Saturday, April 30, 2022

சிறுகதை

 

வெடிப்பு 


சட்டையைக் கழற்றிவிட்டு நின்றால் சாலையில் போகின்ற ஒவ்வொருவரும் நின்று பார்த்து வருந்திவிட்டுப் போவார்கள். அப்படியொரு சூம்பிப்போன உடம்புதான் இனியனுக்கு. ஆனால் அவனது நிறமும் அழகான முகமும் யாரையும் வசீகரிக்கும் வல்லமை கொண்டவை. 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய கையோடு ஜவுளிக் கடைக்கு வேலைக்கு வந்துவிட்டான். வேலையில் சேர்ந்து சில மாதங்கள் ஓடிவிட்டன. அன்று வெள்ளிக்கிழமை, காலை பத்து மணி. தூக்குச் சட்டியைத் தூக்கிக் கொண்டு இருபது அடி தொலைவிலிருக்கும் டீக்கடைக்கு விரைந்தான்.

அண்ணா… ரெண்டு பார்சல் 'டீ'ண்ணா…

டீ மாஸ்டர் வழக்கம் போல் புன்சிரிப்போடு ம்ம்ம்... என்றார்.

அண்ணா ரெண்டு பார்சல் டீ டோக்கன் குடுங்கண்ணா…

 கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்தவன் அபுதாஹிர். ‘அபு' என்றுதான் அழைப்பார்கள். வயது 28க்கு மேலிருக்கும். சாலையில் கடந்து போகும் பெண்களை, எந்த வேலைகளுக்கு இடையிலும் எழுந்து நின்று வெறித்துப் பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சோடு அமர்ந்து கொள்வான்.

'கண்கள் படைக்கப்பட்டதன் நோக்கமே பெண்களைக் காண' என்பதே அவனது சித்தாந்தத்தின் முதல் கொள்கை.

மாஸ்டர், இனியனுக்கு டீ போட்டுக் கொடுப்பதற்குள் அபு இனியனை வைத்து ஆத்திக் கொண்டிருப்பான். இது வழமையாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று.             

என்னடா இனியா... கசீனா இன்னிக்கி தலை குளிச்சிருக்கா போல. 

அபு அண்ணா… ஒனக்கு இதத் தவர வேற பேச்சே இல்லயாண்ணா… என்று கேட்ட இனியனுக்குச் சட்டென மனதில் பட்டது.

 ‘ஒத்த வீட்டு நாயி எதுக்கோ காத்த மாதிரி திரியுறவன் இவன், இவனுட்டயா வாயக் குடுத்தேன். எல்லாக் கழுசட நாய்களும் கூடிருச்சுங்க. எதையாச்சும் பேசி எம்மானத்த வாங்கப் போறான்.’ என்று நினைத்துக் கொண்டே மீதிச்சில்லறையைச் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு அந்த இடத்தைவிட்டு விலகிச்செல்ல முயன்றவனின் வலது கையை எட்டிப் பிடித்தான் அபு. 

 ‘என்னடா கூட வேலைபாக்குறவளப் பத்திச் சொன்னா…. கூடப்பெறந்தவளச் சொன்ன மாறி வெடக்கிறே… சரி இனிமேல பேசமாட்டேன். நாளையில இருந்து நீ ஒரு சுடிதாரை மாட்டிகிட்டு டீ வாங்க வந்துடு.’

 என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் கையை விட்டுவிட்டு இனியனின் மார்பைக் கிள்ளிவிட்டான். கூடியிருந்த இளவட்டக் கூட்டமெல்லாம் கொல்லென்று சிரித்தார்கள். இனியனுக்கு இது சற்றே அவமானமாக இருந்தாலும், அபுவைத் தவிர வேறு யாரும் அவனிடம் அப்படி நடந்துகொள்வதில்லை. ஒரு முறை அபுவின் நண்பர்களில் ஒருவன் இனியனிடம் கிண்டலாகப் பேசியபோது, காது கொடுத்துக் கேட்க முடியாத சொற்களில் வசை பாடிவிட்டான் அபு. சிறு வயதில் வறுமையின் காரணமாக வேலைக்கு வந்து இப்படி அலைக்கழிந்து கொண்டிருக்கும் இனியன் மீது அபுவுக்கு ஒரு பரிவு இருந்தது. அதனால் அவனிடம் உரிமையோடு விளையாடுவான். அதைச் சரியாகவே புரிந்து வைத்திருந்தான் இனியன்.

