சுமக்கத் தோளுமுண்டு 
பெண்சுமக்கும் நாளுமென்று 
நித்திரையும் கெட்டதடி 
இரணந்தீர்ப்பாய் இரத்தினமே!

ஏறெட்டுப் பார்க்காமல் 
ஏக்கமது தீர்க்காமல் 
ஏதுமற்ற ஏதிலியாய்
ஏங்கவிட்ட பெண்ணினமே!

மோகமென்றும் முத்தமென்றும் 
மெத்தையிலே யுத்தமென்றும் 
விரகத்தில் விளிக்கவில்லை
காத்திடுவேன் கண்ணியமே.

சொல்லால் அடிபோட்டு 
சொப்பனத்தில் முடிபோட்டு
அம்மி மிதித்தாங்கு
அருந்ததியும் நாம்பார்த்து
பஞ்சணையும் பலகடந்து
பவளவிழா கண்டபின்பும் 
நீ காலணிந்தக் கொலுசொலிதான்
என் காதோர மோகனமே!

என்று பலக்கனவு கண்டு 
ஏழையாகி இறங்கிவிட்டேன்.

முத்துநகைப் பெட்டகமே!
மூச்சுவிடும் சித்திரமே!

பிரம்மனவன் வித்தகமே!
எனைப் பேதலிக்க விட்டிடுமே.

பந்திமுடிந்த பின்பும் பசித்து  
நிற்கும் என் மனதில் 
பாவையுன்னை பலகாலம் 
பதியம் போட்டு வைத்துவிட்டேன்

போட்ட விதை  என்மனதில் 
விருட்சமாகி நிற்குதடி 

காற்றோ? பெருமழையோ?
காடழிக்கும் கொடுந்தீயோ?
ஆழிப்பேரலையோ?
அலியார் தம் செய்வினையோ?
ஏதோ விரைந்துவந்து 
இவ்விருட்சத்தைச் சாய்க்காதோ?

செத்துப்பிழைக்குதடி மனம்      
சரவெடியாய் வெடிக்குதடி

குத்திக்கிழிக்குதடி உள்ளம் 
குமுறி அழுகுதடி 

வெட்டவெளிப் பட்டிணமாய்
விரிந்திருந்த என்மனது 

வெடிவிழுந்த ஈழமண்னாய்
ஓலமிட்டுக் கத்துதடி

அரிசியென்று அள்ளிப்பார்க்க 
ஆள்யாரும் இல்லையடி 

உமியென்று ஊதிப்பார்க்க
உற்றவரும் இல்லையடி 

பற்றிவிட்ட உன்நினைவோ 
விட்டுப் போகுதில்லையடி

சப்பிவிட்டுச் செத்துப்போக 
சையனைடும் இல்லையடி 

ஏக்கப்பட்டு ஏக்கப்பட்டு
எத்தனைநாள் வாழுவது 

தூக்குப்போட்டுச் சாகுறேன்டி
துளிநேரம் பார்த்திடடி. 

_ குறிஞ்சிக் கொற்றவன் 
   


Saturday, April 30, 2022

சிறுகதை

 

வெடிப்பு 


சட்டையைக் கழற்றிவிட்டு நின்றால் சாலையில் போகின்ற ஒவ்வொருவரும் நின்று பார்த்து வருந்திவிட்டுப் போவார்கள். அப்படியொரு சூம்பிப்போன உடம்புதான் இனியனுக்கு. ஆனால் அவனது நிறமும் அழகான முகமும் யாரையும் வசீகரிக்கும் வல்லமை கொண்டவை. 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய கையோடு ஜவுளிக் கடைக்கு வேலைக்கு வந்துவிட்டான். வேலையில் சேர்ந்து சில மாதங்கள் ஓடிவிட்டன. அன்று வெள்ளிக்கிழமை, காலை பத்து மணி. தூக்குச் சட்டியைத் தூக்கிக் கொண்டு இருபது அடி தொலைவிலிருக்கும் டீக்கடைக்கு விரைந்தான்.

அண்ணா… ரெண்டு பார்சல் 'டீ'ண்ணா…

டீ மாஸ்டர் வழக்கம் போல் புன்சிரிப்போடு ம்ம்ம்... என்றார்.

அண்ணா ரெண்டு பார்சல் டீ டோக்கன் குடுங்கண்ணா…

 கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்தவன் அபுதாஹிர். ‘அபு' என்றுதான் அழைப்பார்கள். வயது 28க்கு மேலிருக்கும். சாலையில் கடந்து போகும் பெண்களை, எந்த வேலைகளுக்கு இடையிலும் எழுந்து நின்று வெறித்துப் பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சோடு அமர்ந்து கொள்வான்.

'கண்கள் படைக்கப்பட்டதன் நோக்கமே பெண்களைக் காண' என்பதே அவனது சித்தாந்தத்தின் முதல் கொள்கை.

மாஸ்டர், இனியனுக்கு டீ போட்டுக் கொடுப்பதற்குள் அபு இனியனை வைத்து ஆத்திக் கொண்டிருப்பான். இது வழமையாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று.             

என்னடா இனியா... கசீனா இன்னிக்கி தலை குளிச்சிருக்கா போல. 

அபு அண்ணா… ஒனக்கு இதத் தவர வேற பேச்சே இல்லயாண்ணா… என்று கேட்ட இனியனுக்குச் சட்டென மனதில் பட்டது.

 ‘ஒத்த வீட்டு நாயி எதுக்கோ காத்த மாதிரி திரியுறவன் இவன், இவனுட்டயா வாயக் குடுத்தேன். எல்லாக் கழுசட நாய்களும் கூடிருச்சுங்க. எதையாச்சும் பேசி எம்மானத்த வாங்கப் போறான்.’ என்று நினைத்துக் கொண்டே மீதிச்சில்லறையைச் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு அந்த இடத்தைவிட்டு விலகிச்செல்ல முயன்றவனின் வலது கையை எட்டிப் பிடித்தான் அபு. 

 ‘என்னடா கூட வேலைபாக்குறவளப் பத்திச் சொன்னா…. கூடப்பெறந்தவளச் சொன்ன மாறி வெடக்கிறே… சரி இனிமேல பேசமாட்டேன். நாளையில இருந்து நீ ஒரு சுடிதாரை மாட்டிகிட்டு டீ வாங்க வந்துடு.’

 என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் கையை விட்டுவிட்டு இனியனின் மார்பைக் கிள்ளிவிட்டான். கூடியிருந்த இளவட்டக் கூட்டமெல்லாம் கொல்லென்று சிரித்தார்கள். இனியனுக்கு இது சற்றே அவமானமாக இருந்தாலும், அபுவைத் தவிர வேறு யாரும் அவனிடம் அப்படி நடந்துகொள்வதில்லை. ஒரு முறை அபுவின் நண்பர்களில் ஒருவன் இனியனிடம் கிண்டலாகப் பேசியபோது, காது கொடுத்துக் கேட்க முடியாத சொற்களில் வசை பாடிவிட்டான் அபு. சிறு வயதில் வறுமையின் காரணமாக வேலைக்கு வந்து இப்படி அலைக்கழிந்து கொண்டிருக்கும் இனியன் மீது அபுவுக்கு ஒரு பரிவு இருந்தது. அதனால் அவனிடம் உரிமையோடு விளையாடுவான். அதைச் சரியாகவே புரிந்து வைத்திருந்தான் இனியன்.

கடை வாசலில் கூடியிருந்த நண்பர்கள் என்னும் வானரக் கூட்டத்தில் ஒன்று, மெல்லக் குரல் கொடுத்தது.

டேய்... மச்சான்... அபு...

அபு விருட்டென நாற்காலியிலிருந்து எழுந்து நின்றான். ஓர் இளம்பெண் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு நடந்து சென்றாள். இந்த மதுரை மாநகரில் ஒரு யுவதி ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொள்வதொன்றும் வியப்புக்குரிய செயல் இல்லை. ஆனால் இவர்கள் பெண்களை இப்படி வைத்த கண் வாங்காமல் பார்ப்பதுதான் இனியனுக்கு வியப்பான செயலாகப்பட்டது. இனியன் தன் உள்ளத்தோடு உரையாடிக் கொண்டான்.

 அம்மாதான் அடிக்கடிச் சொல்லும் 'காணாத நாயி கஞ்சக் கண்டுச்சாம், ஓயாம ஓயாம ஊத்திக் குடிச்சுச்சாம்'ன்னு. அதுக்கு அர்த்தம் இப்போதான் வெளங்குது எனக்கு.’

‘ஆத்தாடி... நம்ம கடையில உள்ள பொம்மைகளுக்கு டிரஸ் மாத்தும் போது இவங்க வந்து பாத்தாங் கே அவ்வளவுதான். வரலாறுலயே இல்லாத சம்பவமெல்லாம் நடந்துடும்.’

சட்டென உடலை உலுப்பி விட்டுக் கொண்டான் இனியன்.

 அபுவின் டீக்கடை சாலையின் விளிம்பில் உள்ள நடை மேடையை ஒட்டியே இருந்தது.  டீப்பட்டறையை மொய்த்துக் கொண்டிருந்த இனியனின் கண்கள் ஒரு வினாடி நடைமேடையில் பறந்தது. அப்போது தற்செயலாக அவன் கண்ணில் பட்டது அக்காட்சி. அது செருப்பணியாத பித்தவெடிப்பேறிய ஒரு பெண்ணின் கால்கள். அது சாதாரண வெடிப்பாக இல்லை. பாளம் பாளமாய் வெள்ளரி வெடித்தது போல் இருந்தது. அந்த வெடிப்புகளில் கருமண் புழுதி படிந்து கருத்துக் கிடந்தது. சிவந்த அவள் நிறத்துக்கும் அவளுடைய குதிகாலுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. உள்ளபடியே சொன்னால் இனியனுக்கு சற்று அருவருப்பாய்தான் இருந்தது.

 அவள் ஆண்கள் அணியும் சட்டையும், ஒரு பூப்போட்டப் பாவாடையும் அணிந்திருந்தாள். இரண்டுமே அழுக்கேறிய சந்தன நிறத்தில் இருந்தன. அவள் டீக்கடைக்கு அடுத்து இருக்கும் தண்ணீர் டேங்கில் குடிதண்ணீர் பிடிப்பதற்காகக் குடத்துடன் சென்றாள். தண்ணீர் சிந்தி பாவாடையின் கரை நனைந்து, மண்ணில் பட்டு அழுக்காகும் என்பதால் பாவாடையைச் சற்றே ஏற்றிச் செருகிக்கொண்டு நடந்தாள்.

 அவள் ஓங்குதாங்கான உயரமும் இல்லை, உருவமும் இல்லை. இனியனுக்கு அவளின் முகத்தைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. ஒரு நிமிடத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும், இடுப்பில் குடத்துடன் அவள் திரும்பி வந்தாள். இனியனின் கண்கள் அகல விரிந்தன. இந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த 7G ரெயின்போ காலனி படத்தில் பார்த்த அந்தக் கதாநாயகியின் முக அமைப்பு அப்படியே அவளுக்குப் பொருந்தி இருந்தது. ஆனால் அவள் முகத்தில் எந்தவொரு உணர்வும் இல்லை. ஏதோ… இந்த உலகத்தில் தான் மட்டுமே இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்தது அவளது முகம். ஓர் ஒப்புக்குக் கூட அவள் கண்களில் கருவிழிகள் இங்கும் அங்கும் அசையவில்லை.