கடை வாசலில் கூடியிருந்த நண்பர்கள் என்னும் வானரக் கூட்டத்தில் ஒன்று, மெல்லக் குரல் கொடுத்தது.

டேய்... மச்சான்... அபு...

அபு விருட்டென நாற்காலியிலிருந்து எழுந்து நின்றான். ஓர் இளம்பெண் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு நடந்து சென்றாள். இந்த மதுரை மாநகரில் ஒரு யுவதி ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொள்வதொன்றும் வியப்புக்குரிய செயல் இல்லை. ஆனால் இவர்கள் பெண்களை இப்படி வைத்த கண் வாங்காமல் பார்ப்பதுதான் இனியனுக்கு வியப்பான செயலாகப்பட்டது. இனியன் தன் உள்ளத்தோடு உரையாடிக் கொண்டான்.

 அம்மாதான் அடிக்கடிச் சொல்லும் 'காணாத நாயி கஞ்சக் கண்டுச்சாம், ஓயாம ஓயாம ஊத்திக் குடிச்சுச்சாம்'ன்னு. அதுக்கு அர்த்தம் இப்போதான் வெளங்குது எனக்கு.’

‘ஆத்தாடி... நம்ம கடையில உள்ள பொம்மைகளுக்கு டிரஸ் மாத்தும் போது இவங்க வந்து பாத்தாங் கே அவ்வளவுதான். வரலாறுலயே இல்லாத சம்பவமெல்லாம் நடந்துடும்.’

சட்டென உடலை உலுப்பி விட்டுக் கொண்டான் இனியன்.

 அபுவின் டீக்கடை சாலையின் விளிம்பில் உள்ள நடை மேடையை ஒட்டியே இருந்தது.  டீப்பட்டறையை மொய்த்துக் கொண்டிருந்த இனியனின் கண்கள் ஒரு வினாடி நடைமேடையில் பறந்தது. அப்போது தற்செயலாக அவன் கண்ணில் பட்டது அக்காட்சி. அது செருப்பணியாத பித்தவெடிப்பேறிய ஒரு பெண்ணின் கால்கள். அது சாதாரண வெடிப்பாக இல்லை. பாளம் பாளமாய் வெள்ளரி வெடித்தது போல் இருந்தது. அந்த வெடிப்புகளில் கருமண் புழுதி படிந்து கருத்துக் கிடந்தது. சிவந்த அவள் நிறத்துக்கும் அவளுடைய குதிகாலுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. உள்ளபடியே சொன்னால் இனியனுக்கு சற்று அருவருப்பாய்தான் இருந்தது.

 அவள் ஆண்கள் அணியும் சட்டையும், ஒரு பூப்போட்டப் பாவாடையும் அணிந்திருந்தாள். இரண்டுமே அழுக்கேறிய சந்தன நிறத்தில் இருந்தன. அவள் டீக்கடைக்கு அடுத்து இருக்கும் தண்ணீர் டேங்கில் குடிதண்ணீர் பிடிப்பதற்காகக் குடத்துடன் சென்றாள். தண்ணீர் சிந்தி பாவாடையின் கரை நனைந்து, மண்ணில் பட்டு அழுக்காகும் என்பதால் பாவாடையைச் சற்றே ஏற்றிச் செருகிக்கொண்டு நடந்தாள்.

 அவள் ஓங்குதாங்கான உயரமும் இல்லை, உருவமும் இல்லை. இனியனுக்கு அவளின் முகத்தைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. ஒரு நிமிடத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும், இடுப்பில் குடத்துடன் அவள் திரும்பி வந்தாள். இனியனின் கண்கள் அகல விரிந்தன. இந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த 7G ரெயின்போ காலனி படத்தில் பார்த்த அந்தக் கதாநாயகியின் முக அமைப்பு அப்படியே அவளுக்குப் பொருந்தி இருந்தது. ஆனால் அவள் முகத்தில் எந்தவொரு உணர்வும் இல்லை. ஏதோ… இந்த உலகத்தில் தான் மட்டுமே இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்தது அவளது முகம். ஓர் ஒப்புக்குக் கூட அவள் கண்களில் கருவிழிகள் இங்கும் அங்கும் அசையவில்லை.