 இனியனுக்கு அபுவையும் அபுவின் நண்பர்களையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

 ‘இவங்கே கம்பத்துக்குச் சேலையக் கட்டிவச்சாலே கெளப்பிப் பாப்பாங்கே. இப்போ கட வாசல்லையே ஒரு பொண்ணு போகுது.....’

 பட்டெனத் திரும்பி அபுவையும் அபுவின் நண்பர்களையும் பார்த்தான். இனியனுக்கு, தான் காணும் காட்சியை நம்ப முடியவில்லை. அபு கல்லாவில் அமர்ந்திருந்தான். அவன் நண்பர்கள் அனைவரும் சாலைக்கு முதுகு காட்டி கடையைப் பார்த்தவாறு நின்றிருந்தனர். இனியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

மாஸ்டர் அண்ணா… லேட்டாகுதுண்ணா.... பார்சல போடுண்ணா...

 கடைக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டம் கூடிவிட்டது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த மாஸ்டருக்கு இனியனின் குரல் காதுக்கு எட்டவில்லை.

 ரெயின்போ காலனி அடுத்த குடத்துடன் நடந்து வந்தாள். இனியன், சட்டெனத் திரும்பி அபுவையும் அபுவின் நண்பர்களையும் பார்த்தான். முன்பிருந்த அதே நிலை. அவள் குடத்தில் நீரோடு மீண்டும் வந்தாள். டக்கெனத் திரும்பி அபுவையும் அபுவின் நண்பர்களையும் பார்த்தான். மீண்டும் முன்பிருந்த அதே நிலை.

 அபுவும் அபுவின் நண்பர்களும், அவள் போனதற்குப் பின் திரும்பி சாலையில் கண்களை மேய விட்டார்கள். இனியன் மண்டையை அழுத்திச் சொறிந்தான்.

‘இவங்கெ, திருந்திட்டோம்முனு சொன்னா தெய்வமே நம்பாது.’

‘ஐயோ….  இதக் கேக்காம விட்டா நம்ம மண்ட வெடிச்சிருமே! கேட்டுப்பாப்போம்.’

அபுவின் அருகில் சென்ற இனியன். தான் பார்த்த எல்லாவற்றையும் சொல்லி, ‘அண்ணா... நாங்க எல்லாந் திருந்திட்டோம்ன்னு மட்டும் சொல்லிராதண்ணா. நான் நெஞ்சி வெடிச்சு செத்துப் போயிருவேன்.’ என்று சொல்லிவிட்டு தூக்குப் போட்டுத் தொங்குவது போல நடித்துக் காட்டினான்.

 இனியன் பேசியது அபுவுக்கு மட்டுமில்லாமல் அவன் நண்பர்கள் பலரின் காதிலும் விழுந்துவிட்டது. ஒரே நேரத்தில் எல்லோரும் கைகொட்டிச் சிரித்தார்கள். இனியனும் சேர்த்து சிரித்தான்.

 சில வினாடிகளுக்குப் பிறகு அபு பேசத் துவங்கினான். தத்துவம், வித்தகம், தாண்டியலங்காரமெல்லாம் கற்றப் பெரும் பாவலனைப் போல உவமையோடு சொற்கள் வந்து விழுந்தன.

டேய் இனியா... நல்லாக்கேளு...

 'எச்சிச் சோத்தத் தின்டுறலாம் ஆனா பன்னி தின்ட சோத்தத் திங்க முடியுமா?' என்றான்.

 அது வன்மத்தில் வார்த்தெடுத்த வினா. இனியனுக்குக் குமட்டுவது போல் இருந்தது. ஏன் இவனிடம் வந்து பேசினோம் என்பது போல இருந்தது இனியனின் முகக்குறிப்பு. அபு மறு கேள்வியைக் கேட்டான்.

 ‘டேய்… ஒனக்கு என்னோட ஃபிரெண்டு ராஜாவத் தெரியுமா?’ என்றான்.

 ‘ம்ம்ம்.. தெரியுமே… மூஞ்சி, கை, காலு எல்லாம் அம்மத் தழும்பா இருக்குமே அவருதானே’ என்றான் இனியன்.

 ‘ஆமா... அந்த மலமாடுதான்.’ என்று கூறிய அபு சுருக்கமாக ஒரு கதை சொல்லத் துவங்கினான். தொடக்கத்திலேயே தெரிந்து போனது ரெயின்போ காலனியின் பெயர் ‘பிரியதர்ஷினி’ என்ற ‘பிரியா.’

 தாய்தந்தையை இழந்த பிரியா, தன் பாட்டியுடன் தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். பாட்டி அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவள். நோய் உடம்பைத் தின்று கொண்டிருந்தது. அவள் மதுரைக்கு வந்து வேலை செய்யத் துவங்கிய காலத்திலிருந்து இப்போது வரை அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் முதல் தளத்தில்தான் குடியிருக்கிறாள். மற்றபிள்ளைகள் அனுப்பும் பணமும், தன்னுடைய ஓய்வூதியமும் தனக்கும் பேத்திக்கும் போதுமானதாக இருந்தது.

 பிரியா கல்லூரி முதல் ஆண்டு சேர்ந்த போதுதான் ராஜாவுடன் காதல் மலர்ந்தது. ராஜாவைப் பார்க்கும் யாரும் அவன் அருகில் சென்று பேசவே அருவருப்புப் படுவார்கள். ஆனால் பிரியா அவன் உருவத்தைப் பெரும் பொருட்டாகக் கருதவில்லை. அவள் அவனது உண்மையான காதலை மட்டுமே விரும்பினாள். மதுரையில் அவர்கள் கால் படாத திரையரங்குகளோ, கோயில்களோ, பூங்காக்களோ இல்லை. காதலில், உரிமைகள் எல்லைமீறிய சில சமயங்களில் தன் உடலையும் அவனோடு பரிமாறிக் கொண்டாள். சில காலங்களுக்குப் பிறகே பிரியா அவளுக்கு விளங்கியது, ராஜா தன் மீது கொண்டது காதல் அன்று, அது வெறும் உடல் இன்பம் சார்ந்த வேட்கைதான் என்று. அப்போதிலிருந்து ராஜாவிடமிருந்து பிரியா தன்னை விலக்கிக் கொள்ள முயன்றாள். இதை விளங்கிக்கொண்ட ராஜா அவளை மிரட்டத் துவங்கினான். அந்த நேரத்தில்தான் தமிழ்நாட்டில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்புள்ள கைபேசிகள் சிறிது சிறிதாகப் பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருந்தன. ராஜாவின் கையிலும் அப்படிப்பட்ட ஒரு கைபேசி இருந்தது. அதில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஏராளம் இருந்தன. அதனைச் சமூக வலைதளங்களில் பரப்புவேன் என மிரட்டி, தான் சொன்ன இடத்துக்கு வரவழைத்து அவளைப் பயன்படுத்தத் துவங்கினான். அதுமட்டுமல்லாமல் தன் நண்பர்களையும் ஏவிவிட்டு அவளைத் துன்புறுத்தினான். இதில் உச்சகட்டக் கொடுமையும் உண்டு. நண்பரகள் அனைவரும் இரவில் கூட்டம் சேர்ந்து குடித்துவிட்டு அவளது வீட்டுக்கே சென்றுவிடுவார்கள். கதவைத் திறக்கவில்லை என்றால், ‘இவள்தான் எங்களை விபச்சாரத்துக்கு அழைத்தாள்’ என்று வீதியில் நின்று கூச்சல் போடுவோம் என்று மிரட்டினார்கள். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடைக்கும் அவள் பாட்டியைக் கயிற்றால் கட்டிவைத்துவிட்டு பாட்டியின் கண்முன்னேயே பேத்தியுடன் உறவு கொள்வார்கள்.

 சில மாதங்களுக்குப் பிறகு அந்த இளைஞர்களுக்கு அவளோடு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையே விட்டுப்போனது. அதற்குக் காரணம் கணக்கில்லாத ஆடவர்களால் அவள் கந்தலாக்கப்பட்டுவிட்டாள். இனி அவளோடு உறவு வைத்துக் கொண்டால் நோய் வந்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். எப்படியோ அவள் அந்த மிருகங்களிடமிருந்தது தப்பிவிட்டாள். ஆனால் அவளைப் பார்த்தால் பீயைப் பார்த்ததைப் போலக் காறி உமிழும் ஆடவர்களின் தூசனப் பார்வையை எதிர்கொண்டு வாழ்வது, நரகத்தினும் கொடியதாய் இருந்தது அவளுக்கு. எனவேதான் அவள் ஒரு நல்ல ஆடைகூட அணிவதில்லை. தன்னை அலங்காரப்படுத்திக் கொள்வதில்லை. தன் உடலைக்கூட பேணிக் கொள்வதில்லை. இந்த அவமானக் கறையை அலசித் துவைத்து விட முடியாது என்பதை அவள் நன்கு அறிவாள். ஆனால் தன்னை வளர்த்த அந்தக் கிழவியை விட்டுவிட்டுச் சாக அவளுக்கு மனமில்லை. ஆதலால் இந்த உடல் கூட்டில் உயிரைச் சுமந்து கொண்டு  உலவித் திரிகிறாள்.

 இக்கதையை எல்லாம் இனியனிடம் சொல்லி முடித்தான் அபு. ஆனால் இதில் பிரியா ஒரு வேசியைப் போன்றும், தன் நண்பர்கள் அனைவரும் ஒரு சூழ்நிலைக் கைதிகளைப் போன்றும் சித்தரித்தது அவனது சொற்கள். தொடர்ந்து அபு பேசத் துவங்கினான்.

 'இப்ப புரியுதா? இவள எதுக்குப் பன்னி தின்ட சோறுன்னு சொன்னேன்னு.' என்று கூறிவிட்டு ஒரு ஏளனச்சிரிப்பை உதிர்த்தான். சிரிப்பில் கூட இழிவுகளைப் படம்பிடிக்க முடியும் என்பதை அப்போதுதான் உணர்ந்தான் இனியன்.

'டேய் தம்பி டீ ரெடிடா...'

 மாஸ்டரின் குரல் உரக்க ஒலித்தது. இனியனுக்கு, அபுவையும் அவன் நண்பர்களையும் பார்க்கும் பொழுது; தன் உடலெல்லாம் சாக்கடைப் புழுக்கள் நெளிவது போன்ற ஓர் உணர்வு உருவானது. தூக்குச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சாலையில் நடந்தான்.

 பிரியாவின் கால்களில் இருந்த வெடிப்புகள் இப்போது இனியனின் இதயத்தில் இருந்தது

கையில் இருந்தத் தூக்குச்சட்டி, தன்னைத் தரை நோக்கி இழுப்பதாக உணர்ந்துதான். இனியனின் இதயத்தில் எண்ணற்ற வினாக்கள் எழுந்துகொண்டே இருந்தன.

 வள்ளுவத்தின் காமத்துப்பாலைக் கூட நம் பள்ளிக்கூடத்தில் இன்பத்துப்பால் என்று தானே படிப்பித்தார்கள். காமம் இன்பமென்றால் அதில் ஈடுபடும் இருவருக்கும் அது இன்பம் தரத்தானே வேண்டும். ஒருவரைத் துன்பப்படுத்தி ஒருவர் இன்பம் அனுபவிக்க முடியுமா?

அப்படி அனுபவிக்கத் துடித்தால் அந்த உணர்வுக்கு என்ன பெயர்?

காமம் என்பது வெறும் உறுப்பு சார்ந்த விடயம்தானா? இதில் உள்ளத்துக்கு இடமில்லையா?

காமம் வந்துவிட்டால் மானுட மாண்புகளெல்லாம் மரித்துப் போய்விடுமா?