 இனியனுக்கு அபுவையும் அபுவின் நண்பர்களையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

 ‘இவங்கே கம்பத்துக்குச் சேலையக் கட்டிவச்சாலே கெளப்பிப் பாப்பாங்கே. இப்போ கட வாசல்லையே ஒரு பொண்ணு போகுது.....’

 பட்டெனத் திரும்பி அபுவையும் அபுவின் நண்பர்களையும் பார்த்தான். இனியனுக்கு, தான் காணும் காட்சியை நம்ப முடியவில்லை. அபு கல்லாவில் அமர்ந்திருந்தான். அவன் நண்பர்கள் அனைவரும் சாலைக்கு முதுகு காட்டி கடையைப் பார்த்தவாறு நின்றிருந்தனர். இனியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

மாஸ்டர் அண்ணா… லேட்டாகுதுண்ணா.... பார்சல போடுண்ணா...

 கடைக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டம் கூடிவிட்டது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த மாஸ்டருக்கு இனியனின் குரல் காதுக்கு எட்டவில்லை.

 ரெயின்போ காலனி அடுத்த குடத்துடன் நடந்து வந்தாள். இனியன், சட்டெனத் திரும்பி அபுவையும் அபுவின் நண்பர்களையும் பார்த்தான். முன்பிருந்த அதே நிலை. அவள் குடத்தில் நீரோடு மீண்டும் வந்தாள். டக்கெனத் திரும்பி அபுவையும் அபுவின் நண்பர்களையும் பார்த்தான். மீண்டும் முன்பிருந்த அதே நிலை.

 அபுவும் அபுவின் நண்பர்களும், அவள் போனதற்குப் பின் திரும்பி சாலையில் கண்களை மேய விட்டார்கள். இனியன் மண்டையை அழுத்திச் சொறிந்தான்.

‘இவங்கெ, திருந்திட்டோம்முனு சொன்னா தெய்வமே நம்பாது.’

‘ஐயோ….  இதக் கேக்காம விட்டா நம்ம மண்ட வெடிச்சிருமே! கேட்டுப்பாப்போம்.’

அபுவின் அருகில் சென்ற இனியன். தான் பார்த்த எல்லாவற்றையும் சொல்லி, ‘அண்ணா... நாங்க எல்லாந் திருந்திட்டோம்ன்னு மட்டும் சொல்லிராதண்ணா. நான் நெஞ்சி வெடிச்சு செத்துப் போயிருவேன்.’ என்று சொல்லிவிட்டு தூக்குப் போட்டுத் தொங்குவது போல நடித்துக் காட்டினான்.

 இனியன் பேசியது அபுவுக்கு மட்டுமில்லாமல் அவன் நண்பர்கள் பலரின் காதிலும் விழுந்துவிட்டது. ஒரே நேரத்தில் எல்லோரும் கைகொட்டிச் சிரித்தார்கள். இனியனும் சேர்த்து சிரித்தான்.

 சில வினாடிகளுக்குப் பிறகு அபு பேசத் துவங்கினான். தத்துவம், வித்தகம், தாண்டியலங்காரமெல்லாம் கற்றப் பெரும் பாவலனைப் போல உவமையோடு சொற்கள் வந்து விழுந்தன.

டேய் இனியா... நல்லாக்கேளு...

 'எச்சிச் சோத்தத் தின்டுறலாம் ஆனா பன்னி தின்ட சோத்தத் திங்க முடியுமா?' என்றான்.

 அது வன்மத்தில் வார்த்தெடுத்த வினா. இனியனுக்குக் குமட்டுவது போல் இருந்தது. ஏன் இவனிடம் வந்து பேசினோம் என்பது போல இருந்தது இனியனின் முகக்குறிப்பு. அபு மறு கேள்வியைக் கேட்டான்.

 ‘டேய்… ஒனக்கு என்னோட ஃபிரெண்டு ராஜாவத் தெரியுமா?’ என்றான்.