பெண்கள், ஆண்களின் காமத்தைத் தணிக்க மட்டுமே உதவும் இயந்திரங்களா?

பலரால் பயன்படுத்தப் பட்டவள் ‘வேசி’ என்றால் பயன்படுத்தியவனுக்குப் பெயரொன்றும் கிடையாதா?

வாழ்வில் வழுக்கி விழுந்த ஒருத்தியை அவமானச் சின்னமாக அடையாளப் படுத்தும் இச்சமூகம், அதற்குக் காரணமான ஆண்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவது சரியா?

நடப்பது ஒரு செயல். ஆனால் அவமானம் பெண்ணுக்கு மட்டும். அதன் நிழல் கூட ஆண்களின் மீது விழுவதில்லையே! இப்பாகுபாடு ஆண்டவன் தந்ததா? ஆண்கள் தயாரித்ததா?  

இவளைப் போல இன்னும் எத்தனைப் பிரியாக்கள் இந்த உலகத்தில் இருப்பார்கள்?         

நான் இன்னும் பெரியவனானால் எனக்கும் இது போன்ற எண்ணங்கள் வந்துவிடுமா?

இனியவனின் இதயம் எழுப்பும் எண்ணாயிரம் வினாக்களுக்கு எண்ணற்ற விடைகள் கொடுக்கப்படலாம். 

ஆனால் விடைகளை உருவாக்கும் வித்தாரக் கள்வர்கள், வினாக்கள் உருவாகாமல் இருக்க வழிவகை செய்வார்களா?

 வினாக்களின் வீரியத்தால் இனியனுக்கு நெஞ்சம் குமைந்தது. தன்னையறியாமல் கண்களில் நீர் நிறைந்தது. நெஞ்சம் கனத்தவனாய், தான் வேலை செய்யும் ஜவுளிக் கடைக்குள் காலெடுத்து வைத்தான். அந்த ஜவுளிக்கடையில் வேலை செய்யும் பன்னிரெண்டு பேரில் இனியனையும், கணக்காளரையும் தவிர மற்ற பத்துபேரும் திருமணமாகாத இளம் பெண்கள்.

 சுடிதார் செக்சனில் நின்றிருந்த ஈஸ்வரி கீச்சுக் குரலில் அன்போடு கேட்டாள்.

 ‘என்னடா தம்பி கடையில கூட்டமா... நீ போய் ரொம்ப நேரமாச்சேடா...’ என்றாள்.

இனியன், அந்த பத்து பெண்களையும் பரிதாபமாகப் பார்த்தான். அவன் நடை தள்ளாடியது. எப்போதும் இல்லாத ஒரு பாவனை அவனிடம் இருப்பதைப் பார்த்த அப்பெண்கள் அனைவரும், அவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்தார்கள். தூக்குச்சட்டியை மேசையின் மீது வைத்த இனியன் ‘அக்கா....’ என்று பெருங்குரலெடுத்து தரையில் விழுந்து அழுதான். இருபது கைகள் அவனைத் தொட்டுத் தடவித் தேற்றியது. காரணம் ஏதும் அறியாமலே அந்த இருபது விழிகளும் கண்ணீரில் கரைந்தன. கடையின் இண்டு இடுக்கெல்லாம் விசும்பல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது…  


 

இது போன்ற சமூக அவலங்கள் முற்றுப்பெறட்டும்.

முற்றும்.

 

நன்றிகளுடன் _ குறிஞ்சிக் கொற்றவன்.

   


Thursday, March 7, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 591














பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 60 - ஊக்கமுடைமை.
குறள் - 591

உடைய ரெனப்படுவது ஊக்கம்அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று.

விளக்கம் :-ஒருவருக்கு உடைமை என்று சொல்லப்படுவது ஊக்கம் உடைமையே. அஃது இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் ஆகார்.

உடைமைகளில் சிறந்தது ஊக்கம் உடைமை.ஊக்கம் உடைமை இருந்தால் உறுதியாக முயன்று மற்ற எல்லா உடைமைகளையும் பெற்று விடலாம்.

ஊக்கமுடைமை என்பது மனத்தளர்ச்சியின்றி எழுச்சியுடன் செயல்புரிதலாகிய உள்ளக் கிளர்ச்சியைக் குறிக்கும், ஒரு செயலை ஆர்வத்துடன் முனைந்து செய்வதற்கு இவ்வுள்ளக் கிளர்ச்சி இன்றியமையாதது.

ஒரு செயலை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலால் உள்ளத்தில் சுரந்தெழும் செயலுணர்வோடு கூடிய உள்ளக் கிளர்ச்சியே ஊக்கம் எனப்படும்.

ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை ஆகிய மூன்று அதிகாரங்கள் உணர்த்தும் கருத்துகள் வாழ்வில் முன்னேற்றப் பாதைக்கு நம்மை வழிநடத்தும்.

எண்ணமே வாழ்வு - என்பர்.
எண்ணும் எண்ணம் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும். எண்ணியர் திண்ணியரானால் எண்ணியது எண்ணியவாறே ஏற்றமுடன் sடக்கும். இடையறா ஊக்கம் ஆக்கத்திற்கு வழிவகுக்கும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

ஊக்கமது கைவிடேல்.
_ ஆத்திசூடி - ஒளவையார்.

செய்யும் செயலில் மன எழுச்சியைக் கைவிடாதே.

ஊக்கமுடைமை யாக்கத்திற்கு அழகு.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

செய்யும் செயலில் மனம் தளராதிருத்தல் செல்வத்திற்கு அழகாகும்.

உலையா முயற்சி களைகணா ஊழின்
வலிசிந்தும் வண்மையும் உண்டே

_ நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

இளைத்தவில்லாத முயற்சியையே பற்றுக் கோடாகக் கொண்டு, ஊழினது வலிமையைச் சிதைக்கின்ற வலிமையும் ஊக்கத்திற்கு உண்டு.
இளைத்தவில்லா முயற்சியால் ஊழையும் வெல்லலாம்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் _ என்பது நம் ஐயனின் திருவாக்கன்றோ?

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.

- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

தாம் துவங்கிய செயலைச் செய்து முடிப்பதிலேயே கருத்து கொண்டவர் உடலின் வருத்தத்தைக் கவனியார், பசியையும் பொருட்படுத்தார் , கண்ணுறங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதனையும் பொருட்படுத்தார், காலத்தின் அருமையையும் நோக்கார், பிறர் செய்யும் அவமதிப்பையும் கருதார்.

ஒரு செயலை ஊக்கத்துடன் முடிக்க முன்னிற்போர் தமக்கு வரும் எவ்வகை இடையூறுகளையும் பொருட்படுத்த மாட்டார்.

ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே யொருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.

- நாலடியார் -சமண முனிவர்கள்.

துவளுகின்ற சிறு கொம்பாகி, வழியிலே நின்ற இளமரமும் உள்வயிரம் கொண்ட போது யானையைக் கட்டுவதற்கு ஆதாரமான தறியாகிவிடும். தான் நின்ற நிலையிலிருந்து கீழ் இறங்குதல் இல்லாத படி முயற்சியுடையவனாக வாழ்பவரது வாழ்க்கையும் அத்தன்மையதே.
முயற்சி திருவினையாக்கும்.

உள்ளூ ரவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் - தள்ளாது
அழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு.

- பழமொழி நானூறு - முன்றுறையரையனார்.

பழைய ஊரிலேயுள்ள ஆரவாரமிகுந்த கடைத்தெருவில் மேய்ந்த பழைய கன்றே பிற்காலத்தில் வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டு.
கையிலுள்ள முதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியினால் அதனைப் பெரிதாக்கி, தன்னை இகழ்ந்த ஊரும் மெச்சும் படி வாழலாம். முயற்சி தான் வேண்டும் என்பதை அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு என்ற பழமொழி உணர்த்துகிறது.

ஆக்கத்தை இழப்பினும்
ஊக்கத்தை இழக்காதீர்
ஊக்கம் உடைமை
உயர்ந்ததோர் உடைமை.
உடல் ஊனம் கூட உண்மையில் குறையன்று
ஊக்க மின்மையே
உண்மையில் ஊனம்
உழைப்பை மறப்பதே
உலகில் ஈனம்!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 51














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்.
குறள் - 51.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

விளக்கம் - மனையறத்திற்கு வேண்டிய நற்பண்புகளும், செய்கைகளும் உடையவளாகித் தம் கணவனுடைய வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கையை அமைத்து நடத்திச் செல்கின்றவளே சிறந்த மனைவி ஆவாள். நல்லதொரு வாழ்க்கைத் துணையாவாள்.

கணவனும், மனைவியும் ஒருவரிடம் ஒருவர் கொண்ட காதல் இல்வாழ்க்கையில் அன்பாய்ப் பாய வேண்டும்.

இல்லறம் எனும் நல்லறம் நடத்தத் தேவையான நற்குணங்கள் இல்லாளிடம் இருக்க வேண்டும். மனைத்தக்க மாண்புகள் வேண்டும். கணவன், மனைவி இருவரும் 
கருத்தொருமித்து , கணவனது வருவாய்க்குத் தக்கவாறு கருத்தாய் வாழ்க்கை நடத்துபவளே சிறந்த வாழ்க்கைத் துணை.

ஆடம்பத்திற்கு ஆசைப்பட்டு தன் மனம் போனபடி கணவனை ஆட்டுவித்து, அவன் வளத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்தாதவளாயின் இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகிவிடும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்.
_ நறுந்தொகை _ அதிவீரராம பாண்டியர்.

ஒருவனுக்கு உரியவளாய் இல்லறம் நடத்தும் நற்குடிப் பிறந்த பெண்ணுக்கு அழகு தன் கணவனை உண்டி முதலியவற்றால் உபசரித்துப் பூசித்தலாகும்.


பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் 

- ஒளவையார்.

கணவன் சொற் கேட்டு அவனுக்கு ஏற்றபடி வாழ்க்கை நடத்தும் குணவதியானால் என்ன நேர்ந்தாலும் சேர்ந்து வாழலாம்.

இருவரும் கருத்தொருமித்து இல்லறம் நடத்தினால் வறுமை முதலான எந்த இன்னல்களையும் எதிர்கொள்ளலாம்.

கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள்-உட்கி
இடன் அறிந்துஊடி யினிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண் .

- நாலடியார் -சமண முனிவர்கள்.

கண்ணுக்கினிய தோற்றம் உடையவளும், தன் கணவன் விருப்பப்படி தன்னை அலங்கரித்துக் கொள்பவளும், அச்சம் உடையவளும், ஊராரைக் கண்டுநாணும் குணம் உடையவரும், தன் கணவனுக்கு அஞ்சி, சமயமறிந்து அவனோடு பிணங்கி ஊடல் தீர்க்கின்ற மென்மைத் தன்மையுள்ள மொழிகளைப் பேசுபவளே மனைவியாவாள்.

காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதிலொரு கருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி என்முகத்தாய் நோக்கறான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.

- நன்னெறி - சிவப்பிரகாசர்.

கண்களிரண்டும் ஒன்றையே ஒரு சேரக் காண்பதுபோல கணவன் மனைவி இருவர் நோக்கமும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை.
_ மூதுரை - ஒளவையார்.

நற்குணமனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடாகும்.

அன்னை தயையும் அடியாள்பணியும் மலர்ப்
பொன்னி னழகும் புவிப் பொறையும் - வன்னமுலை
வேசித் துயிலும் விறன்மந்திரி மதியும்
பேசில் இவையுடையாள் பெண் .