 ‘ம்ம்ம்.. தெரியுமே… மூஞ்சி, கை, காலு எல்லாம் அம்மத் தழும்பா இருக்குமே அவருதானே’ என்றான் இனியன்.

 ‘ஆமா... அந்த மலமாடுதான்.’ என்று கூறிய அபு சுருக்கமாக ஒரு கதை சொல்லத் துவங்கினான். தொடக்கத்திலேயே தெரிந்து போனது ரெயின்போ காலனியின் பெயர் ‘பிரியதர்ஷினி’ என்ற ‘பிரியா.’

 தாய்தந்தையை இழந்த பிரியா, தன் பாட்டியுடன் தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். பாட்டி அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவள். நோய் உடம்பைத் தின்று கொண்டிருந்தது. அவள் மதுரைக்கு வந்து வேலை செய்யத் துவங்கிய காலத்திலிருந்து இப்போது வரை அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் முதல் தளத்தில்தான் குடியிருக்கிறாள். மற்றபிள்ளைகள் அனுப்பும் பணமும், தன்னுடைய ஓய்வூதியமும் தனக்கும் பேத்திக்கும் போதுமானதாக இருந்தது.

 பிரியா கல்லூரி முதல் ஆண்டு சேர்ந்த போதுதான் ராஜாவுடன் காதல் மலர்ந்தது. ராஜாவைப் பார்க்கும் யாரும் அவன் அருகில் சென்று பேசவே அருவருப்புப் படுவார்கள். ஆனால் பிரியா அவன் உருவத்தைப் பெரும் பொருட்டாகக் கருதவில்லை. அவள் அவனது உண்மையான காதலை மட்டுமே விரும்பினாள். மதுரையில் அவர்கள் கால் படாத திரையரங்குகளோ, கோயில்களோ, பூங்காக்களோ இல்லை. காதலில், உரிமைகள் எல்லைமீறிய சில சமயங்களில் தன் உடலையும் அவனோடு பரிமாறிக் கொண்டாள். சில காலங்களுக்குப் பிறகே பிரியா அவளுக்கு விளங்கியது, ராஜா தன் மீது கொண்டது காதல் அன்று, அது வெறும் உடல் இன்பம் சார்ந்த வேட்கைதான் என்று. அப்போதிலிருந்து ராஜாவிடமிருந்து பிரியா தன்னை விலக்கிக் கொள்ள முயன்றாள். இதை விளங்கிக்கொண்ட ராஜா அவளை மிரட்டத் துவங்கினான். அந்த நேரத்தில்தான் தமிழ்நாட்டில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்புள்ள கைபேசிகள் சிறிது சிறிதாகப் பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருந்தன. ராஜாவின் கையிலும் அப்படிப்பட்ட ஒரு கைபேசி இருந்தது. அதில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஏராளம் இருந்தன. அதனைச் சமூக வலைதளங்களில் பரப்புவேன் என மிரட்டி, தான் சொன்ன இடத்துக்கு வரவழைத்து அவளைப் பயன்படுத்தத் துவங்கினான். அதுமட்டுமல்லாமல் தன் நண்பர்களையும் ஏவிவிட்டு அவளைத் துன்புறுத்தினான். இதில் உச்சகட்டக் கொடுமையும் உண்டு. நண்பரகள் அனைவரும் இரவில் கூட்டம் சேர்ந்து குடித்துவிட்டு அவளது வீட்டுக்கே சென்றுவிடுவார்கள். கதவைத் திறக்கவில்லை என்றால், ‘இவள்தான் எங்களை விபச்சாரத்துக்கு அழைத்தாள்’ என்று வீதியில் நின்று கூச்சல் போடுவோம் என்று மிரட்டினார்கள். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடைக்கும் அவள் பாட்டியைக் கயிற்றால் கட்டிவைத்துவிட்டு பாட்டியின் கண்முன்னேயே பேத்தியுடன் உறவு கொள்வார்கள்.