- நீதிவெண்பா.

தாயின் கருணையும் ,பணிப் பெண்ணின் தொண்டும், திருமகளைப் போன்ற அழகும், பூமாதேவியைப் போன்ற பொறுமையும், வேசியைப் போன்ற துயிலின்பமும், ஆலோசனை வழங்குவதில் மந்திரியைப் போன்ற மதிநுட்பமும் ஆகிய அரிய இயல்புகள் உடையவளே பெண் எனத் தக்கவளாவாள்.

இல்லறத்துக்கு ஏற்ற இனிய நற்குணங்கள் பொருந்தியவளாய், வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்துபவளாய் இருப்பவளே சிறந்த துணையாவாள்.

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.

- கலித்தொகை - பாலை பாடிய பெருங்கடுங்கோ.

ஒரே ஆடையை இரண்டாகக் கிழித்து இருவரும் உடுத்துமளவு வறுமை நிலை ஏற்படினும் மனம் ஒன்றி இயைந்து நடத்தும் வாழ்க்கையே இனிமையானது, 
அத்தகு வாழ்க்கைத் துணை அமையப் பெற்றாலே வாழ்வு நலம் பெறும். வளம் பெறும்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 199














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 20- பயனில சொல்லாமை.
குறள் - 199.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.


விளக்கம் - மயக்கம் நீங்கிய தெளிந்த அறிவினையுடையார் பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.

வாய்ச்சொற்கள் நெஞ்ச நிலையைக் காட்டவல்லவை. அற நினைவு இருந்தால் பயனற்ற எண்ணங்கள் தோன்றாது. அந்த எண்ணங்களின் விளைவான பயனிலாச் சொற்களைப் பேசுதலும் இயலாது.

பயனற்ற சொற்களைப் பேசித்திரிபவன் கள்ளுண்பவனைப் போலவும், சூதாடுபவனைப் போலவும் காலத்தையும், தன் ஆற்றலையும் வீணாக்கிக் கடமையை மறக்கின்றான். ஏதோ ஒன்றை உளறி அவன் அடையும் இன்பம் பொய்யானது. தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் போலியான இன்பம். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கண்டபடி பயனற்ற சொற்களைப் பேசித் திரிவது அவன் மீதுள்ள மதிப்பு, மரியாதையையும் வீணாக்கி விடும்.

சும்மா இருப்பதே சுகம்.

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.

பேசிய வார்த்தைகள் உனக்கு எசமான்.
பேசாத வார்த்தைக்கு நீ எசமான்

- என்பது போன்ற வழக்குகள் நடைமுறையில் உண்டு.

பயனற்ற சொற்களைப் பேசுபவன் விரைவில் மரியாதை இழப்பான்.
தெளிந்த அறிவினையுடையவரோ ஆராய்ந்து, அளந்து பேசுவர். ஒருபோதும் பொருளற்ற பயனற்றச் சொற்களை பேசமாட்டார்கள்.

பயனிலாச் சொற்கள் பேசுவது பண்படாத மனத்தின் குறையாகும்.
பக்குவப்பட்டவர்கள் பார்த்துப் பதமாகப் பேசுவர்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

நொய்ய வுரையேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

பயனற்ற அற்பவார்த்தைகளைப் பேசாதே.

வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்.
உலகநீதி - உலகநாதர்.

பயனற்ற சொற்கள் பேசுவாருடைய வாயைப் பார்த்துக் கொண்டு அவர் பின் அலைய வேண்டாம்.

பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை....

நலமன்றே நல்லாறு எனல்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

பொய்யும் , புறங்கூறுதலும், கடுஞ் சொல்லும், பயனில சொல்லுதலும் ஆகிய நான்கு குற்றங்களும் வராமல் ஐம்புலன்களை அடக்கிக் காப்பதே நன்னெறியாகும்.

மையோ தடங்கண் மயிலன்னாய் சாயலே 
மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பர் - பொய்யே
குறளை கடுஞ்சொல் பயனில சொல்நான்கும்
மறலையின் வாயினவா மற்று.

- ஏலாதி - கணிமேதையார்.

மைதீட்டப்பெற்ற அழகான பெரிய கண்களை உடைய மயிலைப் போன்ற பெண்ணே! தெளிந்த அறிவினையுடைய பெரியோர்கள் எப்போதும் நல்ல சொற்களையும், உண்மையையுமே பேசுவார்கள். பொய், புறங்கூறல், கடுஞ்சொல் , பயனற்ற சொற்கள் இவையெல்லாம் புல்லறிவுடைய மூடர்களின் வாயிலிருந்து வெளிவருபவையாகும்.

நூற்கேலா
வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை

- திரிகடுகம்-நல்லாதனார்.

நூல்களுக்குத் தகாத பயனற்ற சொற்களை பிறர் விரும்பினாலும் சொல்லாது ஒழிதல் கற்றறிந்தாரின் கடமையாகும்.

போதிக்கத் தெரிந்தவன் சாதிக்க மாட்டான்
சாதிக்கத் தெரிந்தவன் போதிக்க மாட்டான்.

தெளிந்த அறிவுடைய சான்றோர்கள் மறந்தும் பொருளற்ற, பயனற்ற பேச்சுகளைப் பேசித்திரியமாட்டார்கள்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 190















பால் - அறத்துப்பால்,
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 19 - புறங்கூறாமை.
குறள் - 190.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு .

விளக்கம் :- அயலாரது குற்றங்களைக் காண்பது போல் தன்னிடத்து உள்ள குற்றங்களையும் காண வல்லவராயின், நிலைபெற்ற உயிருக்கு வருவதொரு தீது உண்டோ? ஒன்றுமில்லை.