 சில மாதங்களுக்குப் பிறகு அந்த இளைஞர்களுக்கு அவளோடு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையே விட்டுப்போனது. அதற்குக் காரணம் கணக்கில்லாத ஆடவர்களால் அவள் கந்தலாக்கப்பட்டுவிட்டாள். இனி அவளோடு உறவு வைத்துக் கொண்டால் நோய் வந்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். எப்படியோ அவள் அந்த மிருகங்களிடமிருந்தது தப்பிவிட்டாள். ஆனால் அவளைப் பார்த்தால் பீயைப் பார்த்ததைப் போலக் காறி உமிழும் ஆடவர்களின் தூசனப் பார்வையை எதிர்கொண்டு வாழ்வது, நரகத்தினும் கொடியதாய் இருந்தது அவளுக்கு. எனவேதான் அவள் ஒரு நல்ல ஆடைகூட அணிவதில்லை. தன்னை அலங்காரப்படுத்திக் கொள்வதில்லை. தன் உடலைக்கூட பேணிக் கொள்வதில்லை. இந்த அவமானக் கறையை அலசித் துவைத்து விட முடியாது என்பதை அவள் நன்கு அறிவாள். ஆனால் தன்னை வளர்த்த அந்தக் கிழவியை விட்டுவிட்டுச் சாக அவளுக்கு மனமில்லை. ஆதலால் இந்த உடல் கூட்டில் உயிரைச் சுமந்து கொண்டு  உலவித் திரிகிறாள்.

 இக்கதையை எல்லாம் இனியனிடம் சொல்லி முடித்தான் அபு. ஆனால் இதில் பிரியா ஒரு வேசியைப் போன்றும், தன் நண்பர்கள் அனைவரும் ஒரு சூழ்நிலைக் கைதிகளைப் போன்றும் சித்தரித்தது அவனது சொற்கள். தொடர்ந்து அபு பேசத் துவங்கினான்.

 'இப்ப புரியுதா? இவள எதுக்குப் பன்னி தின்ட சோறுன்னு சொன்னேன்னு.' என்று கூறிவிட்டு ஒரு ஏளனச்சிரிப்பை உதிர்த்தான். சிரிப்பில் கூட இழிவுகளைப் படம்பிடிக்க முடியும் என்பதை அப்போதுதான் உணர்ந்தான் இனியன்.

'டேய் தம்பி டீ ரெடிடா...'

 மாஸ்டரின் குரல் உரக்க ஒலித்தது. இனியனுக்கு, அபுவையும் அவன் நண்பர்களையும் பார்க்கும் பொழுது; தன் உடலெல்லாம் சாக்கடைப் புழுக்கள் நெளிவது போன்ற ஓர் உணர்வு உருவானது. தூக்குச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சாலையில் நடந்தான்.

 பிரியாவின் கால்களில் இருந்த வெடிப்புகள் இப்போது இனியனின் இதயத்தில் இருந்தது

கையில் இருந்தத் தூக்குச்சட்டி, தன்னைத் தரை நோக்கி இழுப்பதாக உணர்ந்துதான். இனியனின் இதயத்தில் எண்ணற்ற வினாக்கள் எழுந்துகொண்டே இருந்தன.

 வள்ளுவத்தின் காமத்துப்பாலைக் கூட நம் பள்ளிக்கூடத்தில் இன்பத்துப்பால் என்று தானே படிப்பித்தார்கள். காமம் இன்பமென்றால் அதில் ஈடுபடும் இருவருக்கும் அது இன்பம் தரத்தானே வேண்டும். ஒருவரைத் துன்பப்படுத்தி ஒருவர் இன்பம் அனுபவிக்க முடியுமா?

அப்படி அனுபவிக்கத் துடித்தால் அந்த உணர்வுக்கு என்ன பெயர்?

காமம் என்பது வெறும் உறுப்பு சார்ந்த விடயம்தானா? இதில் உள்ளத்துக்கு இடமில்லையா?

காமம் வந்துவிட்டால் மானுட மாண்புகளெல்லாம் மரித்துப் போய்விடுமா?

பெண்கள், ஆண்களின் காமத்தைத் தணிக்க மட்டுமே உதவும் இயந்திரங்களா?

பலரால் பயன்படுத்தப் பட்டவள் ‘வேசி’ என்றால் பயன்படுத்தியவனுக்குப் பெயரொன்றும் கிடையாதா?