தன் குற்றங்களை உணர்ந்து தன்வரையில் ஒருவன் நல்லவனாக இருந்தாலே போதுமானது. ஆனால் அதை விடுத்து நாம் என்னவோ மகாத்மாவின் மறு அவதாரங்கள் போல் அடுத்தவர்களின் குறைகளைப் பற்றியே பேசித் திரியக்கூடாது.

உளமார ஒருவரை நல்வழிப்படுத்துவதற்காக சற்று கடிந்து பேசுதல் வேறு. ஆனால் தன்னை அதிமேதாவியாகக் காட்டிக் கொள்ள மற்றவர்களின சிறு தவறுகளைக் கூட பூதாகாரப்படுத்திக் காட்டுபவர்களும் உண்டு.

யாராக இருப்பினும் தன் குறைகளை, தான் செய்யும் குற்றங்களை உணர்ந்தாலே , பிறருடைய குறைகளை பெரிதுபடுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள்.

எல்லோரும் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கி நடப்பது என்பது அரிதான காரியம். ஆனால் முடிந்த வரையில் நம்மை நாம் சீர்தூக்கிப் பார்த்து குறைகளை நிவர்த்தி செய்து கொண்டால் அடுத்தவர் குற்றங்களைப் பற்றிப் பேசும் கீழ்மை நமக்குள் வராது.

தன் கண்ணில் தூணை வைத்துக் கொண்டு எதிரி கண்ணில் துரும்பெடுப்பார்கள் _ என்று ஒரு வழக்குண்டு.


புறங்கூறுவோர் மற்றவர்களின் குற்றங்களைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண முடியுமானால் உயிருக்குத் துன்பம் நேராது. அவ்வாறு தம் குற்றத்தை உணர்ந்தாலே, மற்றவர் குற்றங்களை எடுத்துக் கூறுவது குற்றம் என்பதை உணர்ந்து அதைக் கைவிடுவார்கள். அதனால் மனம் திருந்தி நன்மையும் அடைவார்கள்.

குற்றங்களைத் தேடிக் கண்டு பிடித்து குறை சொல்லிக் கொண்டே இருப்பதை விட சிறு நிறைகளையும் மனம் திறந்து பாராட்டிப் பாருங்கள் .எல்லாமே நிறைவாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 



வெட்டெனப் பேசேல்
_ ஆத்திசூடி - ஒளவையார்.

கத்திவெட்டைப் போல் ஒருவரோடும் கடினமாகப் பேசாதே.

குற்றம் பார்க்கின் சுற்ற மில்லை.

_ கொன்றை வேந்தன் - ஒளவையார்.

குற்றமேயில்லாதவர் ஒருவருமில்லை. ஒருவருடைய குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால் உறவாவார் ஒருவருமில்லை.

கெளவை சொல்லி னெவ்வருக்கும் பகை.
- கொன்றை வேந்தன்.

பிறர்மேல் பழிச் சொற்களை சொல்லிக் கொண்டேயிருந்தால் அவன் எல்லோருக்கும் பகையாவான்.

குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்.
_ உலகநீதி - உலகநாதர்.

ஒருவர் செய்த குற்றங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிக் கொண்டுத் திரிய வேண்டாம்.

நட்டார் புறங்கூறான் வாழ்த னனியினிதே.
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.

நட்பு செய்தவர்களை பழி சொல்லாதவனாய் வாழ்தல் இனிமை பயப்பதாகும்.

பொய்ம்மேற் கிடவாத நாவும் புறனுரையைத்
தன்மேற் படாமைத் தவிர்ப்பானும் - மெய்ம்மேல்
பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே
தணிக்கு மருந்து தலை.

- அறநெறிச்சாரம் _ முனைப்பாடியார்.

புறங்கூறுதலாகிய தீமை தன்னிடத்து நிகழாமல் காப்பவன் பொய்யை பேசாத நாவையும், மெய் பேசும் பண்புடைமையையும் பெற்றவப்போதே பிறவிப் பிணி தீர்க்கும் தலையாய மருந்தைப் பெற்றவனாவான்.

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி யெழுந்த
பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீ தாயின்
எழுநூறும் தீதாய் விடும்.

- நாலடியார் -சமண முனிவர்கள்.

சான்றோர்கள் தமக்கு ஓர் உதவியைச் செய்தவர்க்கும், அவரிடம் தோன்றிய நூறு பிழைகளையும் முன் செய்த ஒரு நன்மையைப் பாராட்டி பொறுத்துக் கொள்வர். கீழோர்க்கு, ஒருவர் எழுநூறு உதவிகளைச் செய்து, பின் அவர் செய்யும் ஒரு செயல் தீயதானால், அந்த எழுநூறு நன்மைகளை விட்டுவிட்டு ஒரு தீமையையே பெரிதாகப் பாராட்டிக் கொண்டிருப்பர்.

மற்றவர் குறைகளைச் சுட்டிக் காட்ட நாம் யார்? நமக்கென்ன தகுதி இருக்கிறது? முதலில் நாம் குற்றமில்லாமல் நடப்போம். பிறகு அடுத்தவர் குறைகளைக் காணலாம் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வந்து விட்டாலே மற்றவர்கள் குறைகளை பெரிதுபடுத்திக் கூறிக் கொண்டிருக்க மாட்டார்கள். அவ்வாறு நடந்தால் யாருக்கும் எந்த துன்பமும், மன வருத்தமும் நேராது.

ஊருக்கு நாம் 
உபதேசம் செய்வதைவிட்டு
உத்தமராய் நம்வரையில்
வாழ்ந்து காட்டுவோம்!

நாட்டுக்கு நாம்
நல்லறிவு சொல்வதைவிட்டு
நல்லவராய் நாணயமாய்
வாழ்ந்து காட்டுவோம்!

அடுத்தவரை குற்றஞ்சொல்லி 
வாழ்வதை விட்டு
அடிமனத்தின் குற்றங்களை
அகற்றிக் காட்டுவோம்!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...