வாழ்வில் வழுக்கி விழுந்த ஒருத்தியை அவமானச் சின்னமாக அடையாளப் படுத்தும் இச்சமூகம், அதற்குக் காரணமான ஆண்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவது சரியா?

நடப்பது ஒரு செயல். ஆனால் அவமானம் பெண்ணுக்கு மட்டும். அதன் நிழல் கூட ஆண்களின் மீது விழுவதில்லையே! இப்பாகுபாடு ஆண்டவன் தந்ததா? ஆண்கள் தயாரித்ததா?  

இவளைப் போல இன்னும் எத்தனைப் பிரியாக்கள் இந்த உலகத்தில் இருப்பார்கள்?         

நான் இன்னும் பெரியவனானால் எனக்கும் இது போன்ற எண்ணங்கள் வந்துவிடுமா?

இனியவனின் இதயம் எழுப்பும் எண்ணாயிரம் வினாக்களுக்கு எண்ணற்ற விடைகள் கொடுக்கப்படலாம். 

ஆனால் விடைகளை உருவாக்கும் வித்தாரக் கள்வர்கள், வினாக்கள் உருவாகாமல் இருக்க வழிவகை செய்வார்களா?

 வினாக்களின் வீரியத்தால் இனியனுக்கு நெஞ்சம் குமைந்தது. தன்னையறியாமல் கண்களில் நீர் நிறைந்தது. நெஞ்சம் கனத்தவனாய், தான் வேலை செய்யும் ஜவுளிக் கடைக்குள் காலெடுத்து வைத்தான். அந்த ஜவுளிக்கடையில் வேலை செய்யும் பன்னிரெண்டு பேரில் இனியனையும், கணக்காளரையும் தவிர மற்ற பத்துபேரும் திருமணமாகாத இளம் பெண்கள்.

 சுடிதார் செக்சனில் நின்றிருந்த ஈஸ்வரி கீச்சுக் குரலில் அன்போடு கேட்டாள்.

 ‘என்னடா தம்பி கடையில கூட்டமா... நீ போய் ரொம்ப நேரமாச்சேடா...’ என்றாள்.

இனியன், அந்த பத்து பெண்களையும் பரிதாபமாகப் பார்த்தான். அவன் நடை தள்ளாடியது. எப்போதும் இல்லாத ஒரு பாவனை அவனிடம் இருப்பதைப் பார்த்த அப்பெண்கள் அனைவரும், அவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்தார்கள். தூக்குச்சட்டியை மேசையின் மீது வைத்த இனியன் ‘அக்கா....’ என்று பெருங்குரலெடுத்து தரையில் விழுந்து அழுதான். இருபது கைகள் அவனைத் தொட்டுத் தடவித் தேற்றியது. காரணம் ஏதும் அறியாமலே அந்த இருபது விழிகளும் கண்ணீரில் கரைந்தன. கடையின் இண்டு இடுக்கெல்லாம் விசும்பல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது…  


 

இது போன்ற சமூக அவலங்கள் முற்றுப்பெறட்டும்.

முற்றும்.

 

நன்றிகளுடன் _ குறிஞ்சிக் கொற்றவன்.

   


8 comments:

  1. சொல்ல வார்த்தைகள் இல்லை.வலியின் உச்சம்...என்று தணியும் இச்சமூக அவலம்.....வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பணி சிறக்க....நன்றி...

    ReplyDelete
  2. சிறுகதையாக படித்தாலும்... எங்கோ ஓரிடத்தில் நடக்கின்றது இந்த அவலங்கள் அதை சித்திரம் பிடித்து காட்டியது போல் இருந்தது.. பிரியாவின் மனதின் வலியினை அவள் குதிகால் வெடிப்பில் ஏற்பட்டு யிருக்கும் ரணங்கள் சொல்கின்றன...... இந்த நிலை என்றும் மாறும் பெண்களுக்கு... எதிர்நோக்கி..... வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளத்துடன்

    ReplyDelete
  3. மிக அருமையான படைப்பு, இறுதியில் கண் கலங்கியது 🙏🙏🙏 வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  4. பிரியாவின் வாழ்வின் போராட்டம் நெஞ்சத்தை பிழிந்தது. மிகவும் அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...